Thursday, 18 October 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - அஷ்ஷிரியர்கள்

 முன்பகுதி 

அஷ்ஷிரியர்கள் என்பவர்கள் மூலமே ஹிட்டிடேஷ் அழிவுக்கு வந்தது எனினும் ஹிட்டிடேஷ் முழு அழிவுக்கு காரணமானவர்களை வரலாறு அதிகமாக குறித்து வைக்கவில்லை. இந்த அஷ்ஷிரியர்கள் முதன் முதலில் ராணுவ கட்டமைப்பை வரலாற்றில் உருவாக்கியவர்கள் எனலாம். தற்போதைய ஈராக்கிற்கு வடக்கு பகுதியில் இவர்களது அரசமைப்பு இருந்ததாக வரலாறு குறிக்கிறது. இவர்களது இந்த ராணுவ கட்டமைப்பின் மூலம் சுற்றி இருந்த குறும் நாடுகள் எல்லாம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின.

இவைகள் பாபிலோனியன் கலாச்சாரத்தை பெரிதும் பின்பற்றுபவர்களாகவே இருந்து வந்தார்கள். இந்தோ ஆரியன் மற்றும் செமிதீஸ் எனப்படும் மக்கள் இங்கு  வந்தார்கள். அச்சூர் எனப்படும் இடத்தை தலைநகரமாக கொண்டு பல வணிகத்திற்கு வித்திட்ட இடமும் இதுதான். எகிப்து நாட்டுடன் பெரும் வணிக போக்குவரத்து ஏற்பட்டது. தெற்கில் இருந்த பாபிலோனியர்களுடன் பல வேறுபாடுகளுடனே இந்த மக்கள் வளர்ந்து வந்தார்கள். பக்கத்து நாடுகளுடன் போர் புரிவது என தொடங்கி தங்களது எல்கை பரப்பை விரிவாக்கம் செய்யத் தொடங்கினார்கள் இந்த அஷ்ஷிரியர்கள்.

ஒரு எல்கையை பிடித்துவிட்டால் அங்கே இருக்கும் மக்களை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்று விடுவார்கள். இதன் மூலம் அந்த எல்கை மக்கள் எந்த ஒரு பிரச்சினையும் பண்ண வாய்ப்பிலாமல் செய்து வந்தார்கள். கடல்வாழ் மக்கள், அரமேனியன் எனப்படுபவர்கள் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார்கள். மேசபோடோமியா நகரங்களுக்கு இவர்கள் சிம்ம சொப்பனமாக  விளங்கினார்கள். பழைய அஷ்ஷிரியர்கள் இதன் மூலம் சற்று பின் தங்கினார்கள். அதற்கு பின்னர் வந்த அஷ்ஷிரியர்கள் இழந்த இடங்களை மீட்டு மேலும் எல்கையினை விரிவுபடுத்தினார்கள்.

அஷ்ஷிரியர்கள் புயல் போல போரிடுவார்கள். உடைகள் எதுவும் அணியாமல், உடைகள் அணிந்து இருந்தாலும் அதை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு கத்தியை வட்டமாக சுழற்றுவார்கள். அவர்களின் போர் முறை சிங்கம் சினம் கொண்டது போலவே இருக்கும் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

இவர்களின் அரசமைப்பு முறையானது ராஜா, மற்றும் கவர்னர்களை கொண்டது. கவர்னர்கள் சாலை அமைப்பு, ராணுவம், வணிகம் என் எல்லாவற்றையும் மேற்பார்வை செய்வார்கள். ராணுவ அமைப்புக்கு மிகவும் கடுமையான பயிற்சி முறை எல்லாம் தரப்படும். மலைகளில் எல்லாம் சென்று போரிடும் பயிற்சி முறை மேற்கொண்டு இருந்தார்கள். இவர்களுக்கும் கடவுள் உண்டு. பாபிலோனியன், அச்சூர் எனப்படும். ஆனால் மத கட்டுபாடுகளை மக்கள் திணிப்பதை அறவே தவிர்த்தார்கள்.

