Friday, 13 January 2012

நேசம் போட்டிகள் எப்போது களைகட்டும்?



நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்கள்


இதுவரை இந்த போட்டிகளுக்கு என எழுதியவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது என்பதை நினைக்கும்போது பதிவர்கள் நிறையவே யோசித்து கொண்டிருக்கிறார்கள் என தெரிகிறது. நான் ஒரு சிறுகதை, கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கிறேன். பொங்கலுக்கு பின்னர் வெளியிடலாம் என இருக்கிறேன். 

அதற்கு முன்னர் என்றோ எழுதிய புற்று நோய் எனும் கதையை இங்கே மீண்டும் பதிவு செய்கிறேன். இந்த போட்டி குறித்த விபரங்களை அறிந்து கொள்ள இங்கே அழுத்துக

புற்று நோய் - சிறுகதை (இது இந்த போட்டிக்காக அல்ல, போட்டிக்காக வேறு ஒரு கதை எழுதி கொண்டிருக்கிறேன்) 

//புதனவெள்ளி மருத்துவமனை வளாகத்தில் ஆறு மருத்துவர்கள் மிகவும் யோசனையுடன் அமர்ந்து இருந்தார்கள். மிகவும் நிசப்தமான அமைதி நிலவியது. ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் யாராவது பேச்சைத் தொடங்கமாட்டார்களா என எதிர்பார்ப்புடன் இருப்பது அவர்களின் முகத்தில் அப்படியே தெரிந்தது. அமைதியை கலைத்து தலைமை மருத்துவர் ஜெயபால் பேசினார்.

''இன்னைக்கு வந்திருக்க பேஷண்ட் ரொம்பவும் கிரிட்டிக்கல் கண்டிசன்ல இருக்கார், அவருக்கு அறுவை சிகிச்சை செஞ்சாகனும் ஆனா அதற்கான செலவை ஏத்துக்குற வசதி அவங்களுக்கு இல்லை. யாரோ சொல்லி இங்க கொண்டு வந்திருக்காங்க, இந்த கேன்சரை வெட்டினாலும் திரும்ப வந்துரும், இப்போ போராடுற உயிருக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க''

''அறுவை சிகிச்சை செஞ்சிரலாம், இதுக்கு யோசனைப் பண்ண வேண்டியதில்லை'' என்றார் துணை மருத்துவர் கோபால்.

''மருத்துவ செலவு யார் கட்டுவாங்க'' என்றார் ஜெயபால்

''நாம் எப்பவும் ஆராய்ச்சிக்குனு வாங்குற ஃபண்ட்ல இருந்து உபயோகிப்போம், இப்படி உயிருக்குப் போராடுறவங்களை காப்பாத்துறது நம்மளோட தர்மம்'' என்றார் அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயக்கொடி.

ஜெயக்கொடி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு அந்த நோயாளியின் உறவினர்களிடம் புற்றுநோய் பற்றி சின்ன விளக்கம் கொடுத்தார்.

'புற்றுநோய் எப்படி உருவாகிறது? எதனால் உருவாகிறது? ஒரு முறை வரும் இந்த நோய் உயிர் கொல்லாமல் போகாது. ஒவ்வொரு அங்க அமைப்பையும் கூறு பார்க்கும் இந்த நோய்க்கு உலகமே மருந்து கண்டுபிடிக்க போராடிக் கொண்டு இருக்கிறது. லேசர், எக்ஸ்ரே என ஒளியின் உதவி கொண்டு இந்த நோய் தடுக்கும் முறையை கண்டுபிடித்து ஓரளவே வெற்றி கண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக செல்கள் இரண்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிரியும், அதிலிருந்து இரண்டு இரண்டாக செல்கள் பிரிந்து கொண்டே ஒரு சீரமைப்புடன் வரும். அப்படி இல்லாமல் தான் தோன்றித்தனமாக ஒரு செல் பல செல்களாக மாற்றம் கொள்ளும்போது போதிய சக்தியைப் பெறமுடியாமல் மற்ற செல்களின் உணவையும் தானே தின்று அந்த நல்ல செல்களையும் அழிக்கத் தொடங்கிவிடுகிறது இந்த மாறுபாடு அடைந்த செல்கள். இப்படி மூர்க்கத்தனமான செல்களை அழிக்கப் பயன்படும் மருந்துகள் நல்ல செல்களையும் ஒரு கை பார்த்துவிடுகிறது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்பட்டுவிடுகின்றன.

வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என மரபணுக்களில் கையை வைத்தால் வேறு விளைவுகளையும் கொண்டு வந்து விடுகிறது. எனவே இந்த செல்களை அழிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிலைமையை சீராக்க முடியும் ஆனால் மீண்டும் இந்த செல்கள் தங்களது மாற்றத்தை வெளிப்படுத்த தொடங்கிவிடும். இந்த நோயில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடலில் எல்லா இடங்களிலும் பரவி விடுவது, மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் நிலை கொள்வது. எப்படியும் அவரை உயிருடன் பிழைக்க வைத்துவிடுவோம் 'ஜெயக்கொடி பேசியது வந்திருந்தவர்களுக்கு புரிந்ததா எனத் தெரியவில்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் அறுவை சிகிச்சை முடிந்தது. மருத்தவமனையிலே அவர் தங்க வைக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை முறைத் தொடர்ந்து நடந்து வந்தது. சற்று தேறி வருவதாகவே சொன்னார்கள். உறவினர்கள் பணத்தை புரட்டினார்கள். எப்படியாவது இவர் பிழைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். செல்கள் மருந்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து கொண்டிருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் ஓரிரு வாரங்களில் செல்கள் தனது வேலையை காட்டத் தொடங்கியது. இந்த முறை அதிவேகமாக தனது பணியைச் செய்தது. மருத்துவர்கள் மேற்கொண்டு எந்த முயற்சியும் செய்ய இயலாது என சொல்லிவிட்டனர். அந்த நோயாளி அகால மரணம் அடைந்தார்.

''இந்த கேன்சருக்கு ஒரு முடிவுகாலமே வராதா?' என சோகத்துடன் சொன்னார் ஜெயக்கொடி. ஜெயபால் இதற்காக செலவிடப்படும் நேரத்தையும், பணத்தையும் நினைத்து மனம் வருந்தினார். பல காலமாக நடந்து வரும் ஆராய்ச்சியில் ஒரு முடிவும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக சொன்னார்.

அப்பொழுது ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை வெகுவேகமாக அளிக்கப்பட்டது. உயிருக்குப் போராடிய நிலையில் வந்த அவரை மருத்துவர்கள் காப்பாற்றிவிட்டனர். என்ன ஏது என விசாரிக்காமல் அனைத்து சிகிச்சையும் முடிந்திருந்தது. எப்படி இந்த நிலைமை வந்தது என பின்னர் கேள்விபட்டபோது மருத்துவர் ஜெயக்கொடி மனமுடைந்தார்.

ஒரு அரசியல் தலைவரை கேவலமாக பேசியதற்காக இவரை அந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவர் ஒருவர் வெட்டிவிட்டார் எனவும், இதே போன்று பலமுறை அவர் பலரை வெட்டி இருப்பதாகவும் சில காலங்கள் சிறைக்குச் செல்வதாகவும், பின்னர் சிறையிலிருந்து வெளிவந்தால் இதேபோன்று நடந்து கொள்வதாகவும் கூறினார்கள்.

ஒரு சமுதாயத்தை இதுபோன்ற மனிதர்கள் அழித்துவிடுவது குறித்து மிகவும் வேதனையுற்றார் ஜெயக்கொடி. இப்படி தான் தோன்றித்தனமாக திரிபவர்களை ஒரு கட்டுப்பாட்டில் கொண்டுவர இயலாத வாழ்க்கை முறையை நினைத்துப் பார்க்கையில் புற்றுநோய் நிலைமையை விட இந்த புற்றுநோய் நிலைமை ஜெயக்கொடியை மிகவும் சோகத்திற்குள்ளாக்கியது.

ஏதாவது ஒரு பெயரில் இதுபோன்ற மனிதர்களின் நடமாட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஆராய்ச்சி ஒன்றை ஒருவர் துவங்கினார். இந்த ஆராய்ச்சியும் புற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியைப் போலவே நீண்டுவிடாமல் நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என உலக சமயத்தை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றே ஜெயக்கொடிக்குப் பட்டது.

