Tuesday, 30 October 2012

காதலில் வக்கிரம்

எனக்கு நீ கிடைக்காமல் போனால் 
எவருக்குமே நீ கிடைக்காமல் 
போகக் கடவது என்றே 
சாபம் இட்டதுண்டு 

தினந்தோறும் நீ வரும் பேருந்தில் 
அன்று நீ வராததை கண்டு 
அந்த பேருந்து கவிழட்டும் 
என்றே நினைத்தேன் 

உனது அழகிய முகத்தை 
நான் பார்க்கக் கூடாது 
என்று சொன்ன உன் தந்தைக்கு 
பாடம் புகட்ட 
அமிலத்தை அவரது  முகத்தில் 
தெளித்துவிட துடித்தேன் 

எனது காதலை உன்னிடம் 
சொன்னபோது 
நீ மறுத்து வெறுத்து ஒதுக்கிய 
மறுகணம் 
நான் இறந்துவிடலாம் என்றே 
கலங்கினேன்

காதலும் காதல் சார்ந்த 
இடம் கல்லறை 
என அனைவரும் 
சொல்லிவிடட்டும் என 
உன்னையும் அன்றே 
கொன்று ஓரிடத்தில் நம்மிருவரையும் 
புதைக்க பயணித்தேன் 

உள்ளத்தில் உள்ள காதலை 
தேக்கி வைக்க இயலாமல் 
உள்ளத்தில் உள்ளது எல்லாம் 
உன்னிடத்தில் மீண்டும் சொன்னபோது 
நான் தவிக்க வேண்டும் என்றே 
நீ என்னை தவிர்ப்பதாக சொன்னாய் 

என்னில் மட்டும் இல்லை 
காதலில் வக்கிரம் 
உன்னிடத்திலும் உண்டு 
கண்டுகொள்!

Saturday, 27 October 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 11

கர்ம வினை என்று சொன்னபோதே  எனக்குள் ஏற்பட்ட குழப்பம் பெரியதாகவே இருந்தது. இது குறித்து நான் காயத்ரியிடம் மேலும் விவரமாக கேட்க நினைத்தேன். ஆனால் அவளோ மிகவும் அமைதியாக இருந்ததால் எப்படி கேட்பது என்றே நினைத்தேன்.

''அப்படினா நீ என்னை மறந்துடுவியா'' என்றேன். அதாவது மனிதர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே எல்லாம் இருந்தால் காயத்ரி ஒன்று ஆம், அல்லது இல்லை என்று சொல்லிவிடலாம். பதிலுக்கு காத்து இருந்தேன்.

''அதன் சொன்னேனே கர்ம வினைன்னு'' என்றாள். 'புரியலை கொஞ்சம் விளக்கமா சொல்' என்றேன். 'நீ இந்த காலேஜுக்கு வர முன்னால என்னைப் பார்த்தியா? இதற்கு முன்னால எத்தனை கேர்ல்ஸ் நீ பாத்து இருப்ப. என்கிட்டே வந்து எதுக்கு லவ் சொன்ன'. இதெல்லாம் கர்ம வினை என்றாள்.

ஒன்று நடப்பதும், நடவாமல் இருப்பதும் கர்ம வினை எனில் நமது கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறது என்பதற்கே ஒரு அர்த்தமும் இல்லாமல் போகிறதே என நினைத்து ''நாம நினைச்சா எல்லாத்தையும் ஒரு கட்டுக்குள்ள கொண்டு வந்துராலாமே'' என்றேன். ''கட்டுக்குள்ள கொண்டு வந்துதான் பாரு'' என்றாள்.

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பமில்லை. வீடு நோக்கி நடந்தோம். அம்மாவிடம் இது குறித்து கேட்க வேண்டும் போலிருந்தது. வழக்கத்திற்கு மாறாக காயத்ரியின் அக்கா வீட்டிற்கு வந்திருந்தார். அம்மாவின் முகம் கவலையில் தோய்ந்திருந்தது.

''என்னம்மா, ஒரு மாதிரியாய் இருக்க'' என்றேன். நான் வந்ததை கூட கவனிக்காதவர் போலே தென்பட்டார். மீண்டும் அம்மாவை உலுக்கினேன். 'வாப்பா' என்றவர் அடுக்களையில் நுழைந்தார். காயத்ரி என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

''அம்மா'' என்றேன்.

