Saturday 27 October 2012

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 11

கர்ம வினை என்று சொன்னபோதே  எனக்குள் ஏற்பட்ட குழப்பம் பெரியதாகவே இருந்தது. இது குறித்து நான் காயத்ரியிடம் மேலும் விவரமாக கேட்க நினைத்தேன். ஆனால் அவளோ மிகவும் அமைதியாக இருந்ததால் எப்படி கேட்பது என்றே நினைத்தேன்.

''அப்படினா நீ என்னை மறந்துடுவியா'' என்றேன். அதாவது மனிதர்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே எல்லாம் இருந்தால் காயத்ரி ஒன்று ஆம், அல்லது இல்லை என்று சொல்லிவிடலாம். பதிலுக்கு காத்து இருந்தேன்.

''அதன் சொன்னேனே கர்ம வினைன்னு'' என்றாள். 'புரியலை கொஞ்சம் விளக்கமா சொல்' என்றேன். 'நீ இந்த காலேஜுக்கு வர முன்னால என்னைப் பார்த்தியா? இதற்கு முன்னால எத்தனை கேர்ல்ஸ் நீ பாத்து இருப்ப. என்கிட்டே வந்து எதுக்கு லவ் சொன்ன'. இதெல்லாம் கர்ம வினை என்றாள்.

ஒன்று நடப்பதும், நடவாமல் இருப்பதும் கர்ம வினை எனில் நமது கட்டுப்பாட்டில் என்ன இருக்கிறது என்பதற்கே ஒரு அர்த்தமும் இல்லாமல் போகிறதே என நினைத்து ''நாம நினைச்சா எல்லாத்தையும் ஒரு கட்டுக்குள்ள கொண்டு வந்துராலாமே'' என்றேன். ''கட்டுக்குள்ள கொண்டு வந்துதான் பாரு'' என்றாள்.

அதற்கு மேல் அங்கிருக்க விருப்பமில்லை. வீடு நோக்கி நடந்தோம். அம்மாவிடம் இது குறித்து கேட்க வேண்டும் போலிருந்தது. வழக்கத்திற்கு மாறாக காயத்ரியின் அக்கா வீட்டிற்கு வந்திருந்தார். அம்மாவின் முகம் கவலையில் தோய்ந்திருந்தது.

''என்னம்மா, ஒரு மாதிரியாய் இருக்க'' என்றேன். நான் வந்ததை கூட கவனிக்காதவர் போலே தென்பட்டார். மீண்டும் அம்மாவை உலுக்கினேன். 'வாப்பா' என்றவர் அடுக்களையில் நுழைந்தார். காயத்ரி என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

''அம்மா'' என்றேன்.

''பிரச்சினைக்கு மேல பிரச்சினை வந்தா என்னடா பண்ண முடியும்?'' என்ற அம்மாவின் வார்த்தை சற்றே நடுக்கம் கொண்டிருந்தது. ''விவரமா சொல்லும்மா'' என்றேன்.

''காயத்ரியோட அக்காகிட்ட ஒருத்தன் இன்னைக்கு வம்பு பண்ணியிருக்கான். இவளைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்லிட்டுப் போய்ட்டானாம். அவனை இவளுக்கு தெரியும்னு சொல்றா'' என்றாள். ''பூ இவ்வளவுதானாம்மா, இதுக்கு எல்லாம் நீ எதுக்கு நடுங்குற'' என்றேன். ''டே பெரிய விவகாரமா ஆயிரமாடா'' என்றார் அம்மா.

''எல்லாம் கர்ம வினைம்மா'' என்றேன். ''என்ன சொன்ன நீ, கர்ம வினையா'' என்றார் அம்மா. ''ஆமாம்மா காயத்ரி அப்படித்தான் சொன்னா'' என்றேன். ''ம்ம் நாம வாங்கி வந்த வரம் அப்படி'' என்றார் அம்மா. ''யாரும்மா நாம கேட்காத வரத்தை எல்லாம் கொடுத்தது'' என்றே சொல்லி வைத்தேன். அதற்குள் அம்மா காபி எல்லாம் தயாரித்து முடித்து இருந்தார்.

நாங்கள் அனைவரும் அமர்ந்து முறுக்குதனை கடித்துக் கொண்டு காபிதனை அருந்தி கொண்டிருந்தோம். காயத்ரியின் அக்காவிடம் பையனின் விபரம் வாங்கிக் கொண்டேன். காயத்ரி நீ எதுவும் வம்பு பண்ணாத என என்னை எச்சரித்தாள்.

''பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள்'' என்றேன். இப்போ எதுக்கு சம்பந்தமில்லாம பேசற என்றார் அம்மா. ''தூசி துகளாகி, துகள் ஈறாகி, ஈர் பேனாகி, பேன் பெருமாள் ஆனது, அந்த பெருமாளை ஆக்கியது பெண்கள்'' என்றேன். காயத்ரி என்னை கோபமாகப் பார்த்தாள்.

(தொடரும்)

Tuesday 23 October 2012

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 6

முன்பகுதி 

மாணிக்கவாசகர் முக்காலத்தை அறிந்து இருந்தாரா என்பதற்கான சான்றுகள் கிடைப்பதற்கு அரியதாகவே இருக்கிறது. ஆனால் முனிவர்கள் அனைவரும் முக்காலமும் அறிந்தவர்களாகவே காட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்காக ஒரு கதை கூட சொல்லப்பட்டு இருக்கிறது. பிருகு முனிவர் மிகவும் ஆணவம் கொண்டவர் என்றே கருதப்படுகிறது. இவ்வுலகை ஆட்டிப்படைக்கும் பிரம்மா, சிவன், விஷ்ணு என மூவரும் இவருக்கும் கீழேதான் எனும் மமதை இவருக்கு மிகவும் அதிகமாகவே உண்டு. முன்னொரு காலத்தில் எல்லாம் கற்றறிந்தவர்கள் பெரும் மதிப்புக்கு உரியவர்களாகவே போற்றப்பட்டு வந்தனர். அதன் காரணத்தில் முனிவர்கள், சித்தர்கள் போன்றோர்கள் எல்லாம் கடவுளர்களால் போற்றப்பட்டு வந்தார்கள்.

புராணங்களில் கூறப்பட்டவை புரட்டுகள் என்றே வைத்துக் கொண்டாலும் எழுதப்பட்ட விசயங்கள் எல்லாம் மிகவும் ஆச்சரியமும், அதே வேளையில் சுவராஸ்யமாகவும் இருப்பதை எவரும் மறுக்க இயலாது. எள்ளலுக்கு உட்படும் புராணங்கள் எனினும் எழுதப்பட்டவைகளை மாற்றி அமைத்தல் என்பதும், திரித்து கூறுதல் என்பதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

மகாபாராதம் என சொல்லப்படும் இதிகாசம் இந்தியாவின் வரலாறு என்றே குறிப்பிடப்படுகிறது. அஸ்தினாபுரம் என்ற ஒரு இடம் இருந்ததாக, இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இறந்த காலத்தை தோண்டி எடுக்கும் திறன் அகழ்வாரய்ச்சியாலர்களுக்கு நிறையவே உண்டு. படிமங்களை கொண்டு இறந்த காலம் உணரும் திறனை அவர்கள் வளர்த்து கொண்டார்கள் என்பது போல ஒரு தோற்றம் இருக்கத்தான் செய்கிறது.

கடவுளர்களால் போற்றப்பட்ட பிருகு முனிவரின் சாபத்திற்கு ஆளாகிறார்கள் பிரமனும்,சிவனும். இவர்கள் இருவருக்கும் சாபம் இடுகிறார் பிருகு முனிவர். பிரமனுக்கு கோவில்களே இருக்காது எனவும, சிவனுக்கு லிங்க வடிவிலேதான் பூஜை எனவும் சொல்லி செல்கிறார். ஆனாலும் பிரமனுக்கு ஒரு கோவில் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய வழிபாட்டு முறையை கொண்டு அன்று பிருகு முனிவர் சொன்னது போல எழுதி இருக்க வாய்ப்பு இல்லை. அல்லது பிற்காலத்தில் பிருகு முனிவர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அதை பின்பற்றியும் இருந்து இருக்கலாம். ஆனால் இங்கே முக்காலத்தை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவராகவே பிருகு முனிவர் போற்றப்படுகிறார்.

இதைவிட விசேசம் என்னவெனில் பிருகு முனிவர் விஷ்ணுவை காலால் எட்டி நெஞ்சில் உதைக்க, விஷ்ணுவோ பணிவுடன் அவருக்கு பணிவிடை செய்ய விஷ்ணுவுக்கு கோவில்கள் என்கிறார் பிருகு முனிவர். ஆனால் விஷ்ணுவின் மனைவி லட்சுமி பிருகு முனிவரின் வம்சமான பிராமணர்கள் வசதி வாய்ப்பு இன்றி போகட்டும் என சாபம் இடுகிறார். இங்கே எவர் பிராமணர் எனும் கேள்வி பெரிய கேள்வி? எவர் அந்தணர்? ஆனால் பின்னர் சற்று பரிவு கருதி முக்காலத்தை குறித்து வைக்கும் ஆற்றல் பெற்று பிராமணர்கள் அதன் மூலம் அவர்களது வாழ்வினை வளப்படுத்தட்டும் என்றே ஒரு வாய்ப்பு தருகிறார்.

