Tuesday 2 September 2014

கிளி ஜோசியம்

இந்தியாவில் இனி சில நாட்கள் - 7

சென்றமுறை இந்தியா வந்தபோது கிளி ஜோசியம் பார்க்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி சுற்றி வந்தும் ஒரு கிளி ஜோசியரும் தென்படவில்லை. இம்முறையாவது கிளி ஜோசியம் பார்த்திட வேண்டுமென மதுரை வந்தோம்.

அதிசயமாக ஒரு கிளி ஜோதிடர் அமர்ந்து இருந்தார். ஆள் பார்க்க தாடி வைத்து, குங்கும பொட்டு இட்டு நன்றாக இருந்தார். இருபது ரூபாய் என வணிகம் பேசினார். எனக்குத் தெரிந்து நான் கிளி ஜோதிடம் பார்தது வருடங்கள் பல உருண்டோடி விட்டது. நெல்மணி போட கிளி வந்து ஒவ்வொரு சீட்டாக எடுத்துப் போட்டுவிட்டு ஒரு சீட்டு எடுத்துத்தரும். அதை வைத்து நிறைய விசயங்கள் முன்னர் சொல்லும் வழக்கம் உண்டு. இருபது வருடங்கள் முன்னர்
 நடந்தது இப்போது அப்படியே இருக்குமென எண்ணி அமர்ந்தேன்.

பெயர் சொன்னேன். பெயர் சொன்னதும் கிளி வந்தது. ஒரே சீட்டு எடுத்துக்கொடுத்துவிட்டுப் போனது. பார்த்தால் வெங்கடாசலபதி. இரண்டே வாக்கியங்கள் சொல்லிவிட்டு ஒரு சீட்டு எடுத்துத் தாருங்கள் என என்னை கிளி ஆக்கினார். ராமர், சீதை, லட்சுமணர் பட்டாபிஷேக படம். இரு வாக்கியங்கள் சொல்லி முடித்தார். இப்படியாக ஐந்து பேர் பார்த்தோம். கிளி ஒரு சீட்டு. இரண்டு வாக்கிய பலன். அவரவர் ஒரு சீட்டு, இரண்டு வாக்கிய பலன்கள். நூறு ரூபாய் காணிக்கை வைங்க கை ரேகை பார்க்கலாம் என்றார். நான் கை காட்டி அமர்ந்தவுடன் சில வரிகள் சொன்னார். இருபது ரூபாய்
 மட்டுமே வைக்க கையை மூடுங்க, ஒரு விரல் காட்டுங்க என்றார். ஆள்காட்டி விரல் காட்டினேன். இரு வாக்கியங்கள் சொல்லி முடித்தார். கிளி ஜோதிடம் முதல் அவர் சொன்ன விசயங்களில் சில தவறுகள் இருந்தன. சுட்டிக்காட்ட மனமின்றி எனது மொபைலில் முக அட்டைப்படமாக இருந்த வெங்கடாசலபதி படத்தை காட்டி எனது விபரம் சொல்லி நகர்ந்தேன். கை எடுத்து வணங்கினார்.

அடுத்த தெருவில் ஐந்து கிளி ஜோதிடர்கள் வரிசையாக அமர்ந்து இருந்தார்கள். குறி பார்க்கும் பெண் ஒருவர். வாங்க யோகமான முகம், தெய்வாம்சம்
என்றே அந்த பெண் சொன்னார்கள். எல்லோரையும் கடந்து போகும் போது அடுத்தவர்களின் வாழ்க்கை குறித்து சொல்லும் தகுதி உள்ளவர்களாக பிறர் இவர்களை நினைக்க, தங்களை அவர்கள் நினைக்க எனக்கோ இவர்களது வாழ்க்கை குறித்து இப்படி வாழ்க்கையை முடக்கிக் கொண்டார்களே எனும் எண்ணம் மட்டும் சுற்றி சுற்றி வந்தது.

(தொடரும்)

Wednesday 27 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 6

சிறிது நேர காத்திருப்புக்கு பின்னர் tablet device தந்தார்கள். மன நிம்மதியாக இருந்தது. நேராக அகநாழிகை புத்தக அங்காடிக்கு சென்று பொன்.வாசுதேவன் அவர்களை சந்தித்தேன். பல புத்தகங்கள் தந்தார். ஒரு வாரத்திற்குள் நுனிப்புல் பாகம் 2 அச்சில் ஏற்றப்பட்டு வந்து இருந்தது.