இவர்கள் போரிட்டதே வணிகத்தை பெருக்கி கொள்ளத்தான் என்பது போல வணிக போக்குவரத்துதனை மிகவும் சிறப்பாக அமைத்து கொண்டார்கள். பல இடங்கள் இவர்களுக்கு கப்பம் கட்டும் இடங்களாக மாறின. வேலைக்காரர்களாக வெற்றி பெற்ற இடங்களில் இருந்து மக்களை இறக்குமதி செய்து கொண்டார்கள். எதிரிகளை மிகவும் துச்சமாகவே மதித்தார்கள். எரிப்பது, வெட்டுவது போன்ற கொடும் தண்டனைகள் வழங்கிய வழக்கம் இவர்களிடம் இருந்தது. இருப்பினும் அஷ்ஷிரியர்கள் மீண்டும் தாழ்வினை அடைந்தார்கள். இவர்களின் கொடுமையான முறை இவர்களுக்கு எதிராக அமைந்தது.

அதற்கு பின்னர் டிக்லாத் பிலேசெர் என்பவர் ராணுவத்தை, அரசு அமைப்பை மிகவும் நெறிபடுத்தினார். உரார்டன்ஸ் எனப்படுபவர்கள் அஷ்ஷிரியர்கள் வணிக போக்குவரத்துக்கு பெரும் தடையாக இருக்க அவர்களை இவர் வென்றது மூலம் மேலும் அஷ்ஷிரியர்கள் தழைக்க ஆரம்பித்தார்கள். இவர் மக்களை பல இடங்களுக்கு இடம் மாற்றம் செய்து ஒரு ஒற்றுமையை உருவாக்கினார் பாபிலோநியர்களையும் இவர் வென்றார். இவருக்கு பின்னர் வந்த சார்கன் என்பவர் எல்கையை மென்மேலும் அதிகரித்தார். இவரின் மகன் தங்களுக்கு எதிராக இருந்த பாபிலோனியாவை முற்றிலுமாகவே அழித்தார். அவருக்கு பின் வந்த இசர்கடன் பாபிலோனியாவை மீண்டும் நிர்மானித்தார்.

இவருக்கு பின்னர் வந்தவர்கள் திறமையற்று போனதால் சைத்தியன்ஸ் மற்றும் சுற்றி இருந்த குறும் நாடுகள் எல்லாம் இந்த அஷ்ஷிரியர்கள் முழுவதுமாக அழிந்து போக காரணமானார்கள். அஷ்ஷிரியர்கள் அற்புதமான நூலகம் ஒன்றை உருவாக்கி இருந்தனர். சுற்றி இருந்த நாடுகள் கொண்ட வெறுப்பு அந்த நூலகத்தையும் அழித்தது. வாழ்க்கையில் சீரழியாமல் இருக்க திறமையானது தொடர்ந்து சந்ததிகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் போர் மட்டுமே திறமை என்றாகாது. மக்களை தம் வசப்படுத்துவது மூலம் மட்டுமே ஒரு அரசு சாதிக்க முடியாது. மக்களுக்கு வேண்டிய தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

பாபிலோனியர்கள் யார்?

(தொடரும்) 

Wednesday, 10 October 2012

அவனுடன் அவள் ஓடிப் போய்விட்டாள்

ரமேஷும், ராதிகாவும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். முதலில் காதல் இனிக்கத்தான் செய்தது. சில வருடங்களில் இனித்த காதல் சில காரணங்களால் புளிக்க ஆரம்பித்தது. அவர்களின் காதலில் கொஞ்சம் இனிப்பை அதிகமாக சேர்த்து இருக்கலாமே என நீங்கள் கேட்கலாம். ஆனால் பழக பழக பாலும் புளிக்கும் என்பது எவரோ எழுதி வைத்தது, எதற்காக எழுதி வைத்தார்கள் என்றெல்லாம் நீங்கள் கேட்க வேண்டியது இல்லை.

