Wednesday, 28 November 2012

கடவுள் எதற்கு வேறுவிதமாக நினைக்கிறார்?

பக்தா என்ற குரல் கேட்டதும் எனக்கு பயமாகவே போய்விட்டது. இத்தனை நாட்கள் நிம்மதி இன்று தொலைந்து போய்விடுமோ என்ற அச்சத்தில் தூக்கத்தை கலைத்து வீட்டின் ஜன்னல் கதவின் வழியாக பார்த்தேன். அங்கு சாமியார் நின்று கொண்டிருந்தார். வீட்டினை திறப்பதா வேண்டாமா என மிகவும் யோசித்தேன். மீண்டும் பக்தா நான் தான் சாமியார் வந்து இருக்கிறேன் என்றார்.

நான் கதவினை திறக்காமல் பேசாமல் சென்று படுத்து விட்டேன். இருந்தாலும் மனம் திக் திக் என அடித்து கொண்டிருந்தது. அப்பொழுது வீட்டின் கதவு திறந்து கொண்ட சப்தம் எனது பயத்தை மிகவும் அதிகமாக்கியது. மெதுவாக வீட்டின் வாசற்புறம் திரும்பி பார்த்தேன். ஆமாம், வீட்டின் கதவு திறந்து சாமியார் உள்ளே வந்து கொண்டிருந்தார். இந்த அம்மாவும், அப்பாவும் இந்த நேரத்தில் எங்கு தான் போய்த் தொலைந்தார்கள் என மனம் வெகுவேகமாக அடிக்கத் தொடங்கியது.

என்னிடம் மந்திர சக்தி இருப்பதை மறந்து விட்டாயா பக்தா என்றார் சாமியார். நான் அப்பொழுதுதான் தூங்கி எழுந்தவன் போல அடடே சாமியாரா, வாருங்கள் நான் நன்றாக தூங்கிவிட்டேன் அதனால் தான் நீங்கள் வந்தது கூட தெரியாமல் போய்விட்டது என்றேன். நான் கதவை சரியாக பூட்டித் தொலைக்கவில்லை என நினைத்துக் கொண்டேன். நான் சாமானியன், பொய் பேசலாம், ஆனால் சாமியார் எதோ மந்திர சக்தி மூலம் கதவை திறந்ததாக பொய் சொல்கிறாரே என மனதில் கோபம் வந்தது.

இந்த மதிய வேளையில் கூட உனக்குத் தூக்கம் வருமா? என்றார் சாமியார். தலைவலி சற்று அதிகமாக இருந்தது, அதுதான் தூங்கிவிட்டேன் என பொய் சொன்னேன். சரி சென்று முகம் அலம்பி கொண்டு வா, நாம் ஒரு இடம் போகலாம் என்றார். எனக்கு எரிச்சலாக போய்விட்டது. நன்றாக தூங்கி கொண்டு இருந்தானை எதற்கு இந்த ஆள் வம்பு செய்கிறார் என நொந்து கொண்டேன். எனக்கு தலைவலி மிகவும் அதிகமாக இருக்கிறது அதனால் நான் எங்கும் வர இயலாது என மீண்டும் ஒரு பொய் சொன்னேன்.

சாமி, நீங்கள் தான் மந்திர சக்தியால் கதவை திறந்து கொண்டு வந்தீர்கள் அல்லவா, அது போல எனது தலைவலியை மந்திர சக்தியால் போக்கிவிடுங்களேன் என சொன்னேன். இருக்கிற தலைவலியை போக்கலாம், ஆனால் இல்லாத தலைவலியை எப்படி போக்குவது? அது எந்த மந்திர சக்திக்கும் கட்டுக்கு அடங்காதே என்றார் சாமியார். எனக்குள் இருந்த பயம் அதிகமானது. நான் பொய் சொன்னது எல்லாம் இவருக்கு தெரிந்து இருக்குமோ என அச்சம் என்னை வாட்டியது. ஆனால் அவர் பொய் தானே சொல்லி இருக்கிறார் என எனது தலையணையை நகற்றிய போது வீட்டு கதவின் சாவி எனது கைக்கு அகப்பட்டது. சாமியார் எதோ மந்திர சக்தியால் தான் கதவை திறந்து இருக்கிறார் என முடிவுக்கு வந்த வேளையில் நிறையவே யோசிக்கிறாய் என்றார் சாமியார். உடனே கிளம்பு வா போகலாம் என்றார்.