முற்றும்.//



Thursday, 12 January 2012

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? எனது பெயர் முகமது பின் துக்ளக்

முன்பகுதி 

தொலைந்த நாகரிங்கள் பற்றி பார்க்கும் முன்னர் ஒரு முக்கியமான நபரை பற்றி பார்த்துவிடுவது சிறப்பு தரும் என்பதால் அவரே நம்மிடம் பேசுகிறார்.

--------

எனது பெயர் முகம்மது பின் துக்ளக், அதாவது நீங்கள் எப்படி என் சகோதரன் பின் லேடனை உச்சரிப்பீர்களோ அதைப்போலவே எனது பெயரை நீங்கள் உச்சரிக்க வேண்டும். பேருந்தினை 'பின்னால்' தள்ளினால் என்ன ஆகும் என கேட்டால் 'பின்' வளைந்து விடும் என மொக்கை சொல் சொல்வார்களே அது போல எனது பெயரில் நகைச்சுவை உண்டு என நீங்கள் கருதினால் அது உங்கள் முட்டாள்தனம். எனது பெயரில் நாடகம், திரைப்படம் கூட எடுத்து இருக்கிறீர்கள், அந்த திரைப்படத்தை நான் பார்த்து சிரித்து சிரித்து அழுதேன். சோ எனும் இந்துத்துவா எடுத்த படம் அது. அவரது பத்திரிக்கைக்கு கூட துக்ளக் என்றே பெயர் இட்டு எனது பெருமை நிலை நாட்டி மத நல்லிணக்கத்தை காட்ட முயற்சி செய்து இருக்கிறார். துக்ளக் என்றால் கோமாளி என்று அர்த்தம் தனை சொன்ன சோ வேண்டுமானால் கோமாளியாக இருக்கலாம், நான் ஒருபோதும் கோமாளியாக இருந்தது இல்லை. மேலும் முசலமான் மட்டும் தான் இவ்வுலகில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய நெடுநாளைய கனவு அல்ல. இந்துக்கள், ஜெயின் மதத்தவர்கள் என அனைவரையும் நேசிக்கும் மனப்பான்மை எனக்கு அதிகம் உண்டு. இதை புரிந்து கொள்ளாதவர்கள் பற்றி நான் என்ன செய்ய இயலும்?

என்னை அறிவிற்சிறந்த முட்டாள் என்றே உலகம் அழைத்து வருகிறது கண்டு வெகுவாக மனம் உடைகிறேன். நான் அறிவினை முட்டாள்தனமாக உபயோகித்தேனா என்பது குறித்து விளக்கம் தருமாறு பலர் கேட்கிறார்கள். நான் பல நல்ல நல்ல திட்டங்களை நாட்டில் அறிமுகப்படுத்தினேன், ஆனால் அதை சரிவர செயல்படுத்தவில்லை என்பதால் என்னை அறிவிற்சிறந்த முட்டாள் என்றே சொல்கிறார்கள். நான் ஒன்று கேட்கிறேன், திட்டம் ஒன்றை கொண்டுவந்தால் அதை வெற்றி பெற செய்வது அரசரான நானா, மக்களா? மக்கள் எதையுமே புதிதாக ஒன்றை ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இருப்பதில்லை. அவர்களது நலத்திட்டங்கள் என்று தெரிந்து இருந்தும் எனது திட்டங்கள் தோல்வி அடைந்ததற்கு மக்களே காரணம். அவர்கள் தான் கோமாளிகள், நான் அல்ல என்பதை தெளிவு படுத்துகிறேன்.