''பிரச்சினைக்கு மேல பிரச்சினை வந்தா என்னடா பண்ண முடியும்?'' என்ற அம்மாவின் வார்த்தை சற்றே நடுக்கம் கொண்டிருந்தது. ''விவரமா சொல்லும்மா'' என்றேன்.

''காயத்ரியோட அக்காகிட்ட ஒருத்தன் இன்னைக்கு வம்பு பண்ணியிருக்கான். இவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போய்ட்டானாம். அவனை இவளுக்கு தெரியும்னு சொல்றா'' என்றாள். ''பூ இவ்வளவுதானாம்மா, இதுக்கு எல்லாம் நீ எதுக்கு நடுங்குற'' என்றேன். ''டே பெரிய விவகாரமா ஆயிரமாடா'' என்றார் அம்மா.

''எல்லாம் கர்ம வினைம்மா'' என்றேன். ''என்ன சொன்ன நீ, கர்ம வினையா'' என்றார் அம்மா. ''ஆமாம்மா காயத்ரி அப்படித்தான் சொன்னா'' என்றேன். ''ம்ம் நாம வாங்கி வந்த வரம் அப்படி'' என்றார் அம்மா. ''யாரும்மா நாம கேட்காத வரத்தை எல்லாம் கொடுத்தது'' என்றே சொல்லி வைத்தேன். அதற்குள் அம்மா காபி எல்லாம் தயாரித்து முடித்து இருந்தார்.

நாங்கள் அனைவரும் அமர்ந்து முறுக்குதனை கடித்துக் கொண்டு காபிதனை அருந்தி கொண்டிருந்தோம். காயத்ரியின் அக்காவிடம் பையனின் விபரம் வாங்கிக் கொண்டேன். காயத்ரி நீ எதுவும் வம்பு பண்ணாத என என்னை எச்சரித்தாள்.

''பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள்'' என்றேன். இப்போ எதுக்கு சம்பந்தமில்லாம பேசற என்றார் அம்மா. ''தூசி துகளாகி, துகள் ஈறாகி, ஈர் பேனாகி, பேன் பெருமாள் ஆனது, அந்த பெருமாளை ஆக்கியது பெண்கள்'' என்றேன். காயத்ரி என்னை கோபமாகப் பார்த்தாள்.

(தொடரும்)

Tuesday, 23 October 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 6

முன்பகுதி 

மாணிக்கவாசகர் முக்காலத்தை அறிந்து இருந்தாரா என்பதற்கான சான்றுகள் கிடைப்பதற்கு அரியதாகவே இருக்கிறது. ஆனால் முனிவர்கள் அனைவரும் முக்காலமும் அறிந்தவர்களாகவே காட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்காக ஒரு கதை கூட சொல்லப்பட்டு இருக்கிறது. பிருகு முனிவர் மிகவும் ஆணவம் கொண்டவர் என்றே கருதப்படுகிறது. இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் பிரம்மா, சிவன், விஷ்ணு என மூவரும் இவருக்கும் கீழேதான் எனும் மமதை இவருக்கு மிகவும் அதிகமாகவே உண்டு. முன்னொரு காலத்தில் எல்லாம் கற்றறிந்தவர்கள் பெரும் மதிப்புக்கு உரியவர்களாகவே போற்றப்பட்டு வந்தனர். அதன் காரணத்தில் முனிவர்கள், சித்தர்கள் போன்றோர்கள் எல்லாம் கடவுளர்களால் போற்றப்பட்டு வந்தார்கள்.

