Wednesday, 28 December 2011

மயக்கம் என்ன வியக்கும் வண்ணம்

சார், எதற்கு ஒரு மாதிரி இருக்கீங்க?

வாழ்க்கையே வெறுத்து போச்சுயா, எதுக்கு இந்த உசிரை பிடிச்சி இருக்கணும்னு தோணுது.

சார், எதுக்கும் ஒரு கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா உங்க பொண்டாட்டி உங்களை பெரிய லெவலுக்கு கொண்டு போயிருவாங்க, இப்படி விரக்தியா எல்லாம் பேசமாட்டீங்க.

வெங்காயம், அவளால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்து உட்காந்துருக்கேன், கல்யாணமாம் கல்யாணம், கிளம்பிரு இல்லை கடிச்சி வைச்சிருவேன்.

சில நேரங்களில் பல விசயங்கள் மிகவும் அதிகபடுத்தபட்டு பேசபடுகிறதோ எனும் ஒரு எண்ணம் தானாக எழுவது உண்டு. பிறர் நமக்கு ஊக்க சக்தியாக இருந்தாலும், நம்முள் ஒரு ஊக்கமும், உந்துதலும் இல்லையெனில் நம்மால் ஒரு காரியத்தை செய்ய இயலாது என்பதுதான் நான் கண்டு கொண்ட கற்று கொண்ட பாடம். எதற்கு இந்த எண்ணம் சிந்தனை எழுந்தது எனில் இந்த விசயத்தை முன்னரே எழுதி இருக்கிறேன். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து ஒரு காந்தி மட்டும் ஏன் உருவானார் என்பதுதான்?

மயக்கம் என்ன படம் சரியில்லை என்று கேள்விபட்டேன், ஆனால் விமர்சனம் எதுவும் படிக்கவில்லை. படம் பார்க்க அமர்ந்ததும் படத்தின் வேகம் சற்று யோசிக்க வைத்துவிட்டது. ஆனாலும் மிகவும் பிடித்து இருந்தது. மிகவும் நகைச்சுவையாகவே காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அதுவும் 'ஓட ஓட' எனும் பாடலில் 'சாமி என்ன பங்கம் பண்ணுது' எனும் காட்சி அமைப்பில் சாமி சிலைகள் தலையை தொங்கபோட்டதை கண்டு அதிகமாகவே சிரிப்பு வந்தது. இப்படியாக சென்று கொண்டிருக்கும் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகனும், அவரது நண்பனும் அழுத பின்னர் 'ரொம்பவே அழுதுட்டோம்' என சொல்லும் போது சிரிப்பு வந்து சேர்ந்தது.

ஒரு படைப்பு என்பது என்ன? அதை படைப்பவரின் வலி எப்படி இருக்கும் என்பதை பிறர் எழுத்து மூலம் அறிந்த நான் இந்த படத்தை பார்த்துதான் காவியமாக தெரிந்து கொண்டேன். நான் ஆராய்ச்சி செய்தபோது நான் எனது ஆராய்ச்சி பற்றி வெளியிட இருந்த அதே விசயத்தை, ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது குறித்து ஏமாற்றம் மட்டுமே என்னால் அடைய முடிந்தது. அங்கே வேலைக்கு என ஒரு வருடம் முன்னர் தான் விண்ணப்பம் போட்டு இருந்தேன். வெளியிட்ட ஆராய்ச்சியில் எல்லா வேலைகளும் அவர்கள் செய்தது, ஆனால் சிந்தனை மட்டும் என்னுடையது. அதே வேளையில் ஆராய்ச்சியில் ஒரே சிந்தனை பலருக்கு வர வாய்ப்பு இருக்கிறது, எனவே நாம் செய்து இருக்கலாம் என்கிற ஒரு ஏக்கம் இருப்பது இயல்புதான். அதே வேளையில் எவர் செய்தால் என்ன எனும் பக்குவம் அந்த நாளில் இருந்து எனக்குள் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் புன்னகையுடன் கடக்க பழகி  கொண்டேன். அதைப் போல இந்த எழுத்துகளை திருடினேன், தாரளாம திருடங்க என பதிவுகளும் போட்டு இருக்கிறேன். ஆனால் தனது வேலையை மட்டுமே நம்பும், உயிராக போற்றும் மனிதரின் வலிகள் மிகவும் அதிகம் தான்.