திடீரென ஒருநாள், ராதிகா சிவக்குமாருடன் ஓடிப் போய்விட்டாள் எனும் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தான் ரமேஷ். அவன் இந்த விசயத்தை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. சிவக்குமார், ரமேஷிற்கு பழக்கம் தான். ஆனால் ராதிகாவும், சிவக்குமாரும் நெருக்கமாக பழகியதை ரமேஷ் பார்த்தது கூட கிடையாது. இப்படி எனது தலையில் மண்ணை வாரி போட்டு விட்டாளே என கதறினான், புலம்பினான் ரமேஷ். இப்போது கூட எதற்கு இப்படி ஒரு அபசகுனமான ஒரு முடிவு என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் நடந்தது அதுதானே, அது இல்லை என்று எப்படி மறுக்க முடியும்?

சில நாட்கள் கழிந்தது. ஒருநாள் வேறொரு ஊரில் பேருந்து நிலையத்தில் மோசமான நிலையில் இருந்த ராதிகாவை சந்தித்தான் ரமேஷ். தன்னை ஏமாற்றிவிட்டு போனவள் தானே எனும் ஆத்திரம் இருந்தாலும் அவள் இருந்த நிலை அவள் மீது பரிதாபம் கொள்ளச் செய்தது. என்ன ஆயிற்று என்றே வினவினான். தன்னை சிவக்குமார் ஏமாற்றிவிட்டதாக ரமேஷின் காலில் விழுந்து புலம்பினாள் ராதிகா.  ரமேஷிற்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. தன்னுடன் அவளை உடன் அழைத்துச் சென்றான். இப்போது கூட நீங்கள் கேட்கலாம், எதுக்கு அவன் அவளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவனை ஏமாற்றியவளுக்கு கடவுள் தகுந்த தண்டனை கொடுத்து விட்டார், அப்படியே விட வேண்டியது தானே என. ஆனால் நடந்தது அதுதானே.

ரமேஷின் வீட்டில் ராதிகாவை ஏற்றுக் கொள்ளவில்லை. ராதிகாவை தலைமுழுகி விட்டதாக ராதிகா அப்பா புலம்பித் தள்ளினார். என்ன செய்வது என யோசித்தான் ரமேஷ். ராதிகாவிடம் ஒரு திட்டம் சொன்னான். ராதிகாவும் சம்மதித்தாள். அடுத்த நாள் காலையில் ரமேஷ் கூட ராதிகா ஓடிப்போய்ட்டா என்றே ஊரெல்லாம் பேசிக் கொண்டிருந்தது. இப்போது கூட நீங்கள் நினைக்கலாம். ரமேஷ் தானே ராதிகாவிடம் இதற்கு யோசனை சொன்னான். எதற்கு ரமேஷ் ராதிகாவை கூட்டிட்டு ஓடிப்போய்விட்டான் என ஊர் சொல்லவில்லை என. அதுதான் நமது கட்டுப்பெட்டி கலாச்சாரம்.

இப்படித்தான் நீங்கள் தொலைகாட்சித் தொடர்களிலும், செய்தித் தாள்களிலும், உங்கள் கிராமங்களிலும், நகரங்களிலும், சிலரது வீட்டிலும் கூட நடந்து கொண்டு இருப்பதை கண்டு இருப்பீர்கள். நீங்கள் மிகவும் நல்லவராக இருந்தால் அப்போதெல்லாம் என்ன மனுசங்க என்று கோபம் உங்களுக்குள் கொப்பளிக்கும். இவர்கள் எல்லாம் எதற்கு வாழ்கிறார்கள் என ஆதங்கம் கொள்வீர்கள். அதுவும் கற்பனை பாத்திரங்களை கண்டு வெகுண்டு எழுவீர்கள். அதுவே நீங்கள் செய்ய வேண்டிய வாய்ப்பு வந்தால்  எப்படி அவ்வாறு நடந்தீர்கள் என சிந்தித்து பார்க்க கூட உங்களுக்கு நேரம் இருக்காது. ஓடிப்போவதில் மட்டுமே குறியாக இருப்பீர்கள். எதற்கு இப்படி? கர்ம வினையா? கவனக்குறைவா? ஆசையின் உந்தலா? என்ன காரணம்? இதற்கெல்லாம் மூளையின் செயல்பாடுகள், எண்ணங்கள் என்றே குறிப்பிடுகிறார்கள்.