அந்த வாய்ப்பை கொண்டு பிருகு முனிவர் ஒரு தனி சூத்திரங்கள் எழுதியதாக வரலாறு சொல்கிறது. பிருகு சம்ஷிடா எனப்படுவது அது. விநாயகரின் துணை கொண்டு எழுதப்பட்டதாக புராணம் சொல்கிறது. விஷ்ணு கூட முனிவர்களில் நான் பிருகு என்கிறார். இப்படி பல விசயங்ககளை தொகுத்து வைக்கிறார் பிருகு. ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் முஸ்லிம்கள் படையெடுப்பால் தொலைந்து போயின என்கிறார்கள். நாலந்தா பல்கலைகழகத்தில் பிருகு முனிவரின் எழுத்துகள் சேர்த்து வைக்கப்பட்டன என்றும் அந்த பல்கலைகழகம் அழிக்கப்பட்டதால் எல்லாம் அழிந்து போயின என்கிறார்கள். பிருகு முனிவரின் சீடர்கள் எல்லாம் சேர்ந்து இன்றைய மரபணுக்கள் எப்படி தொகுக்கப்பட்டதுவோ அது போன்று எல்லா உயிர்னங்களின் முக்காலங்களையும் தொகுத்து வைத்ததாகவே சொல்கிறார்கள். இதன் அடிப்படையில் தான் சோதிட கலை உருவானது என்றே சொல்கிறார்கள்.

என்ன இருந்தாலும் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்றே தெரியாமல் இருப்பதால் வாழ்வு சுவாரசியம் என்றும் சொல்வது உண்டு.

(தொடரும்)

Thursday 18 October 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - அஷ்ஷிரியர்கள்

 முன்பகுதி 

அஷ்ஷிரியர்கள் என்பவர்கள் மூலமே ஹிட்டிடேஷ் அழிவுக்கு வந்தது எனினும் ஹிட்டிடேஷ் முழு அழிவுக்கு காரணமானவர்களை வரலாறு அதிகமாக குறித்து வைக்கவில்லை. இந்த அஷ்ஷிரியர்கள் முதன் முதலில் ராணுவ கட்டமைப்பை வரலாற்றில் உருவாக்கியவர்கள் எனலாம். தற்போதைய ஈராக்கிற்கு வடக்கு பகுதியில் இவர்களது அரசமைப்பு இருந்ததாக வரலாறு குறிக்கிறது. இவர்களது இந்த ராணுவ கட்டமைப்பின் மூலம் சுற்றி இருந்த குறும் நாடுகள் எல்லாம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.

இவைகள் பாபிலோனியன் கலாச்சாரத்தை பெரிதும் பின்பற்றுபவர்களாகவே இருந்து வந்தார்கள். இந்தோ ஆரியன் மற்றும் செமிதீஸ் எனப்படும் மக்கள் இங்கு  வந்தார்கள். அச்சூர் எனப்படும் இடத்தை தலைநகரமாக கொண்டு பல வணிகத்திற்கு வித்திட்ட இடமும் இதுதான். எகிப்து நாட்டுடன் பெரும் வணிக போக்குவரத்து ஏற்பட்டது. தெற்கில் இருந்த பாபிலோனியர்களுடன் பல வேறுபாடுகளுடனே இந்த மக்கள் வளர்ந்து வந்தார்கள். பக்கத்து நாடுகளுடன் போர் புரிவது என தொடங்கி தங்களது எல்கை பரப்பை விரிவாக்கம் செய்யத் தொடங்கினார்கள் இந்த அஷ்ஷிரியர்கள்.

ஒரு எல்கையை பிடித்துவிட்டால் அங்கே இருக்கும் மக்களை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்று விடுவார்கள். இதன் மூலம் அந்த எல்கை மக்கள் எந்த ஒரு பிரச்சினையும் பண்ண வாய்ப்பிலாமல் செய்து வந்தார்கள். கடல்வாழ் மக்கள், அரமேனியன் எனப்படுபவர்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார்கள். மேசபோடோமியா நகரங்களுக்கு இவர்கள் சிம்ம சொப்பனமாக  விளங்கினார்கள். பழைய அஷ்ஷிரியர்கள் இதன் மூலம் சற்று பின் தங்கினார்கள். அதற்கு பின்னர் வந்த அஷ்ஷிரியர்கள் இழந்த இடங்களை மீட்டு மேலும் எல்கையினை விரிவுபடுத்தினார்கள்.

