Friday, 28 October 2011

ஏழாம் அறிவு

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அதில் என்ன குறை இருக்கிறது, எதற்கு இப்படி படம் பார்ப்பவர்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் எனும் சத்தம் தமிழ் திரையுலகில், விமர்சன கூட்டத்தில்  மிகவும் அதிகமாகவே உண்டு. எதுக்குதான் இப்படி பணத்தை செலவழிச்சி குப்பை படம் எடுக்கிறாங்களோ என குறைப்பட்ட படங்கள் தமிழில் அதிகமாகவே உண்டு. நாம் நமது பணத்தை செலவழித்து ஒரு படத்தை மட்டுமல்ல, எந்த ஒரு விசயத்தையுமே செய்யும்போது ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும் ஒரு சில கெட்ட விசயங்கள் இருந்தால் அதை தூக்கிப் பிடிப்பதுதான் மனித எண்ணத்தின் இயற்கை. அதைவிட தன் மொழியில், தன்னால் இயலாத ஒன்றை ஒருவர் செய்து காட்டுகிறாரே என்கிற எரிச்சல் நிறைய பேருக்கு தமிழ் உலகில் உண்டு.

எதற்கெடுத்தாலும் இது அங்கே இருந்து காப்பி அடிச்சது, இங்கே இருந்து எடுத்து போட்டது என புலம்பி தள்ளுபவர்கள் மத்தியில் ஒரு திரைப்படம் அது சொல்ல வந்த விசயத்தை விஷமமாக்கி காட்டும் பண்பு நம்மிடம் அதிகமே உண்டு. அதைப்போல ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்பதை பாலானது எப்படி தன்னிடம் இருக்கும் இனிப்பை அமிலமாக்கி தன்னை திரித்து கொள்கிறதோ அதைப்போல தங்களை தாங்களே குற்றம் சொல்லி தமிழர்கள் தலை குனிந்து கொள்கிறார்கள்.

நமது தமிழ் திரையுலகம் மாற வேண்டும், ஆங்கில படங்களுக்கு இணையாக வளர வேண்டும் என்கிற ஒரு கோட்பாடு எல்லாரின் மனதிலும் உண்டு. அதாவது கதை இருக்க வேண்டும், திரைக்கதை சீராக இருக்க வேண்டும் என்பது பலருடைய எண்ணம். ஒரு நல்ல விசயத்தை மிகவும் தெளிவாக சொல்ல வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு. தொழில்நுட்பம் அதிகம் இல்லாத காலங்களில் பண்பாடு குறித்த, உறவுகள் குறித்த கதைகள் மக்களின் ரசனையை அதிகம் ஈர்த்தன, சிறந்த கதை அம்சம் உள்ள படங்கள் என பாராட்டப்பட்டன. இன்றும் கூட உறவுகள், காதல், நட்பு பற்றிய படங்கள் சிறந்த திரைக்கதை வடிவத்துடன் வந்தால் மக்களால் நேசிக்கப்படுகின்றன. காதல் இல்லாமல் கதை சொல்ல முடியாது என்பதுதான் நமது தமிழ் திரையுலகம் கண்ட ஒரு வெற்றி படிவம். 

பொதுவாகவே நமது முன்னோர்கள் பற்றிய சிந்தனை நம்மில் மிகவும் குறைவு. அவர்கள் தங்கள் சிந்தனைக்கு எட்டிய விசயங்களை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லி சென்றதால் மூட நம்பிக்கை மடையர்கள் என அவர்கள் திட்டப்பட்டார்கள். இதில் சித்தர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். போதி தர்மர் என்ன பெரிய போதி தர்மர்? புத்த மதம் வேறு நாடுகளில் பரவியது, இந்தியாவில் இல்லாமல் ஒழிந்து போனது. இந்து மதத்தின் கோட்பாடுகளை புத்த மதம் திருடியதுதான் என்பார் பலர். ஆனால் புத்த மதத்தின் மிகவும் மென்மையான கடவுளை எதிர்க்கும் கோட்பாடு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என உலகெங்கும் வீரம் பாராட்டியவர்கள் தமிழர்கள் என்பதை பாடப் புத்தகத்தில் கூட வைத்து இருக்கிறார்கள். தமிழர்களின் சிற்ப கலை, நுட்ப கலை என பல விசயங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டு விட்டன. 