மெண்டல் சிமுலேசன் அதாவது மூளை பாவனை என்று இதனை குறிப்பிடலாம். அதாவது இந்த மூளை பாவனையில் உண்மையாக நடந்த நிகழ்வையோ, அல்லது கற்பனையாக ஒரு நிகழ்வையோ பாவனை செய்து பார்ப்பது. உதாரணத்திற்கு இன்று என்ன நடக்கும் என யோசனை செய்வது, நடந்த போன நிகழ்வுகளை அசை போடுவது, வினோதமான கற்பனை செய்வது, நடந்த ஒன்றை இப்படி செய்து இருக்கலாமே, அப்படி செய்து இருக்கலாமே என நினைப்பது போன்றவை மூளை பாவனையில் அடங்கும். இப்படிப்பட்ட மூளை பாவனை மூலம் ஒரு காரியத்தை மிகவும் அழகாக சாதிக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.

அதாவது நாம் இந்த விசயம் தான் நடக்கும் என மூளை பாவனையில் நாம் ஒரு சில விசயங்களை அணுகும்போது அந்த நம்பிக்கை தன்மையில் அந்த விசயங்கள் உண்மையிலேயே நடந்துவிடும் எனும் நம்பிக்கை பிறக்கிறது. நான் நினைத்தேன், நடந்துவிட்டது என பலர் குறிப்பிடுவதை பார்க்கலாம். இதன் காரணமாக நாம் மூளை பாவனை செய்வதன் மூலம் ஒரு நிகழ்விற்கு நம்மை தயார் படுத்தி கொள்ளலாம். இப்போது ரமேஷிற்கு, ராதிகா தன்னை விட்டுப் போய்விடுவாள் எனும் ஒரு மூளை பாவனை நடந்து இருந்தால் ராதிகா ஓடிப் போனபோது அவன் அதிர்ச்சி அடைய வாய்ப்பு இல்லை என்றாகிறது. சில விசயங்கள் எ ப்படியும் நடக்கும் எனும் எல்லா வாசல்களையும் திறந்து வைத்தாலும் உயரிய எண்ணங்களே மிகவும் அவசியம் என சொல்லப்படுகிறது.

திட்டமிடலுக்கு மூளை பாவனை மிகவும் அவசியம். ஒரு நிகழ்வை நாம் செய்ய விரும்பும்போது அது குறித்து நாம் ஒத்திகை பார்க்கும் வழக்கம் பல வருடங்களாகவே உண்டு. சில நேரங்களில் அந்த ஒத்திகையை நமது மூளை செய்து பார்க்கும். விளையாட்டு வீரர்கள், தேர்வுக்கு செல்ல இருப்பவர்கள் என எல்லாரும் மூளை பாவனை செய்து பார்ப்பதால் பெரும் வெற்றி கிடைக்கும் என்றே சொல்கிறார்கள். ஒரு விசயத்தை பாவனை அதாவது கற்பனை செய்யும் போது நமது ரத்த வேகம் முதற்கொண்டு பல விசயங்களில்  மாற்றம் ஏற்படுகின்றது. ஊக்குவித்தல் போன்ற செயல்பாடுகள் இந்த பாவனையின் மூலம் செழுமைப்படுத்தபடலாம்.