ஒரு திறமைசாலியின் திறமையை எவராலும் அடைத்து வைக்க முடியாது. ஒரு படம் எடுத்த அந்த கதாநாயகன் அதைப்போல பல படங்கள் எடுக்க இயலும், ஆனால் மனம் உடைந்து போகும் பலவீனனாக காட்டி இருப்பது யதார்த்தம். பலர் தங்களது திறமைகளை உணராமலே இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் எடுத்துகாட்டு. உடைஞ்சி போய்ட்டேன் என எத்தனை தடவை எத்தனை விசயங்களில் பேசி இருப்போம். நமக்குள் ஒரு உந்துதல் இல்லையெனில் நம்மால் முன்னேறவே முடியாது. படம் எடுத்தது கதாநாயகன், படத்தை அனுப்பி வைத்தது மனைவி. சில எதிர்மறை விசயங்கள் படத்தில் உண்டு, அதை பற்றி எதற்கு பேசுவானேன்.

ஒரு மனிதன் போராடி சாதிக்கும் போது நமக்குள் கண்ணீர் வந்து சேர்வது இயல்புதான். அதற்கு பின்னணி காரணங்கள் என்னவாக இருந்துவிட்டு போகட்டும். இந்த படத்தை பற்றி இன்னும் இன்னும் எழுதி கொண்டே போகலாம். பல விசயங்கள் கனவாக இருக்கும் என நினைத்தபோது நான் என்ன சீரியலா எடுத்துட்டு இருக்கேன் என இயக்குனர் காட்சிகள் மூலம் நம்மை கேள்வி கேட்பது மிகவும் அருமை.

மயக்கம் என்ன என்கிற வார்த்தையை படத்தின் தலைப்பாக போட்டுவிட்டு மௌனம் என்ன என கதாநாயகனின் மனைவி மூலம் நிறையவே பேசி இருக்கிறார். சில பல நேரங்களில் தவறிப் போகும் மனிதர்களை மன்னித்து அவர்களை நல்ல பாதையில் செல்ல வைக்க இயலும் எனும் இயல்பான வசனங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த மயக்கம் என்ன பலருக்கும் மயக்கத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்.


Tuesday, 27 December 2011

டெரர் கும்மி விருதுகளும் டெரரான நானும்

டெரர் கும்மி விருதுகள் - 2011  காண அழுத்துக   உங்களுக்கு பிடித்த உங்கள் பதிவுகளை இணைத்து விருதுக்கான போட்டியில் கலந்து கொண்டு சிறப்பியுங்கள். 


ஐயா டெரர் கும்மிகளே, வணக்கமுங்க. உங்களோட விருது பற்றிய அறிவிப்பை இங்கே நான் வெளியிடுறதால நான் போட்டியில இணையறது பாதிக்கும்னா அதுபத்தி கவலை இல்லீங்க. நான் என்னோட பதிவுகளை இணைச்சிட்டேன். மறக்காம நடுவர்களுக்கு அனுப்பி வைச்சிருங்க, சொல்லிட்டேன். அப்படி செய்யலைன்னா 'இது ரத்த பூமி' அப்படிங்கிற வசனத்தை 'இது ரத்த உலகம்' அப்படின்னு ஆக்கிபூடுவேன்.