எனக்கு வர விருப்பம் இல்லை என்றேன். அதைக்  கேட்டதும் சாமியார் சிரித்த சிரிப்பு என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உனது விருப்பத்தின் பேரிலா வாழ்க்கை நடக்கிறது என்றார் சாமியார். எனக்கு ஒரு நிமிடம் மயக்கமே வந்து விடும் போலிருந்தது. ஆமாம் எனது விருப்பத்தின் பேரிலா வாழ்க்கை நடக்கிறது, இந்த கேடு கெட்ட சாமியாரை நான் பார்க்கவே வேண்டாம் என நினைத்தாலும் வந்து தொலைத்து விடுகிறார். அதோடு மட்டுமில்லாமல் என்னை எங்கோ எனது விருப்பத்திற்கு மாறாக அழைத்து செல்வேன் என துடி துடிக்கிறார். வேறு வழியின்றி நான் கிளம்பத் தயாரானேன்.

வீட்டுக்கு வந்தவருக்கு எதுவும் தர வேண்டும் என தோணவில்லையா என்றார் சாமியார். கடவுளே இந்த சாமியாரை நீ கொன்று விட மாட்டாயா என நினைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வந்தேன். இவர் கெட்ட கேட்டுக்கு பழச்சாறா தர முடியும் என நினைத்தேன். சாமியார் சிரித்துக் கொண்டே எனது உடலில் எழுபத்தி ஐந்து சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது. பரவாயில்லை குடிக்கிறேன் என வாங்கி கொண்டார்.

சாமியாருடன் நானும் கிளம்பினேன். நீ எதையாவது செய்ய வேண்டும் என நினைத்து அதை செய்து முடித்து இருக்கிறாயா என்றார் சாமியார். ஆமாம் செய்து முடித்து இருக்கிறேன் என்றேன். சாமியார் சிரித்து கொண்டே பொய் சொல்ல வேண்டும் என நினைத்து அதை செய்துதான் முடித்து கொண்டு இருக்கிறாய் என்றார். எனக்கு ஒரு மாதிரியாக போய்விட்டது. இவருக்கு எல்லாமே தெரிந்து இருக்கிறதே என நினைத்து சாமியாரிடம் நீங்கள் இந்த உலகத்தை சீரானதாக மாற்ற நினைக்கலாமே என்றேன். நான் நினைத்து என்ன செய்ய, அந்த கடவுள் நினைக்க வேண்டுமே என்றார் சாமியார். ஆமாம் சாமி, அந்த கடவுள் எதற்கு வேறுவிதமாக நினைக்கிறார்? என்றேன்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்றார் சாமியார். எனக்குள் இருந்த பயம் நீங்கி கோபம் கொப்பளித்தது. நல்லதை செய்ய நாம் நினைத்தால் அதை தீயதில் சென்று முடிக்கும் கடவுள் என்ன கடவுள் என்றேன். நல்ல கடவுள் என்றார் சாமியார். எனக்கு இதனால் தான் இவரை பார்க்கவே பிடிப்பது இல்லை. எதற்கு எடுத்தாலும் கடவுளுக்கு வக்காலத்து வாங்குவார். எங்கோ என்னை அழைத்து கொண்டு வந்துவிட்டார் போல என நினைத்தேன். அதற்குள், நாம் வர வேண்டிய இடம் வந்துவிட்டது என்றார் சாமியார்.

அந்த இடத்தில் எதுவுமே இல்லை. மரம், செடி கொடிகள் என எதுவுமே இல்லை. மெல்லிய காற்று மட்டுமே வீசிக் கொண்டு இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதோ இப்படிப்பட்ட இடத்தில் இருந்துதான் மரங்கள், செடிகள், மனிதர்கள், பூச்சிகள், புழுக்கள் என எல்லாமே உருவானது என்றார் சாமியார். சாமி இவைகள் எல்லாம் இறைவனால் படைக்கப்படவில்லையா? என்றேன்.

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என சாமியார் சொல்லிக் கொண்டே நான் சொல்ல வந்தது உனக்கு புரிந்து இருக்கும் என சொல்லி மறைந்து போன சமயம் பார்த்து நல்ல நாள் அதுவுமா இன்னும் என்ன தூக்கம் என அப்பா என்னை பிரம்பால் ஓங்கி ஒரு அடி அடித்தார். உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் வலிக்குமோ என நினைத்து கொண்டே நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என வலியால் துடித்துக் கொண்டே எழுந்தேன்.