சிறப்பாக இருந்தது. சிறிது நேரம் அவருடன் உரையாடிவிட்டு கிளம்பினேன். மாலை 4.15 மணிக்கு விமானம். உறவினர் ஒருவர் வீடு செல்லும் முன்னர் வெகு நேரம் ஆனது. பழக்கப்பட்ட சென்னை. பழகிப்போன சென்னை. விமானத்தை தவற விட்டு விடுவோம் எனும் அச்சம் வேறு. சென்னை சாலையில் செல்லும் வாகனங்கள் இன்னமும் வியப்பூட்டுகின்றன. எத்தனை லாவகம். சரியான நேரத்தில் விமான நிலையம் வந்தோம். இந்தியா போன்ற ஒரு சிறப்பான நாடு நான் இதுவரை கண்டதே இல்லை. வசதிகள் அற்றபோதும் வாழ்ந்து காட்டிய எனது முப்பாட்டனார் எனக்கு தெய்வங்கள் தான். நாடு விட்டு நாடு போனாலும் நாட்டின் குடியுரிமையை மாற்றினாலும் ஊரின் மண் எப்போதும் மகிழ்ச்சி தரும் அதோடு மழையும் வரும். மழை வந்தது.

ஊழல், இத்யாதிகள் என குறைகள் சொல்லி சலித்துப் போகும் மக்கள் வாழும் பூமி. இங்கே இருக்கும் ஒருவித நிம்மதி பிறந்தபோது வந்தது. உறவுகள் ஒதுங்கிக் கொண்டார்கள் என்பதற்கு நானும் காரணம். இதோ என் எண், அழையுங்கள் என உங்களுக்கு தந்தது இல்லை. புத்தக வெளியீடு இம்முறை செப்டம்பர் 6 அன்று நடைபெற இருக்கிறது. அகநாழிகை வாசு அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்

ஒரு வாரம் மட்டுமே எனது ஊரில் இருந்தேன். சந்தித்தவரை நன்றாக பேசிய மக்கள். மன கஷ்டங்கள் இருக்கும். மன கஷ்டமாகவும் இருக்கும். எடுத்துக்கொண்ட வாழ்க்கை முறை அப்படி. இந்தியா என் தேசம்

(தொடரும்)

Tuesday 26 August 2014

இந்தியாவில் இனி சில நாட்கள் - 5

கோவில், உறவினர் அடுத்த நாள் பார்க்கலாம் என அன்று Sentosa Island போக முடிவு செய்தோம். முதலில் இங்குதான் ஹோட்டல் பார்த்தோம், பின்னர் எதற்கு என மனம் மாறி சிங்கப்பூரில் தங்க முடிவு செய்தோம்.

ஹோட்டலில் இருந்து அரை மணி நேரத்தில் அந்த தீவு அடைந்தோம். மிகவும் அருமையான தீவு. பல இடங்கள் சுற்றிப் பார்த்து மகிழும் வண்ணம் அமைந்து இருந்தது. சிங்கப்பூர் பெயர்க்காரணம் அறிந்து கொண்டேன். சிங்கம் ஒன்று அந்த தீவில் இருந்து சிங்கப்பூரை கண்காணித்து பாதுகாப்பதாக ஒரு கதை உண்டு. வீராச்சாமி என்பவர் பெயர் கூட அந்த கதையில் உண்டு. வீராச்சாமி சாலை ஒன்று சிங்கப்பூரில் உண்டு. சிங்கப்பூரா என்றே முன்னர் அழைக்கப்பட்டது என்பது அந்த நாட்டு வரலாறு. சிங்கப்பூர் தான் சிங்கப்பூரின் தலைநகரம். சிங்கம் ஒன்றின் வடிவமைப்பு. சிங்கத்தின் தலை மீன் உடல் கொண்ட உருவம் அது. மீன் அவதாரம், சிங்க அவதாரம். இது குறித்து நிறையப் படித்து பின்னர் எழுதலாம் என விட்டுவிடுகிறேன்.