நான் பல துறைகளில் தேர்ச்சி பெற்று இருந்தேன். என்னை தத்துவ ஞானி என போற்றுவார்கள். கணித புலமை எனக்கு நிறைய இருந்தது. எனக்கு சமஸ்கிருதம் முதற்கொண்டு பெர்சியன், அரபிக், துர்கிஷ் போன்ற மொழிகளில் புலமை பெற்று இருந்தேன். எனது அரசு எல்கைகள் விரிவடைந்ததால் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றினேன். தொவ்லபாத் என்று பெயரிட்டது உண்மைதான். ஆனால் தேவகிரியில் போதிய வசதிகளை பெருக்க முடியாததால் எனது திட்டம் தோல்வி அடைந்தது. மொத்த மக்களையும் டெல்லியில் இருந்து நான் இடமாற்றம் செய்தது எனது தவறு என்றே சொல்கிறார்கள். தலைநகரை மட்டுமே மாற்ற நினைத்த நான் எப்படி மக்களை என்னுடன் கொண்டு செல்ல முயற்சி செய்து இருப்பேன். நான் தலைநகர் மாற்றியதும் ஒரு கவிஞர் டெல்லி சாத்தான்களின் கூடாரமாக இருந்தது என்று எழுதி இருக்கிறார்.  வரலாற்றை திரித்து திரித்து எழுதுவதுதான் அனைவரின் வேலையா? அது சரி, இந்தியாவின் தலைநகரை டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்திருக்கு மாற்றினால் எப்படி இருக்குமோ அப்படி ஆகிவிட்டது எனது செயல்பாடு, இதற்காக நான் அறிவிற்சிறந்த முட்டாள் என அழைக்கப்படுவது எவ்விதத்தில் நியாயம், என்னை கோமாளி என சொல்வது எப்படி சரியாகும்?

நாணயங்களில் என்னை நானே பதித்து அழகு பார்த்தேன், எனது தந்தையை பதித்து அழகு பார்த்தேன். வரிவடிவ வரைவியல் எனக்கு பிடித்தமானதாக இருந்தது, இதன் காரணமாக நான் ஏராளனமான தங்க நாணயங்கள் உற்பத்தி செய்தேன். நான் எழுதியதில் எனக்கு பிடித்தது என்னவெனில் 'எவர் ஒருவர் சுல்தானுக்கு தலைவணங்குகிறார்களோ அவர்கள் இரக்கமுள்ள இறைவனுக்கு தலை வணங்குகிறார்கள்' என்று குறிப்பிட்டேன். இதன் மூலம் பல நாணயங்கள் அதிக விற்பனைக்கு போனது. அது எனது ராஜ தந்திரம் ஆகும்.


தவறு செய்பவர்களுக்கு, என்னை எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதித்தேன். எப்படி ஹிட்லர் குளிரில் சென்று மாட்டினாரோ அதைப்போலவே எனது படைகள் சீனப் படையெடுப்பின் போது குளிரில் மாட்டி கொண்டன. அதற்காக ஹிட்லரும் நானும் கோமாளிகளா? எனக்கு எதிராக நடத்த அடக்குமுறை போராட்டத்தை எதிர்க்க புறப்பட்ட நான் நோய்வாய்பட்டு இறந்தேன். எனது அறிவை போர் போன்றவைகளில் செலவழிக்காமல் மக்கள் நலனுக்காக செலவழித்து இருக்கலாமோ என இப்போது கண்ணீர் விட்டு கதறுகிறேன், என்ன செய்வது. காலம் கடந்துவிட்டது. 

வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்ற நான் எனது அகங்காரத்தால் சீரழிந்து போனேன், வாழ்க்கையில் சீரழிய முட்டாள்தனமான அறிவு ஒன்றே போதும் என்பதற்கு என்னை உதாரணமாக காட்ட முனைகிறார்கள். அது முற்றிலும் தவறு. எனது அகங்காரம் எனது அறிவை மறைத்தது. வாழ்வில் சீரழிய 'தான்' என்ற அகங்காரம், மற்றவர்களை 'மதிக்காத தன்மை' மற்றும் அன்பை நிலைநாட்டாமல் இருப்பது போன்றவை என்பதுதான் நான் வாழ்வில் கற்று கொண்ட பாடம். இதை நீங்கள் கற்று கொண்டு ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து இந்த உலகத்தில் தீன் இலாஹி அக்பர் என சொல்லிக்கொண்டு மத நல்லிணக்கத்தோடு வாழ வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். 