புராணங்களில் கூறப்பட்டவை புரட்டுகள் என்றே வைத்துக் கொண்டாலும் எழுதப்பட்ட விசயங்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமும், அதே வேளையில் சுவராஸ்யமாகவும் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. எள்ளலுக்கு உட்படும் புராணங்கள் எனினும் எழுதப்பட்டவைகளை மாற்றி அமைத்தல் என்பதும், திரித்து கூறுதல் என்பதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

மகாபாராதம் என சொல்லப்படும் இதிகாசம் இந்தியாவின் வரலாறு என்றே குறிப்பிடப்படுகிறது. அஸ்தினாபுரம் என்ற ஒரு இடம் இருந்ததாக, இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இறந்த காலத்தை தோண்டி எடுக்கும் திறன் அகழ்வாரய்ச்சியாலர்களுக்கு நிறையவே உண்டு. படிமங்களை கொண்டு இறந்த காலம் உணரும் திறனை அவர்கள் வளர்த்து கொண்டார்கள் என்பது போல ஒரு தோற்றம் இருக்கத்தான் செய்கிறது.

கடவுளர்களால் போற்றப்பட்ட பிருகு முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறார்கள் பிரமனும்,சிவனும். இவர்கள் இருவருக்கும் சாபம் இடுகிறார் பிருகு முனிவர். பிரமனுக்கு கோவில்களே இருக்காது எனவும, சிவனுக்கு லிங்க வடிவிலேதான் பூஜை எனவும் சொல்லி செல்கிறார். ஆனாலும் பிரமனுக்கு ஒரு கோவில் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய வழிபாட்டு முறையை கொண்டு அன்று பிருகு முனிவர் சொன்னது போல எழுதி இருக்க வாய்ப்பு இல்லை. அல்லது பிற்காலத்தில் பிருகு முனிவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அதை பின்பற்றியும் இருந்து இருக்கலாம். ஆனால் இங்கே முக்காலத்தை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவராகவே பிருகு முனிவர் போற்றப்படுகிறார்.

இதைவிட விசேசம் என்னவெனில் பிருகு முனிவர் விஷ்ணுவை காலால் எட்டி நெஞ்சில் உதைக்க, விஷ்ணுவோ பணிவுடன் அவருக்கு பணிவிடை செய்ய விஷ்ணுவுக்கு கோவில்கள் என்கிறார் பிருகு முனிவர். ஆனால் விஷ்ணுவின் மனைவி லட்சுமி பிருகு முனிவரின் வம்சமான பிராமணர்கள் வசதி வாய்ப்பு இன்றி போகட்டும் என சாபம் இடுகிறார். இங்கே எவர் பிராமணர் எனும் கேள்வி பெரிய கேள்வி? எவர் அந்தணர்? ஆனால் பின்னர் சற்று பரிவு கருதி முக்காலத்தை குறித்து வைக்கும் ஆற்றல் பெற்று பிராமணர்கள் அதன் மூலம் அவர்களது வாழ்வினை வளப்படுத்தட்டும் என்றே ஒரு வாய்ப்பு தருகிறார்.

அந்த வாய்ப்பை கொண்டு பிருகு முனிவர் ஒரு தனி சூத்திரங்கள் எழுதியதாக வரலாறு சொல்கிறது. பிருகு சம்ஷிடா எனப்படுவது அது. விநாயகரின் துணை கொண்டு எழுதப்பட்டதாக புராணம் சொல்கிறது. விஷ்ணு கூட முனிவர்களில் நான் பிருகு என்கிறார். இப்படி பல விசயங்ககளை தொகுத்து வைக்கிறார் பிருகு. ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் முஸ்லிம்கள் படையெடுப்பால் தொலைந்து போயின என்கிறார்கள். நாலந்தா பல்கலைகழகத்தில் பிருகு முனிவரின் எழுத்துகள் சேர்த்து வைக்கப்பட்டன என்றும் அந்த பல்கலைகழகம் அழிக்கப்பட்டதால் எல்லாம் அழிந்து போயின என்கிறார்கள். பிருகு முனிவரின் சீடர்கள் எல்லாம் சேர்ந்து இன்றைய மரபணுக்கள் எப்படி தொகுக்கப்பட்டதுவோ அது போன்று எல்லா உயிர்னங்களின் முக்காலங்களையும் தொகுத்து வைத்ததாகவே சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் சோதிட கலை உருவானது என்றே சொல்கிறார்கள்.

என்ன இருந்தாலும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்றே தெரியாமல் இருப்பதால் வாழ்வு சுவாரசியம் என்றும் சொல்வது உண்டு.

(தொடரும்)