இந்த மூளை பாவனையின் மூலம் ஒரு எண்ணம், அந்த எண்ணத்தை செயல்முறைக்கு கொண்டு வருதல் என்பதை மிகவும் அருமையாக செய்து முடிக்கலாம் என்றே பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. ஒரு இலக்கு நோக்கிய பயணத்திற்கு இந்த மூளை பாவனை மிக மிக அவசியம்.

ரமேஷ் ராதிகாவிடம் நமக்கு ஒரு குழந்தை பிறந்தால் நம்மை நமது பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே சொல்ல அதை ராதிகா ஏற்றுக்கொள்கிறாள். ரமேஷிற்கும், ராதிகாவிற்கும் குழந்தை ஒன்று பிறக்கிறது. அந்த குழந்தையுடன் ஓரிரு வருடங்களில் அவர்கள் ஊருக்கு வர அவர்களை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டார்கள். ரமேஷிற்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது. அதுபோலவே எப்படி நடந்தது? அதுதான் கட்டுப்பெட்டி கலாச்சாரம்.

மூளை பாவனை இரண்டு வகைப்படும். ஒன்று முடிவை பாவனை செய்வது. மற்றொன்று முடிவை நோக்கிய செயல்பாடுகளை பாவனை செய்வது. குழந்தை பிறந்தால் சேர்ந்து வாழலாம் என்பது முடிவு குறித்த பாவனை. குழந்தை பெற என்ன என்ன செய்ய வேண்டும் என்பது முடிவு குறித்த செயல்பாடுகள் பற்றிய பாவனை.

இப்போது ஒரு இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். அது குறித்து முடிவு பாவனை ஒன்றும், முடிவு நோக்கிய செயல்பாடுகள் குறித்த பாவனை ஒன்றும் தொடங்குங்கள். உங்கள் வாழ்வு வளமாகும்.




Tuesday, 9 October 2012

எதற்காக பொய் பேசுகிறோம்?

''நீங்கள் பொய் பேசும் பழக்கம் உடையவரா?''

''ஆமாம், எப்போதாவது பேசுவது உண்டு''

''எதற்காக பொய் பேசுவீர்கள்?''

''தேவை ஏற்படின் அதற்காக பொய் பேசுவேன்''

''எந்த மாதிரியான தேவைகள்?''

''நான் பிறருக்கு நல்லவராக இருக்க வேண்டும் எனும் தேவை ஏற்படும் போதெல்லாம், எனது வாழ்வாதாரத்திற்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் பொய் பேசுவேன்''

''பொய் பேசுவது மிகவும் கடினமான ஒன்றா?''

''அது ஒரு கலை. எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை''

''பொய் பேசுவது ஒரு நோய் என்பது தெரியுமா?''

''இதுவரைக்கும் தெரியாது. அது என்ன நோய்?''

''பொய் ஒரு தொற்று நோய். ஒரு பொய் சொல்லிவிட்டால் அது தொடர்ந்து பரவிக் கொண்டே இருக்கும். அது அடுத்தவரிடமும் சென்று பரவிக்கொண்டு இருக்கும். 

இதுவரை எத்தனை முறை பொய் சொல்லி இருப்பீர்கள்?''

''கணக்கில் இல்லை''

''அப்படியெனில் நீங்கள் முதலில் சொன்னது பொய்யா?''

''எப்போதாவது பொய் பேசுவேன், ஆனால் அதை கணக்கில் வைத்துக் கொண்டது இல்லை''

''நாம் பொய் பேசுவதன் உண்மையான நோக்கம் என்ன தெரியுமா?''

''பிறரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்கத்தான், இது கூடவா தெரியாது. பிறரை ஏமாற்றவும் பொய் சொல்லலாம்''

''எதற்கு பிறரை ஏமாற்ற வேண்டும்?''

''நாம் நன்றாக வாழ வேண்டுமெனில் பிறரை ஏமாற்றத்தான் வேண்டும். இது இயற்கை விதி''

''இயற்கை விதியா?''