----------

முகம்மது பின் துக்ளக் உரையை கேட்டதும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்கள் தங்களது அறிவினை முட்டாள்தனமாக உபயோகிப்பதை மட்டும் மாற்றப் போவதில்லை என்பது உறுதியானது. முடிந்த பின் வருந்துவது மனித இயல்பு. 

தொலைந்த நாகரிகங்கள் எப்படி சீரழிந்து இருக்க கூடும்? 


Wednesday, 11 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 4

எனது தந்தை தமிழ் ஆசிரியர் மற்றும் அவர் சில காலங்கள் முன்னர் வரை தமிழ் அடிப்படைவாதியாக இருந்தவர். தமிழ் தொன்மையான, உன்னதமான மொழி என எனக்கு மூளை சலவை செய்து வளர்த்து வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து இப்படி சொல்லி வந்ததும், மற்றும் மற்ற தமிழ் புலமை உள்ளவர்களின் செயலும் என் மனதில் சந்தேகத்தை வரவழைத்தது. அதன் காரணமாக நானே தமிழ் குறித்து ஆராய்ச்சி செய்து தமிழ் தொன்மையான மொழி இல்லை என்பதை கண்டு கொண்டேன். எனது தந்தையார் முன் வைத்த எனது விவாதங்கள் மூலம் எனது தந்தை தமிழ் மீது வைத்திருந்த நம்பிக்கையை சற்று மாற்றியமைக்க வித்திட்டது. தற்போது தமிழ் சார்ந்த பாரபட்ச எண்ணங்களை கைவிட்டுவிட்டார். அந்த சில எண்ணங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதோடு எவரோடும், எந்த நிமிடத்திலும், எந்த இடத்திலும் விவாதம் செய்ய தயார் என செண்பகமுருகன் எனும் ஆங்கிலத்தில் வலைப்பதிவு எழுதும் பதிவர் 2007ம் ஆண்டு பகிங்கிரமாக அறிவிப்பு செய்து இருந்தார்.

ஆராய்ச்சி செய்தேன் என சில இடங்களை என்னைப் போல் தேடிப் பார்த்துவிட்டு, நான் தமிழ் தொன்மையான மொழி என சொன்னேன், அவரோ தமிழ் தொன்மையான மொழி இல்லை என சொல்லிவிட்டார். காலம் காலமாக தொல்பொருள் ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி என செய்தவர்கள் முன்னர் கிடைக்கும் சில விசயங்கள் அடிப்படையில் தமிழ் தொன்மையான மொழி இல்லை என அவர் முடிவுக்கு வந்தது வியப்புக்குரியது. அதே வேளையில் தமிழ் தொன்மையான மொழிதானா எனும் சந்தேகம் அவசியம் அற்றது என்பதற்கு தம் இல் என தெளிந்து கொண்டோம். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும், உயிரற்ற சடப்பொருள்களும் தமிழிலியே பேசின. செண்பகமுருகன் எழுதியதை வைத்து தமிழ் மீது பற்று கொண்டவர்களின் கருத்துகள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது.

மொழியில் இரண்டு வகை உண்டு, ஒன்று எழுத்து மொழி மற்றொன்று பேச்சு மொழி. பேச்சு மொழியை எழுத்தில் வைக்க பழங்கால மனிதர்கள் திணறி இருப்பார்கள். இப்படித்தான் வேத நூல் எனும் ஒரு சிறுகதையில் பேச முடியாத ஒருவர் பேச வேண்டும் என நினைக்கும்போது எழுத்து உருவாக்கப்பட்டது என ஒரு கற்பனை எழுந்தது. மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என தொல்லுயிர் எச்சம் மூலம் கிடைக்கும் விசயங்கள் உணர்த்துகின்றன. ஆனால் இந்த கல்வெட்டுகள் போன்றவை எல்லாம் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டே உள்ளது என தெரிகிறது. ஒன்று இந்த கல்வெட்டுகள் எல்லாம் வரலாற்றை சிதைத்து கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. அது எப்படியெனில்  தொல்லுயிர் எச்சங்கள் கிடைப்பது போன்ற இந்த கல்வெட்டுகள் எல்லாம் காலப்போக்கில் தங்கள் மீது எழுதப்பட்ட அடையாளங்களை சிதைத்து இருக்கலாம் என எண்ண வாய்ப்புண்டு.