அட சாமிகளா! நான் நினைச்சதை நீங்க செஞ்சிட்டீங்களே! நான் ஒரு பத்தாயிரம் ரூபாயிக்கு ஒரு விருது அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். நிசமாத்தேன், கண்துடைப்புக்கு சொல்லலை. கடனை உடனை வாங்கி கஷ்டப்பட்டு எழுதுறாங்களே, இவங்க எழுத்தை ஊக்கம் செய்ய ஒரு அறிவிப்பு செய்யலாம்னு நினைச்சேன். அதுவும் தமிழ்மணம் இந்த வருஷம் விருது அறிவிப்புகள் இல்லைன்னு சொல்லிருச்சா நல்ல வாய்ப்பா இருக்கும்னு நானும் மனப்பால் குடிச்சேன்.

அதோட மட்டுமா. பல அறிவிப்புகள் எல்லாம் மனசுக்குள்ளார வைச்சிருந்தேன். இணையத்தில் எழுதுறவங்களுக்கு ஏகப்பட்ட ஊக்கத்தொகை, விருதுகள் எல்லாம் அறிவிச்சி எழுதறவங்க நாம வெட்டியா ஒன்னும் எழுதலை அப்படின்னு நினைக்க வைக்கனும்னு. ஆனா என்ன ஒன்னு, பயபுள்ளக நான் விளம்பரம் தேடுறதுக்குதான் இப்படி அலையுதுன்னு மனசை குத்தும் குத்தம் சொல்லிப்போடுவாகனு விட்டுட்டேன்.

 நீங்க மொக்கை பதிவுகளோட கூடாரம் அப்படின்னு சொல்றதை பார்த்தா என் கண்ணுக்கு அப்படி ஒன்னும் தெரியலையே! நீங்க பண்றதெல்லாம் மொக்கை மறுமொழிகளின் ராஜ்ஜியம் அப்படின்னு சொல்றாங்களே, ம்ம்ம். எத்தனை பேரு நாம எழுதற பதிவுக்கு உருப்படியா ஒரு மறுமொழி கூட வரலைன்னு கவலைபட்டு இருக்காங்க. ஒருவேளை நான் எழுதறது கூட மொக்கை பதிவுகள் அப்படிங்கிற உணர்ச்சி இல்லையோ எனக்கு. ஒரு சினிமா படத்தில சொல்லக்கூடிய மிக முக்கிய கருத்தை சீரியஸா சொல்றதை  விட நகைச்சுவையா சொன்னாத்தான் புரியும்னு அந்த காலத்திலேயே என் எஸ் கிருஷ்ணன் ரொம்பவே தீவிரமா செயல்பட்டார், அதுபோல உங்க பதிவுகள் சிலதை படிச்சேன், ரசிச்சேன். நகைச்சுவையை ரசிக்க நான் என்ன நகைக்கடையில செலவு பண்றதுக்கு யோசிக்கிறமாதிரியா யோசிக்கனும். விருது அறிவிப்பு நேரத்தில இப்படி நான் எழுதறது ஒரு வழக்கு நடக்கிற நேரத்துல அந்த வழக்கு பத்தி வழ வழானு எழுதறமாதிரி ஆயிரும், அதுவும் பயபுள்ளைக நான் ஜெயிக்கிறதுக்காக காக்கா பிடிக்குறேனு கோஷம் போடபோறாங்க.

உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் எழுத்து தகராறு வந்ததை படிச்சேன். அந்த எழுத்து தகராருல இப்படி கூட்டமா வெளியே போயிடீங்க அப்படிங்கிற விவரத்தையும் படிச்சேன்.  ரொம்ப பேருக்கு மனசு வருத்தம், ரொம்ப பேருக்கு மனசுல சந்தோசம். நீங்க அடிக்கிற கும்மி எழுத்துல, சீரியஸ் எழுத்து எல்லாம் செத்து போகுதுன்னு ரொம்ப பேரு கவலைபட்டாங்களாம். சீரியசான விசயத்தை படிக்க நாலு பேருதான் இருப்பாங்க அப்படிங்கிற உத்தியை கண்டுபிடிச்சி ரஜினி கணக்கா கலக்கலா பாதை போட்டது நீங்க தான். கும்மி அடிச்சாலும் கம்மியான பதிவுகள் தானே போடறீங்க.

போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றிகள். என்னைப் போல பலர் மின்னஞ்சல் மூலமே உங்கள் போட்டியை தெரிந்து கொள்ளும் நிலை இருப்பதாலும், பலருக்கு தெரியாமல் போய்விட வாய்ப்பு இருக்குமென்பதாலும், எனது நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுமென்பதாலும் இந்த இடுகை. அதோட விட்டுருவமா!

இந்த கும்மி பத்தி கொஞ்சம் எழுதிரலாம்.  கீழே தரப்பட்ட தகவல்கள் தமிழ்வு எனப்படும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கு மிக்க நன்றி.


//புற விளையாட்டுகள்
கும்மியும்     கோலாட்டமும் தமிழக நாட்டுப்புற உழைக்கும் வர்க்கப்
பெண்களிடையே காணப்படும் புற     விளையாட்டுகள் ஆகும்.
இவ்விளையாட்டுகள் பெண்களின் உடல்திறனை வளர்ப்பவையாக
உள்ளன.
 கும்மி
பெண்கள்     வட்டமாகச் சுற்றிவந்து பாடிக் கைகுவித்தடிக்கும்
விளையாட்டு கும்மி ஆகும்.
நாட்டுப்புறப்     பெண்களுக்கே உரிய விளையாட்டாகவும் பெண்களைத்
தெய்வ வழிபாட்டுச் சூழலில் ஒன்றிணைக்கும் கருவியாகவும் கும்மி
விளையாட்டு விளங்குகிறது. கும்மி நிகழ்த்துதலின் போது பெண்களால்
பாடப்படு்ம் பாடல் கும்மிப் பாட்டு என வழங்கப் படுகிறது.
கும்மியானது கும்மி கொட்டுதல், கும்மி விளையாட்டு,முளைப்பாரிப்
பாட்டு, கும்மி தட்டுதல், கும்மி ஆட்டம்
 எனப் பலவாறு
கூறப்பட்டாலும் கும்மி தட்டுதல், கும்மிப் பாட்டு என்பதே
பெருவழக்காக உள்ளது.
கும்மி,     திருவிழாக் காலங்களில் இரவு பகல் இருவேளைகளிலும், பிற
நாட்களில் நிலவொளியில் பொழுது போக்குக்காகவும் பெண்களால்
விரும்பி ஆடப்படுகிறது. பருவமுற்ற பெண்களுக்குச் சடங்கு நிகழ்த்தும்
போதும் கும்மி கொட்டுதல் உண்டு.
குலவையிட்டுக்     கும்மி ஆட்டத்தைத் தொடங்குவதும் முடிப்பதும்
கும்மியின் மரபாக உள்ளது. கும்மியில் கொட்டப்படும் கைத்தாளமே
பக்க இசையாகவும் ஆட்டத்தை வழிநடத்தும்     கூறாகவும்
அமைந்துள்ளது. கைதட்டுதலின் தாள எண்ணிக்கையில் ஒருதட்டுக்
கும்மி, இரண்டுதட்டுக் கும்மி, மூன்றுதட்டுக் கும்மி என்று கும்மி
ஆட்டங்கள் தரப்படுத்தப் படுகின்றன.
கும்மி     விளையாட்டின் போது கும்மி கொட்டும் பெண்கள்
பார்வையாளர்களாக     மாறுவதும்     பார்வையாளர்கள்     கும்மி
கொட்டுபவர்களாக மாறுவதும் இயல்பான ஒன்றாகும்.
கைகளை     உட்புறம், வெளிப்புறம் தட்டிக் கொண்டே கால்களை
மாறிமாறி எடுத்து வைத்து வட்டத்தில் முன்னோக்கி நகர்தல், குனிந்து
நிமிர்தல், உட்புறமும், வெளிப்புறமும் தட்டுதல் ஆகிய ஆட்டக்
கூறுகள் கும்மியில் மேற்கொள்ளப் படுகின்றன.
அம்மன்     கோயில் திருவிழாக்களில் முளைப்பாரி எடுப்பது ஒரு
சிறப்பு நிகழ்ச்சியாக நடத்தப்படும். அந்நிலையில் கும்மி கொட்டிப்
பாடுவதுண்டு.
தானானே தானானே
தானானே தானானே
கும்மியடிக்கிற ரெக்கத்தில
கூட்டமென்னடி பெண்டுகளா
முந்தாங்கி படுது எந்திரிங்க
மூனுபணந்தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)