Friday, 16 November 2012

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 1

அஷ்டமாசித்திகள் என்றால் எட்டு பேறுகள் என்றே குறிப்பிடுகிறார்கள்.  இதனை அடைய பெற்றவர்கள் மாபெரும் பலன் கொண்டவர்களாக விளங்குவார்கள் என்றே அறியப்படுகிறது. பெரும்பாலும் சித்தர்கள் இத்தகைய எட்டு சித்திகள் பெற்றவர்களாகவே  காட்டப்படுகிறார்கள். இந்த எட்டு சித்திகள் பெறுவது என்பது அத்தனை எளிதான காரியமாக சாமானியர்களுக்குத் தெரிவதில்லை. இவை எல்லாம் கண் கட்டு வித்தையாக இருக்கலாம் என்றே பொதுவாக உணரப்பட்டாலும், ஒருவேளை இருக்குமோ என்கிற மாய பிம்பம் தென்படத்தான் செய்கிறது.

அஷ்டமாசித்திகள் எவை எவை.

1. அணிமா. இதை அணுத்தன்மை அல்லது நுண்மை என்றே குறிப்பிடலாம். அதாவது அணுவைப் போன்று சிறியவையாதல் என பொருள்படும்.

'கறந்த பால் மடிபுகா' என்று சொன்னாலும் யோக நிலையின் மூலம் உடலை சிறியது ஆக்கலாம் என்றே சொல்கிறார்கள். பொதுவாக பார்க்கப் போனால் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்றே ஆகிறது. ஆனால் உடல் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை என்னவென பார்க்கும் போது சில விசயங்கள் சாத்தியப்படலாம். மூன்று வகை உடல்கள் எவை எவை.

அ . ஸ்தூல சரீரம் அதாவது  கண்களுக்கு புலப்படக் கூடிய உடல்

ஆ . சூக்ஷ்ம சரீரம் அதாவது கண்களுக்கு புலப்படாமல் நுட்பமாய் அமைந்து இருப்பது. இதனை லிங்க சரீரம் என்றும் சொல்கிறார்கள். இந்த லிங்க சரீரம் ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு, பிராண வாயு ஒன்று என்பவைகளால் ஆனது.

இ. காரண உடல். அதாவது பருவுடல், காரண உடல் இரண்டிற்கும் அடிப்படை இந்த காரண உடல்.

பருவுடம்பு மட்டுமில்லாமல் வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு மற்றும் இன்ப உடம்பு எனவும் உடம்பு பிரிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் ஒரு நிலை ஆகும். இப்படி பிரித்தெடுத்து சிந்தித்த முன்னோர்கள் போற்றத்தக்கவர்கள் தான்.

தொக்கு, சிங்குவை, சட்சு, ஆக்கிராணம் மற்றும் சோத்திரம் இவை ஞானேந்திரியங்கள். அதாவது   மெய் (உணர்தல்), வாய் (சுவை) ,கண் (பார்வை), மூக்கு (வாசம்), செவி (கேட்டல்) என ஐம்பொறிகளாக வகைப்படுத்தலாம். லிங்க சரீரம் ஞானேந்திரியங்கள் மூலம் ஆனது என்பது இவை கண்களுக்கு புலப்படாத விசயங்கள் உணர்வதாக குறிப்பிடுகிறார்கள். இவைகளை பஞ்ச தன்மாத்திரைகள் என்றே சொல்கிறார்கள்.

வாக்கு, பாணி, பாதம், பாயுரு மற்றும் உபஸ்தம் என்பவை கர்மேந்திரியங்கள் என்றே  குறிக்கப்படுகின்றன. அதாவது வாய், கை, கால், மலவாய், கருவாய். இவை சொல்லல், நடத்தல் கொடுத்தல், விடுதல், மகிழ்தல் என கர்மங்களை செய்வதால் இவை கர்மேந்திரியங்கள் என்றே குறிக்கப்படுகின்றன.

மனம், அறிவு, நினைவு மற்றும் முனைப்பு போன்றவை அந்தக்கரணங்கள் என்றே வழங்கப்படுகின்றன. அந்தக்கரணங்கள் ஞானேந்திரியங்களையும், கர்மேந்திரியங்களையும் கட்டுபாட்டில் வைக்கக் கூடியவை. மனம், புத்தி இரண்டுமே எவை என்பது பிரித்தறிய மனம் நினைப்பு என்றும் புத்தி என்பது அறிவு என்றும் சொல்கிறார்கள். நாம் ஒன்றை நினைக்க மனம் துணையாகும். ஆனால் அதை நிச்சயித்து நடத்த புத்தி தேவை என்பதாகும்.

