Thursday 4 October 2012

நட்சத்திர பதிவர் இல்லாமல் தவிக்கும் தமிழ்மணம்

சார், உங்க பிள்ளைகள் மீது எத்தனை அக்கறை வைத்துள்ளீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? என்றே ராஜ் வீட்டின் உள்ளே வந்தார் ராம்.

அமருங்கள், வந்ததும் வராதுமாக என்ன கேள்வி இது. என்ன விசயம்? என்றே கேட்டார் ராஜ்.

'நேற்று தற்செயலாக உங்களிடம் பேசியபோது, உங்கள் பிள்ளைகள் எப்படி வேண்டுமெனில் இருக்கட்டும் என்று பேசினீர்கள். அது எனக்கு உறுத்தலாக இருந்தது. மேற்கொண்டு அதுகுறித்து நான் பேச வேண்டும் என சொன்ன போது வீட்டிற்கு வாருங்கள் பேசலாம், இப்போது நேரமில்லை என சொல்லிவிட்டு சென்றுவிட்டீர்கள். எனக்கு இரவெல்லாம் தூக்கமே இல்லை. அதுதான் அவசர அவசரமாக உங்களைத் தேடி வந்துவிட்டேன்''

''அவர்களின் சுதந்திரம் தான் நமது சுதந்திரம். அவர்கள் சுயமாக எல்லாம் தெரிந்து கொண்டு போராடி வளரட்டும், அப்போதுதான் வாழ்வின் அர்த்தம் புரியும் என்ற கோணத்தில் தான் நான் அவ்வாறு சொன்னேன்''

''ஒரு நல்ல பாதையை நாம் தான் காட்ட வேண்டும், அந்த பொறுப்பு எல்லா பெற்றோர்களுக்கும் உள்ளது. பிள்ளைகளின் வளர்ப்பில் அக்கறை காட்டாத பெற்றோர்களால்தான் பெரும்பாலான பிள்ளைகள் தடம் மாறி போய்விடுகின்றன''

''அப்படி எப்படி நீங்கள் சொல்லலாம்? எனது பிள்ளைகள் அப்படி எல்லாம் இல்லை. அவர்கள் மிகவும் ஒழுக்கமாகவும், நியாயமாகவும் நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்''

''உங்கள் மனைவி உங்கள் பிள்ளைகளின் விசயத்தில் எப்படி?, ஆமாம் மனைவி, பிள்ளைகள் எங்கே?''

''அவள்  கொஞ்சம் கண்டிப்பாக இருப்பாள் , ஆனால் முழு கண்டிப்பு என்றெல்லாம் சொல்ல இயலாது. மனைவி அவளது தோழி வீட்டிற்கு சென்று இருக்கிறாள். பையனும், பொண்ணும் அவர்கள் நண்பர்களோடு விளையாட சென்று இருப்பார்கள்''

''உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகள் எல்லாம், அதுவும் பள்ளிகளில் எப்படி நடந்து கொள்கிறார்கள் போன்ற விசயங்களில் எல்லாம் நீங்கள் இருவரும் தலையிடுவது உண்டா?''

''அப்படி எல்லாம் இல்லை. எனக்கு நிறைய அலுவல்கள் உண்டு, அவளுக்கும் நிறைய அலுவல்கள் உண்டு''

''இதைத்தான் சொல்கிறேன், பிள்ளைகளின் மீதான அக்கறை என்பது மிகவும் குறைவு. எல்லா பிள்ளைகளும் கேட்டுப் போக வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இப்போதெல்லாம் இ மெயில், பேஸ்புக், டிவிட்டர் என சோசியல் நெட்வொர்க் என பெருகிக் கொண்டே போகிறது. இதில் அவர்கள் ஈடுபாடு கொண்டு தங்களது வாழ்வில் அக்கறை செலுத்தாமல் போகலாம்''

''நீங்கள் எதற்கு இப்படி என்னை பயமுறுத்துகிறீர்கள்? நானோ அவர்கள் மிகவும் நேர்மையாகவும், நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்றே இருக்கிறேன். இதை எல்லாம் எனக்கு சொல்ல நீங்கள் யார் என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது''