கும்மியடிக்கிற ரெக்கத்திலே
கூடியிருக்கிற அண்ணம்மாரே
முந்தாங்கிப்படுது எந்திரிங்க
மூனுபணந் தாரே(ங்) கும்பிடுங்க (தானானே)
(ரெக்கத்திலே = இடத்திலே)
வயது     வித்தியாசமின்றி ஆடப்படும் கும்மி விளையாட்டைப்
பெண்களும், சிறு தெய்வச் சடங்குகளும், வழிபாடுகளுமே பாதுகாத்து
வருகின்றன
மகளிர்     விளையாட்டுகள் மன மகிழ்ச்சியையும், பொழுது
போக்கையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. பெண்கள் தங்களின்
அறிவுத் திறத்தையும், உடல் திறத்தையும், கணித அறிவையும்
மேம்படுத்திக் கொள்ள மகளிர் விளையாட்டுகள் வாய்ப்பளிக்கின்றன
எனலாம். //

Monday, 26 December 2011

நானெல்லாம் ஒரு அப்பா!

பொறுப்புகளை தட்டி கழித்தே  பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும்,
பிள்ளைகளை பேணி காக்கும் முறையை தவறவிட்ட சிறுபிள்ளையாய்,
ஆசையாய் பேச வரும் பிள்ளையை ஆயிரம் வேலையை காட்டி தள்ளிவிடும்
ஒரு ஆதரவற்ற நிலை செல்லும் ஆதரவற்ற நிலை காட்டும் நானெல்லாம் ஒரு அப்பா!

எடுத்ததற்கெல்லாம் சத்தம், அந்த சத்தத்தில் இதயம் உடையும் பிள்ளை,
 படுத்தி எடுத்துவிட்டு பாவமாய் பார்க்கும் பார்வை மீண்டும் மறந்து
ஏதேதோ உலகம் என எங்கெங்கோ சென்று அலைந்து தொலைந்து
மார்போடு கட்டி அணைத்து மகிழும் கதை பேசாத நானெல்லாம் ஒரு அப்பா!

தாயுமானவனாய் தவமிருக்காமல் தந்தையுமானவனாய் படியளக்காமல்
சேயின் மனமறிந்து சேவகம் செய்யாமல் செத்த நிலை கொண்டு
வேலை வேலை என ஓட்டமும் நடையுமாய் வெந்து போன காலமும்
நினைவில் வந்து மனதை அழுத்த கலங்கிடும் நானெல்லாம் ஒரு அப்பா!

என் அப்பாவை எண்ணி கலங்கியே ஏக்கத்துடன் நகரும் நாட்கள்
என் பிள்ளையை கண்டு கலங்கியே  கலக்கத்துடன் நகரும் நாட்கள்
என் அன்னையை அருகே வரவழைத்து அரவணைக்காத பொழுதுகள்
நல்ல பிள்ளையாய் இருக்க தெரியாத நானெல்லாம் ஒரு அப்பா!

தனது குழந்தையை சீராட்டி பாலூட்டி உறவாய் இருந்து வளர்த்து
ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அன்புடன் சேவகம் செய்து
நானெல்லாம் ஒரு அப்பா என நாணி கொள்ளாமல்
நான் தான் அப்பா என பெருமையுடன் சொல்லி மகிழ இவ்வாழ்வு போதும், எவருக்கும்!