''இல்லாத கடவுளை இருப்பதாக சொன்னது கூட பொய் தான்''

''எவர் சொன்னது?''

''ஒரு சொற்பொழிவு கூட்டத்தில் ஒருவர் சொன்னார்''

''அவர் சொன்னது உண்மை  தான் என்பது தெரியுமா?''

''ஆமாம், இல்லை இல்லை. அவர் சொன்னது பொய்''

''அது எப்படி தெரியும்?''

''எனக்குத் தெரியும்''

''நீ அவர் சொன்னதை நம்பாததால் அவர் சொன்ன விசயம் உனக்கு உண்மையாகத் தெரியவில்லை. நீ ஒப்புக் கொள்கிறாயா?''

''இல்லை, அவர் சொன்னது முழுக்க முழுக்க பொய்''

''உனக்குள் ஏற்படும் பயம் ஒன்றுதான் உன்னை பொய் சொல்ல வைக்கிறது என்பது உனக்கு தெரியுமா?''

''இருக்கலாம்'' 

''பயம் இல்லாத பட்சத்தில் பொய் சொல்ல வாய்ப்பு இல்லாமல் போகும் அல்லவா?''

''அப்படி சொல்ல முடியாது. அப்படியும் சொல்லலாம்''

''சொல்ல முடியுமா, முடியாதா?''

''முடியும், பயம்  இல்லையெனில் பொய் தேவை இல்லை''

''வாழ்வில் எந்தவொரு பயம் இல்லாத பட்சத்தில் உண்மையாக இருக்க இயலும்  என்பது தெரியுமா?''

''இதுவரைக்கும் தெரியாது, ஆனால் இப்போது தெரியும்''

''ஒன்றை தெரியாமல் சொல்வது பொய் இல்லை, தெரிந்து கொண்டே தெரியாத மாதிரி சொல்வதுதான் பொய், அதாவது தெரியுமா?'' 

''புரியலை''

''தெரியாமல் சொல்வது அறிவீனம். அறிவீனத்தை அறிவால் போக்கி கொள்ளலாம். நீ அறிவாளியா?''

''தெரியாது''

''பொய் சொல்லாதே''

''எனக்கு சத்தியமாகத் தெரியாது''

''முட்டாளாக இருப்பது எளிது. முட்டாளாக நடிப்பது கடினம். நீ முட்டாளா?''

''தெரியாது''

''பொய் சொல்லாதே''

''எனக்கு சத்தியமாக தெரியாது''

''இவ்வுலகில் எப்படியாவது வாழ வேண்டும் என்றே உயிரினங்கள் போராடுகின்றன. அதில் மனிதர்கள் விதிவிலக்கல்ல. தனது வாழ்விற்கு பங்கம் ஏற்படும் எனில் அதில் இருந்து தப்பிக்க பொய் சொல்வது மனிதர்களின் இயற்கை குணம். பொய் சொல்கிறோம் என்கிற ஒரு உணர்வு கூட அப்போது இருப்பதில்லை. ஏதாவது ஒரு கட்டத்தில் மனிதர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அது பொய் இல்லை என்று மேலும் மேலும் பொய் சொல்வார்கள். நீ அறிவாளி இல்லை, முட்டாளும் இல்லை. அப்படியெனில் நீ என்னவாக இருக்க கூடும்?''

''எனக்கு தெரியாது. அதுதான் சொன்னேனே நான் எப்போதாவது பொய் பேசுவேன்''

''பொய் பேசுபவரா நீங்கள்! ஒருநாளைக்கு எத்தனை முறை பொய் பேசுகிறீர்கள் என்பதை குறிப்பில் வைத்து கொள்ளுங்கள். பொய் பல நேரங்களில் உண்மை போன்றே உங்களுக்குத் தோற்றம் அளிக்கும்'' 

''ஆமாம், நீங்க பொய் பேசுவீங்களா''

''பொய், அது என்னனு எனக்கு தெரியாது''

''....''