(தொடரும்)


Tuesday, 13 November 2012

எனக்கு மட்டும் இல்லையா தீபாவளி?

சிறு வயதில் கேள்விப்பட்ட நரகாசுரன் கதை தான் தீபாவளிக்கு என இருந்தாலும் வேறு சில கதைகளும் சொல்லப்படுகின்றன. நிறைய பெண்களை தனது கட்டுபாட்டில் வைத்திருந்த நரகாசுரனை வீழ்த்திய தினம் தான் தீபாவளி என்றே கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி அன்று வெடி வெடித்து ஆராவரத்துடன் புத்தாடை உடுத்தி மகிழ்ந்து இருப்பது ஒரு பொழுது போக்கு. எப்போது தீபாவளி வரும், எத்தனை புது படங்கள் வரும் என ஆவலுடன் எதிர்பார்த்து இருப்போரும், ஒரு புது ஆடை கிடைக்கும் என மகிழ்ச்சியுடன் சிலரும், எந்த பண்டிகை வந்தாலும் நமது நிலை இதுதான் என இருப்போர் பலரும் என விழாக்காலங்கள் இந்தியாவில் களைகட்டும்.

சரவெடி, லக்ஷ்மி வெடி, அணுகுண்டு, மத்தாப்பு என சந்தோசமாக கழித்த நாட்கள் நினைவில் ஆடும். இந்த தீபாவளியுடன் எங்கள் கிராமத்தில் பொங்கலும், அதனுடன் கரி நாள் என கொண்டாடப்படும். தீபாவளிக்கு என விடுமுறை நாட்கள் குறைந்தது மூன்று தினமாவது  கிடைத்துவிடும். இது போன்று தீபாவளி கொண்டாடி பல வருடங்கள் உருண்டோடிவிட்டன. தீபாவளி அன்று கூட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் போலவே நிலைமையும் மாறிவிட்டது.

இந்த சிறப்பான தீபாவளி லக்ஷ்மி தேவிக்கு தொடர்புடையது என்று ஒரு சாரர் கூறுவது உண்டு. அதாவது ஒளியானது வாழ்வில் வீசத் தொடங்கினால் அங்கே லக்ஷ்மி தேவி வாசம் செய்வது உண்டு எனும் ஐதீகம் உண்டு. அதாவது லக்ஷ்மி தேவி அவதாரம் செய்த தினம் இந்த தினம் தான் என்று குறிப்பில் இருக்கிறதாம். அதோடு மட்டுமில்லாமல் வாமன அவதாரம் எடுத்து வந்தபோது லக்ஷ்மி தேவியை இந்த திருநாளில் தான் பாலி எனும் அரசனிடம் இருந்து வாமணர் காப்பாற்றினார் என்பதால் இந்த திருநாளை லக்ஷ்மி தேவிக்கு அர்பணிக்கிறார்கள்.

வனவாசம் முடித்துவிட்டு பாண்டவர்கள் திரும்பி வந்த தினம், இலங்கையில் இருந்து சீதையை  மீட்டு அயோத்திக்கு ராமர் வந்த தினம் கூட தீபாவளியாக கொண்டாடப்படுவதும் உண்டு. இந்த தீபாவளி இந்துக்கள் மட்டுமில்லாது சீக்கியர்கள், ஜெயின் மதம் தொடர்புடையவர்கள் கூட கொண்டாடுவது உண்டு. யுகங்கள் மாறினாலும் வெவ்வேறு காரணத்திற்காக இந்த தீபாவளி கொண்டாடப்பட்டு வருவது தெள்ளத் தெளிவாகிறது.

இனி வரும் காலங்களில் இந்த தீபாவளி தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட்ட தினமாகவும், இனம், நிறம் போன்ற வேறுபாடு நீக்கிய நாளாகவும், மதங்கள் அழிக்கப்பட்டு தெய்வீகத் தன்மை நிலைபெற்ற நாளாகவும் கொண்டாடப்படலாம். அப்படிப்பட்ட ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தும் நாள் ஒன்றே உண்மையான தீபாவளி. அதுவரை இந்த தீபாவளி பண்டிகை எல்லாம் ஒரு பொழுது போக்கு. ஒரு விடுமுறை தினம் அவ்வளவுதான்.