அஷ்ஷிரியர்கள் புயல் போல போரிடுவார்கள். உடைகள் எதுவும் அணியாமல், உடைகள் அணிந்து இருந்தாலும் அதை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு கத்தியை வட்டமாக சுழற்றுவார்கள். அவர்களின் போர் முறை சிங்கம் சினம் கொண்டது போலவே இருக்கும் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இவர்களின் அரசமைப்பு முறையானது ராஜா, மற்றும் கவர்னர்களை கொண்டது. கவர்னர்கள் சாலை அமைப்பு, ராணுவம், வணிகம் என் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்வார்கள். ராணுவ அமைப்புக்கு மிகவும் கடுமையான பயிற்சி முறை எல்லாம் தரப்படும். மலைகளில் எல்லாம் சென்று போரிடும் பயிற்சி முறை மேற்கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கும் கடவுள் உண்டு. பாபிலோனியன், அச்சூர் எனப்படும். ஆனால் மத கட்டுபாடுகளை மக்கள் திணிப்பதை அறவே தவிர்த்தார்கள்.

இவர்கள் போரிட்டதே வணிகத்தை பெருக்கி கொள்ளத்தான் என்பது போல வணிக போக்குவரத்துதனை மிகவும் சிறப்பாக அமைத்து கொண்டார்கள். பல இடங்கள் இவர்களுக்கு கப்பம் கட்டும் இடங்களாக மாறின. வேலைக்காரர்களாக வெற்றி பெற்ற இடங்களில் இருந்து மக்களை இறக்குமதி செய்து கொண்டார்கள். எதிரிகளை மிகவும் துச்சமாகவே மதித்தார்கள். எரிப்பது, வெட்டுவது போன்ற கொடும் தண்டனைகள் வழங்கிய வழக்கம் இவர்களிடம் இருந்தது. இருப்பினும் அஷ்ஷிரியர்கள் மீண்டும் தாழ்வினை அடைந்தார்கள். இவர்களின் கொடுமையான முறை இவர்களுக்கு எதிராக அமைந்தது.

அதற்கு பின்னர் டிக்லாத் பிலேசெர் என்பவர் ராணுவத்தை, அரசு அமைப்பை மிகவும் நெறிபடுத்தினார். உரார்டன்ஸ் எனப்படுபவர்கள் அஷ்ஷிரியர்கள் வணிக போக்குவரத்துக்கு பெரும் தடையாக இருக்க அவர்களை இவர் வென்றது மூலம் மேலும் அஷ்ஷிரியர்கள் தழைக்க ஆரம்பித்தார்கள். இவர் மக்களை பல இடங்களுக்கு இடம் மாற்றம் செய்து ஒரு ஒற்றுமையை உருவாக்கினார் பாபிலோநியர்களையும் இவர் வென்றார். இவருக்கு பின்னர் வந்த சார்கன் என்பவர் எல்கையை மென்மேலும் அதிகரித்தார். இவரின் மகன் தங்களுக்கு எதிராக இருந்த பாபிலோனியாவை முற்றிலுமாகவே அழித்தார். அவருக்கு பின் வந்த இசர்கடன் பாபிலோனியாவை மீண்டும் நிர்மானித்தார்.

இவருக்கு பின்னர் வந்தவர்கள் திறமையற்று போனதால் சைத்தியன்ஸ் மற்றும் சுற்றி இருந்த குறும் நாடுகள் எல்லாம் இந்த அஷ்ஷிரியர்கள் முழுவதுமாக அழிந்து போக காரணமானார்கள். அஷ்ஷிரியர்கள் அற்புதமான நூலகம் ஒன்றை உருவாக்கி இருந்தனர். சுற்றி இருந்த நாடுகள் கொண்ட வெறுப்பு அந்த நூலகத்தையும் அழித்தது. வாழ்க்கையில் சீரழியாமல் இருக்க திறமையானது தொடர்ந்து சந்ததிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் போர் மட்டுமே திறமை என்றாகாது. மக்களை தம் வசப்படுத்துவது மூலம் மட்டுமே ஒரு அரசு சாதிக்க முடியாது. மக்களுக்கு வேண்டிய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

பாபிலோனியர்கள் யார்?

(தொடரும்)