''எதிர்கால சந்ததியினர், எதிர்கால சந்ததியினர் என சொல்லி நமது சந்ததியினர் பொறுப்பின்மையுடன்  நடந்து கொண்டால் எப்படி எதிர்கால சந்ததியினர் முன்னேற இயலும். எதற்கும் நான் அடுத்த வாரம் வருகிறேன். உங்கள் பையன், பெண் இருவரது பள்ளி நடவடிக்கைகள், உங்களிடம் உண்மை பேசுகிறார்களா, எப்படி நடந்து கொள்கிறார்கள் என அறிந்து எனக்கு சொல்லுங்கள். நான் இதுகுறித்து கட்டுரை எழுதி தமிழ் திரட்டி ஒன்றில் இணைக்க வேண்டும். அந்த திரட்டி நட்சத்திர பதிவர் இன்றி திணறிக் கொண்டு இருக்கிறது''

'' சரி சொல்கிறேன், வந்த உங்களுக்கு ஒரு காபி கூட தரவில்லை''

''பரவாயில்லை, அடுத்த முறை எனக்கு விருந்து வைத்துவிடுங்கள்''

ஒரு வாரம் ஒரு வினாடியில் கழிந்து போனது. ராம் ராஜுவை ஒரு பூங்காவில் சந்திக்க வேண்டும் என பிரியப்பட்டு அழைக்கிறார். ராஜ் சம்மதம் தெரிவித்து வருகிறார்.

''நீங்கள் சொன்னது சரிதான், என் பிள்ளைகள் என்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் மிகவும் தவறான பாதையில் போய்க் கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த ஒரு வாரத்தில் ஊர்ஜிதம் செய்து கொண்டேன்''

''இதற்குதான் உங்களை நான் பூங்காவிற்கு வர சொன்னேன். வீட்டில் வைத்து பேச இயலாது. சரி, தெரிந்ததும் என்ன செய்தீர்கள்''

''காட்டு கத்தல் கத்தினேன். இரண்டு அறை கூட அறைந்துவிட்டேன். இனிமேல் இப்படி நடக்கமாட்டோம் என அழுதார்கள்''

''சரியாகி விடும் என நினைக்கிறீர்களா''

''ஆமாம்''

''இதுதான் பொறுப்பின்மை. அது எப்படி ஒரு நாளில் சரியாகும். நீங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வர வேண்டும். பிள்ளைகள் இனி சாமர்த்தியமாக நடந்து கொள்ளப் பார்ப்பார்கள். உங்களுக்கு இதமான விசயங்களை மட்டுமே சொல்லி உங்களை மேலும் ஏமாற்றப் பார்ப்பார்கள். வயது நிலை அப்படி, அவர்களின் பழக்கங்கள் அப்படி. நிதானமாக மாற்றப் பாருங்கள்''

''கவனமாக இருக்கப் பார்க்கிறேன்''

''நீங்கள் உங்கள் பிள்ளைகளின் குருநாதர். உங்களைப் பார்த்தே உங்கள் பிள்ளைகள் வளரும். சரி போனால் போகட்டும், பாவம் என்றெல்லாம் இருக்காதீர்கள். அதிக கண்டிப்பும் அவசியமற்றது. விசயங்களை மிகவும் தெளிவாக பேசுங்கள். என்ன சொல்கிறீர்களோ அதன்போல நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒன்று சொல்லி, நீங்கள் வேறு விதமாக நடந்தால் உங்கள் பிள்ளைகள் நம்ம பெற்றோர்களே இப்படி என இறுமாப்பு கொள்வார்கள்''

''விருந்து ஒன்று ஏற்பாடு செய்கிறேன்''

''அதெல்லாம் வேண்டாம். ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கிடைத்தது அதுவே போதும்''

''எனது கண்களைத் திறந்து விட்டீர்கள்''

''தயவு செய்து ஒருபோதும் மூடிவிடாதீர்கள்''. 