சமஸ்கிருதம் பற்றி குறிப்பிடும்போது அது வாய் மொழி என்றே கூறப்பட்டு வந்து இருக்கிறது. ஒலி எழுப்புதல் பொறுத்தே ஒரு மொழி எழுதப்பட்டு இருக்குமெனில் அது தமிழ் மொழியாக முதலில் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் க, த, ட போன்றவைகள் பல விதங்களில் உச்சரிக்க பிராமி, கிரந்தா, சமஸ்கிருதம் என எழுத்து மொழியில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழில் அப்படி இல்லை என சொல்வோர் உண்டு. ஆனால் இதன் காரணமாக தமிழ் மொழி மிகவும் பின்தங்கியது என வாதிட முடியாது. வாடா. வாடா. எனும் வார்த்தைகளில் என்ன வித்தியாசம் எழுத்தில் காண முடியும்? ஆனால் இந்த வார்த்தைகள் சொல்லும் விதத்தில் ஒருவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என கண்டு கொண்ட மொழி தமிழ்.

இப்படி பிறமொழிகளில் உள்ள எழுத்துகள் போன்று இல்லாமல் தனித்தே காணப்பட்டதால் தமிழ் தொன்மையான மொழி என உறுதியாக இறுதியாக அறியலாம் என கூறுவோர் உண்டு. அதிலும் சில சமஸ்கிருத வார்த்தைகள் எல்லாம் தமிழில் உள்ளதால் தமிழ் தொன்மையான மொழி இல்லை என சொல்வோர் உண்டு. ஆனால் தமிழ் வார்த்தைகள் தான் மருவியிருக்கிறது என்பதை எவரும் அறிய முற்படுவதில்லை. ஆங்கில வார்த்தைகள் கலந்து தமிழ் தற்போது பேச்சு வழக்கில் இருப்பதால், தங்கிலிஷ் ஆளுமையால் பிற்காலத்தில் தமிழ் ஆங்கிலம் தழுவியது என சொன்னாலும் சொல்வார்கள். இருப்பினும் எந்த மொழி முதலில் வந்தது என்பது கண்டு கொள்வது கடினமில்லை, ஆனால் தமிழ் முதல் மொழியில்லை என நிரூபிக்க தமிழர்களே முன் நிற்பது  நகைப்புக்குரியது.

தமிழ் கொண்ட மாற்றங்கள் என ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம். எழுத்து, பேச்சு என தமிழ் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. சங்கத்தமிழ், செந்தமிழ், கொடுந்தமிழ் என தமிழ் பிரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கொடுந்தமிழ் காலத்தில் இருக்கிறோம். சென்னை தமிழ், மதுரை தமிழ், நெல்லை தமிழ், கோவை தமிழ் என தமிழ் பேசும் மக்களின் வேறுபாடு தமிழ் எத்தைகைய அழகு மொழி என புரியும். எழுத்து என வரும்போது இந்த பேதம் எழுத்தில் தெரியுமா என நெல்லை பதிவர்கள், மதுரை பதிவர்கள், கோவை பதிவர்கள், சென்னை பதிவர்கள்  என தேடிப்பார்த்தால் தான் புரியும்.

தமிழ், தமிழ் என சொல்வதை விட்டு உருப்படியாக வேலையை பாருங்கள் என சொல்பவர்கள் உண்டு. ஒரு மொழி அழிந்தால் அதன் இனம் அழியும். இந்த பூமியில் எத்தனையோ அழிவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. ஒரு தமிழ் கண்டமே அழிந்து போனதாக கதைகள் உண்டு, ஆனால் அறிவியலில் அப்படி ஒரு கண்டம் இருந்ததற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றே சொல்கிறார்கள். இந்த லெமுரியா கண்டம் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். இது குறித்த தேடல் அதிகம் தேவை எனினும் தொலைந்தது, தொலைந்ததுதான். எப்படி சமஸ்கிருதம் இன்று அழிந்து கொண்டிருக்கிறதோ அது போன்ற நிலை தமிழுக்கு நேரலாம், எனினும் தமிழ் பற்றாளர்கள், தமிழகம் இருக்கும்வரை தமிழுக்கு அழிவில்லை.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே... தமிழர்கள் பூமி உருவானபோதே உருவாகிவிட்டார்கள். இது அறிவியலுக்கு வியப்பை தரும். படிப்பவர்களுக்கு எரிச்சலை தரும். ஆனால் இந்த பூமியில் என்ன நடந்தது என எவருக்கு தெரியும்? வீரஸ் எனும் ஒரு தமிழர் தமிழ் பெருமை குறித்து இப்படி கூறுகிறார். வீரஸ் என்பவரின் இந்த சிந்தனை மிகவும் அழகாக இருக்கிறது.