அங்கிருந்து ஹோட்டல் வந்தோம். சென்னையில் இருந்து பதில் இல்லை. இரவு night safari சென்றோம். அரை மணி நேரம் tram வண்டியில் சுற்றி காண்பித்தார்கள். பல விலங்குகள். ஒரு யானை வணக்கம் காட்டி வரவேற்றது. சிங்கப்பூர் மற்றும் Sentosa தீவுக்கு ஒரு cable car இணைப்பு உண்டு. மலைகள் மரங்கள் என பார்த்த போது அத்தனை பேரின்பமாக இருந்தது. அங்கேயும் விலங்குகள் இருக்கக்கூடும்.

இரவு ஒரு மணிக்கு ஹோட்டல் வந்தோம். சென்னை ஹோட்டலில் இருந்து மின்னஞ்சல் வந்து இருந்தது. Please collect your tablet device by showing your identity when you return from Singapore on Saturday morning என இருந்தது. உலகில் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருட்டு என்பது தனது தேவைக்காக செய்யப்படுவது. தனது தேவை இருந்தும் திருடாமல் வாழ்வது ஒழுக்க நெறிமுறை எனப்படுகிறது. அடுத்த நாள் கோவில் சுற்றினோம். முருகன் கோவில்கள். மாலை Chinatown நடந்தே சுற்றினோம். சிங்கப்பூர் அற்புதமான நாடு/நகரம். மிகவும் பிடித்து இருந்தது. அன்று இரவு உறவினர்கள் பார்க்க சென்றோம். 45 வருடத்தின் முந்தைய வாழ்க்கை வரலாறு பேசிக் கொண்டார்கள். சிங்கப்பூர் முற்றிலும் மாறிப்போனது, எதுவும் கண்டுபிடிக்க இயலவில்லை என்பதே பேச்சு. உறவினர்கள்களை பார்த்து முடித்தபோது இரவு ஒரு மணி. மற்றொரு உறவினர் வீட்டுக்கு செல்ல இயலவில்லை. அங்கிருந்து marina bay செல்லலாம் என காரை ஓட்டிட சுற்றி சுற்றி வந்தது. வழிகாட்டி எல்லா நேரமும் வழிகாட்டாது என ஹோட்டல் வந்தோம். இரவு மூன்று மணி. மொத்த சிங்கப்பூரை காரில் சுற்றி விட்டோம்.

எங்கு ஹோட்டல் எடுக்க நினைத்தோமோ அங்கேதான் உறவினர்கள் எனது மாமனார் மாமியார் இருந்த இடம் இருந்தது. மத்திய நகரத்தை விட்டு தள்ளி இருக்கிறது என நினைத்து அங்கே தங்கவில்லை. கொஞ்ச நேரத்தில் மலேசியா சென்று விடலாம் என்பது போல் இருந்தது. அடுத்த நாள் marina bayவுக்கு வழிகாட்டியை நம்பாமல் வழி பார்த்து சென்றேன். பிரமாண்டம். மூன்று wheel chair எடுத்துக்கொண்டு பெற்றவர்களுக்கு சுற்றிக்காட்டினோம். உலகில் ஆச்சரியங்கள் நிறையவே உண்டு. தாவரங்கள் உலகின் பேரதிசயங்கள்.

இருபது நிமிடங்களில் விமான நிலையம் வந்து அடைந்தோம். மனதில் சிங்கப்பூர் நிறையவே நிறைந்து போனது. கார் தந்தவர் காரில் எல்லாம் சரியாக இருக்கிறது என பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் கிளம்பினார். திருப்திகரமான பயணம் முடிவுக்கு வந்தது. மீண்டும் செல்ல வேண்டும் எனும் ஆவல் தந்த நாடு அது.

சென்னையில் வந்து இறங்கினோம். இரவு 11 மணி. சிங்கப்பூரில்  எளிதாக இடம் கண்டுபிடிக்க முடிந்தது. செல்லும் நாடுகளில் இந்தியா ஒன்று மட்டுமே நான் வாகனம் ஓட்டாத நாடாக இருக்கப்போகிறது. அந்த இரவில் தட்டுத்தடுமாறி ஹோட்டல் வந்தோம். அடுத்த நாள் காலை tablet device தொலைத்த ஹோட்டல் சென்றோம். காத்திருக்கச் சொன்னார்கள்

( தொடரும்)