Tuesday 2 October 2012

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்
நீயோ என்னுள் நீயாக இருக்கத் துடிக்கிறாய்
உன்னை நான் புறந்தள்ளிச் செல்கையில்
நீ புறக்கணிக்கப்பட்டதாக புலம்புகிறாய்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

உன்னை என்னுள் சுமக்கத் தொடங்கிவிட்டால்
என்னைத் தொலைத்த நிமிடமும் அதுதான்
நீயும் நானும் ஒன்றென்றே நன்றென்றே
குருட்டு காவியமும் பாடும் நிமிடமும் அதுதான்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

ஒற்றை வரிக் கதை ஒன்று
உனக்காக மட்டும் சொல்கிறேன் இன்று
ஆற்றைக் கடக்க முனிவர் அவரொடு
அங்கே அப்பழுக்கற்ற அழகிய யுவதி
சேற்றை பூசியபடி சாமான்யன் ஒருவன்

யுவதியின் அவதியை கண்டான் சாமான்யன்
தன்தோளில் ஏறியே அமரச் செய்தான்
காற்றை போலவே கடந்தான் முனிவருடன்
மறுகரை தாண்டியதும்  யுவதி நன்றியுடன்
வணக்கம் சொல்லியே போயே போயினள்

பலநேரம் முனிவரும் சாமான்யனும் நடந்தே
வெகுதூரம் அடைந்தனர் காட்டினுள் இருட்டாய்
முனிவரோ யுவதியின் வதனம்பற்றி வினவவே
வேறு தலைதிருப்பி இறக்கியாச்சு அவளை
மனதில் இன்னும் சுமக்கிறீரோ நீர்முனிவரோ

சாமான்யன் வார்த்தை உரைத்தது சுரீரென்றே
தவம் கலைத்தே முடித்தனன் முனிவரும்
வேசம் தரித்து விஷம் கொண்டு
உலவித் திரிவது உலகில் எங்கனம்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

என்னைப் போல இருந்திட நீ நினைக்கையில் 
மண்ணுக்குள் போய்விடவே மனசும் ஏங்கும்
உன்னைப் போல நீயும் இருந்தால்
உலகம் உனக்கென்றதாகவே தினமும் தோன்றும்
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்

அறிவியல் சொல்லும் ஒரு கதை
சொல்லி முடிக்கிறேன் மனதில் வை
ரெட்ரோ வைரஸ் ரெட்ரோ வைரஸ்
கதையின் நாயகன் கவனமாய் கேள்
ஆர் என் ஏ கொண்ட செல்லின் அமைப்பு

அறிவியல் விதி ஒன்று
டி என் ஏ தான் ஆர் என் ஏ வாக மாறி
புரதம் உண்டாக்கும்

ரெட்ரோ வைரஸ்
உடல் செல்லுக்குள் நுழைந்தே
தன் ஆர் என் ஏவை டி என் ஏவாக்கி
உடல் செல்லை கொல்லும்

உன்னை என்னுள் பரவ விட்டால்
என்னை எனக்கு எனக்கே புரியாது
காதலி என்று சொல்லிக் கொண்டு
மனக் கதவின் ஓரம் நிற்காதே
நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

Monday 1 October 2012

மத மாற்றம் மன மாற்றம் தருமா?

எனக்கு இந்த சாமியாரின் தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது. என்ன செய்வது என்றே யோசித்தேன். வீட்டின் வெளியில் காலாற நடந்தேன். மழை தூறல் மேனி மேல் விழ மனம் மிகவும் லேசாக இருந்தது.

நான் இந்த மதத்துக்காரன் என்றுதானே என்னிடம் இந்த சாமியார் வந்து தொலைக்கிறார். மதம் மாறிவிட்டால் என்ன என்று யோசனை வந்தது? வேறொரு மதம் மாறிவிட்டால் அந்த மதத்து குருமார்கள் வந்து தொலைப்பார்களே என யோசித்து மதமே வேண்டாம் என விட்டுவிட்டால் என யோசித்தேன். அது  வேண்டவே வேண்டாம் தந்தை பெரியார் தாடியோடு வந்து நிற்பாரே என மிகவும் அதிகமாக யோசித்தேன். எப்படியும் புதியவன் என்பதால் வேற மதத்து குருமார்கள் வர தயங்குவார்கள், அதனால் வேறொரு மதம் மாறிவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