வெடித்து சிதறிய பூமியானது வாயுக்களாக இருந்தது. வெப்பம் தணிந்ததும் முதன் முதல் பூமியில் எங்கும் தண்ணீர் நிரம்பியிருந்தது. பின்னர் சூரியனின் வெப்பத்தில் தண்ணீர் ஆவியாக தொடங்கியது. அப்படி ஆவியானதும் மலைக்குன்றுகள் மட்டுமே  தெரிந்தன. இதைக்கண்டதும் மலைகளும் மலைகள் சார்ந்த இடங்கள் குறிஞ்சி என தமிழர்கள் சொன்னார்கள். காலப்போக்கில் சில இடங்கள் மரங்கள் உருவாகும் வகையில் இருந்தன. அதைக்கண்டு காடுகளும், காடுகள் சார்ந்த பகுதிகள் முல்லை  என்றார்கள். அதற்குப்பின்னர் சின்ன சின்ன இடங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் என கண்டு கொண்டார்கள். அதை மருதம் என அழைத்து வயலும் வயல் சார்ந்த இடங்கள் என சொன்னார்கள். சில இடங்கள் மிகவும் தாழ்வாக இருந்ததால் அங்கே தண்ணீர் ஆவியாக வில்லை, அந்த இடங்கள் உள்ள தண்ணீர் ஆவியாகி மீண்டும் மழையாக பொழிந்து கடல் போன்று இருந்ததது. அதை நெய்தல் என்றார்கள். கடலும் கடல் சார்ந்த இடங்கள். அதே போன்று சில இடங்கள் வறண்டே காணப்பட்டன, அதைக்கண்டு பாலை என சொன்னார்கள். நீரற்ற வறண்ட பகுதி. இப்படி பூமியின் பெருமையை அழகாக தமிழர்களே சொன்னார்கள் என்கிறார் வீரஸ்.

சமஸ்கிருத மொழி இலக்கியம், கணிதம், மனிதர்கள் என அந்த மொழி அளித்த பங்கு மறுக்கவியலாது. ஆர்யபட்டர், பாஸ்கரர், விஷ்ணு சர்மா, வச்தசயனர், வியாசர், வால்மீகி என ஒரு சமஸ்கிருத பட்டாளமும், திருவள்ளுவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமணர்கள் என தமிழர்கள் பட்டாளமும், இரண்டு மொழிகளிலும் மாபெரும் இலக்கியங்கள் படைத்த ஆண்டு என வரலாறு சொல்வது கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டுதான். அதுவும் முதல் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இலக்கிய சிந்தனையாளர்கள் கோலோச்சி கொண்டிருந்தார்கள். குப்த, பல்லவ ஆண்டு காலம் மொழிகளின் பொற்காலம் என்றே சொல்லப்படுகிறது. வேற்றுமை இருந்த காரணத்தால் பல விசயங்கள் அழிந்து போயின. அதுவும் களப்பிரர் காலம் கரு மேகங்கள் கொண்டு தமிழை அழித்ததாக சொல்வார்கள். இவர்கள் கன்னடியர்கள் எனும் குற்றச்சாட்டு இன்றும் உண்டு. இதே காலத்தில் கிரேக்கர்களின் சிந்தனைகள் கொடிகட்டி பறந்தன. மிகவும் சிறப்பு வாய்ந்த  மொழிகளின் இலக்கியங்கள் குறித்து இனி பார்வையை திருப்புவோம்.