எனக்கு எப்படி இந்த மதம் கிடைத்தது? அம்மாவிடமும் அப்பாவிடமும் கேட்டபோது அது அப்படித்தான்டா என்றே சொன்னார்கள். எனக்கு கோபமாக வந்தது. நான் எதற்கு இந்த  மதம் கொண்டவனாக திரிய வேண்டும்? எனக்கு வேறொரு மதம் வேண்டும் என்றேன்? எதற்கு என்றார்கள். என்னை கனவில் தினமும் சாமியார் தொல்லை செய்கிறார், அவரது தொல்லையில் இருந்து நான் விடுபட வேண்டும் என்றேன். கிளுகிளுப்பான சாமியாரா என்றார் அப்பா. அப்பாவை நோக்கி கொழுப்பா உங்களுக்கு என்றார் அம்மா. இனி அவர்கள் சண்டையில் எனது மத மாற்றம் மறந்து போகும் என நினைத்து அங்கிருந்து விலகினேன்.

எனக்குத் தெரிந்த மதம் மாறிய சிலரை சென்று சந்தித்தேன். நான் மதம் மாற வேண்டும் என நினைக்கிறேன், எந்த மதம் நல்லது என சொல்லுங்கள் என்றேன். ஒருவன், நான் அந்த மதத்தில் இருந்தவரை எனது வாழ்க்கை சீரானதாக இல்லை, ஆனால் இந்த மதம் வந்தவுடன் மிகவும் சீரான வாழ்க்கை வாழ்கிறேன் என்றான். என்ன காரணம் என்றேன். எல்லாம் மதம் சொல்லும் போதனை தான் என்றேன். அப்படி என்ன நீ மாறிய மதம் சொல்லிவிட்டது என்றேன். அன்பு, அன்பு அன்பு என்றான். யோசித்தேன். நான் இப்போது இருக்கும் மதமும் அப்படித்தானே சொல்கிறது என நினைத்து கொண்டு, வேறு என்ன சொல்கிறது என்றேன். மனம் நிம்மதியாக இருக்க வழி சொல்கிறது என்றான். என்ன என்ன வழிகள் என்றேன்? எனக்கு நேரமில்லை, நீ இந்த மதத்திற்கு மாறினால் எல்லாம் புரியும், முதலில் எனது மதத்திற்கு மாறு என்றான். வேறொருவனிடம் என்றேன்.

அவன் நான் மதம் மாறியதால் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்றான். ஏன்டா குப்பை, மதம் மாறாம இருந்தா கூட வெளிநாடு நீ போயிருக்கலாம் என்றேன். அவனோ அந்த மதத்தில் இருந்தவரை நான் குப்பை, இப்போ இந்த மதத்துக்கு வந்ததால நான் கோபுரம் என்றான். நீ என் மதத்துக்கு மாறு, அப்புறம் உனக்கு ஈசியா வெளிநாடு வாய்ப்பு வாங்கித் தரேன் என்றான். அவன் அவன் மதத்தை அவனது மதம் என சொந்தம் கொண்டாடுகிறார்களே என தோணியது. எனக்கு வெளிநாடு செல்ல வேண்டும் எனும் ஆசை நிறையவே உண்டு. வெளிநாடு செல்வதற்கு  மதம் மாற துணிந்துவிட்டேன். அவனிடம் எப்படி மதம் மாற வேண்டும் என விபரங்கள் கேட்டேன். அவன் சில நடைமுறைகள் சொன்னான். பெயர் மாற்றம், உருவ மாற்றம், பழக்க மாற்றம் என பல விசயங்கள். ஒவ்வொரு மதத்தில் இத்தனை கட்டுபாடுகளா என யோசித்தேன். ஆனால் அடுத்த நாள் அவனை வந்து பார்க்குமாறு சொல்லி சென்றான்.

முதலில் பார்த்தவனிடம் இது குறித்து விபரங்கள் சொன்னதும், அவனுக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது. என்ன காரணத்திற்கு அவனது மதத்திற்கு மாறுகிறாய், அதற்கு பேசாமல் உனது மதத்திலேயே நீ இருக்கலாம், இரண்டும் ஒன்றுதான். எனது மதம் மட்டுமே வேறு. எனது மதத்தில் சேர்வதாக இருந்தால் சொல் என சொல்லிவிட்டு போய்விட்டான். சாமியார் தொல்லை வேண்டாம் என நினைத்து வெளிநாட்டு ஆசை வந்து தொத்திக் கொண்டது. அன்று இரவெல்லாம் தூங்க வேண்டாம் என உறுதியாக இருந்தேன். தூங்கினால் தானே அந்த சாமியார் வந்து தொலைகிறார்.

''நாளைக்கில இருந்து உன் கனவுல நான் வரமாட்டேனு நினைச்சியா'' என்றார் சாமியார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. தூங்காமல் உட்கார்ந்து இருந்தாலும் இந்த சாமியார் வந்து தொலைகிறாரே என்று எரிச்சலுடன் ''ஆமாம், நீ வரக்கூடாது, நாளையில் இருந்து நான் வேறு மதம்'' என்றேன். ''மதம் மாறினால் பெயர் மாற்ற வேண்டுமே'' என்றார் சாமியார். ''நான் நல்ல பெயரை யோசித்து வைக்கிறேன்'' என்றேன். ''நானே சொல்கிறேன், உனது பெயர் மன்சவ்'' என்றார் சாமியார்.

''இதென்ன பெயர், அந்த மதத்தின் வாசனையே இல்லை'' என்றேன் நான். ''வாசனைப் பொருட்களை பெயரில் தூவு, வாசனை வரும்'' என சாமியார் சிரித்தார். ''நான் பெயர் முதற்கொண்டு எல்லாம் எனது நண்பனிடம் கேட்டுக் கொள்வேன், நீங்கள் போகலாம்'' என்று சொன்னேன். ''மதம் மாறுவதன் மூலம் மனம் மாற்றம் வரும் என நினைக்கிறாயா?'' என்றார் சாமியார். ''சாமி, மனமாற்றத்தினால் தானே  மதமே மாறுகிறேன்'' என்றேன் எகத்தாளத்துடன். ''அப்படி என்ன மனம் மாற்றம்'' என்றார் சாமியார். ''எதோ ஒன்று'' என்றேன்.

''வெளிநாடு போனாலும் அங்கேயும் என்னால் வர இயலும், இவ்வுலகம் எனக்கு சொந்தம்'' என்றார் சாமியார். ''நான் வெளிநாடு போக இருக்கிறது, உங்களுக்கு எப்படி'' என்று குழைந்தேன். ''யாம் அறிவோம், விடிந்துவிட்டது நீ உனது நண்பனை கண்டு வா'' என்றார் சாமியார்.

''ஏம்பா , உட்கார்ந்துட்டே இப்படியா  தூங்குவ, ஒழுங்காப் போய் படு. உட்கார்ந்துட்டே கனவு காண்றது. உனக்கு ஒருத்திய கட்டி வைச்சாத்தான் நீ எல்லாம் உருப்படுவ'' என அம்மாவின் சத்தத்தில் அலறிக் கொண்டே எழுந்தேன்.

அப்போது தொலைபேசி ஒலித்தது. அம்மாவே எடுத்தார். ''ரொம்ப சந்தோசம்டி, பையனும், அம்மாவும் நல்லா இருக்காங்களா, நாளைக்கு வந்து பார்க்கிறேன், இன்னைக்கு நேரமாயிருச்சி'' என அம்மாவின் இந்த பக்க குரல் மட்டும் கேட்டது. அம்மா தொலைபேசியை வைத்ததும் கேட்டேன்.

''யாரும்மா போன்ல'' என்றேன்.

''என் பெஸ்ட் பிரண்டோட பொண்ணுக்கு பையன் பிறந்து இருக்கானாம், பேரு கூட முன்னமே செலக்ட் பண்ணிட்டாங்களாம்''

''என்ன பேரு'' என்றேன்.

''மன்சவ்''

''மன்சவ்'' என்னையும் அறியாமல் கத்தினேன்.

''எதுக்கு இப்படி கத்துற'' என அம்மா கத்தினார்.

மதம் மாற்றம் மன மாற்றம் தருமா? மன மாற்றமே மத மாற்றத்திற்கு காரணமா? விடை தெரியாமல் சாமியாரை மனமுருக அன்று வேண்டினேன்.