புராணங்களில் சொல்லப்பட்ட பல விசயங்கள் நம்மவர்களால் கேலி கூத்தாக்கப்படுவது உண்டு. அதெல்லாம் எப்படி சாத்தியம், இதெல்லாம் எப்படி சாத்தியம் என வெட்டியாக கூவிவிட்டு போய்விடுவார்கள். கூடு விட்டு கூடு பாயும் கலை அறிந்த திருமூலர், சகல மருத்துவங்களையும் சொல்லி சென்ற போகர். இந்த சித்தர்கள் பற்றிய வரலாறு மிகவும் விசித்திரமான, நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும். நாம் எப்பொழுதும் நம்மை பெருமை படுத்திப் பார்ப்பதில்லை என்பதுதான் இயற்கையாக நடக்க கூடிய விசயம்.

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள், அதாவது பணம், நகை, கலை உட்பட எல்லாம் வெளிநாடுகளில் தான் பெரும் பரவலாகப் பேசப்படுகிறது. தியானத்தை, யோகா பயிற்சி முறையை, எண்களை தந்தது இந்தியாதான் ஆனால் அதை கற்று கொண்டிருப்பது உலகில் உள்ள மக்கள். நாம் பெருமைப்பட்டு கொண்டு நாமும் கற்று சிறக்க வேண்டும். உலகப் பொதுமறை என்பது திருக்குறளுக்கு மட்டுமே கிடைத்த பெருமை, எந்த ஒரு நூலுக்கும், அதுவும் மத நூலுக்கும் கூட அப்படி ஒரு பெருமை கிடையாது. 

தமிழ் பற்றிய பெருமையை தமிழர்கள் நாம் தான் பேச வேண்டும். தம்பட்டம் என்பது வேறு. இப்படியெல்லாம் இருக்கிறது என தன்மையுடன் சொல்வது வேறு.  சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர்களை எவரும் காப்பி அடித்தான் என சொல்லி புலம்புவதில்லை. ஒரு அவதார் படம் வந்தபோது அந்த படத்தின் அடிப்படை கதையம்சம் இந்தியாவில் இருந்துதான் திருடப்பட்டது என்பாரும் உளர். பகவத் கீதை சொல்லும் ஒரு அரிய வாசகம் என ஒரு தமிழரால் எழுதப்பட்ட 'எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது' என்பதுதான் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. 

அடுத்தது, படிச்சவன் எல்லாம் வெளிநாட்டுக்கு போயிடுறான் அப்படின்னு ஒரு பேச்சு. வெளிநாட்டுக்கு போனவங்கள எத்தனை பேரு பெரிய சாதனையாளர்கள் அப்படின்னு பேரு எடுத்து இருக்காங்க. இந்தியாவில வசதி இல்லை, ஊழல் அது இது அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே உண்டு. எனக்கு தெரிந்து எனது நண்பர்கள் இன்னும் பலர் இந்தியாவில் தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். நான் சாதித்ததை விட அவர்கள் நிறையவே சாதித்து இருக்கிறார்கள். வெளிநாடு வேண்டாம் என வாய்ப்பு கிடைத்தும் அதை ஒதுக்கி தள்ளியவர்களை நான் கண்டதுண்டு. அது எதற்கு,  படிக்காதவங்க கூட வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். எல்லாம் பொருளாதார வேறுபாடு. திரை கடலோடி திரவியம் தேடு என சொல்லி வைத்த சமூகம் நமது சமூகம் தான். அதைப்போலவே உலகில் வாழ்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றார்கள் என்கிறது வரலாறு. இது போன்ற குற்றசாட்டுகளை, நமது மக்களை நாமே மதிப்பது இல்லை என்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் படத்தில் வருவது சகஜமாகிவிட்டது. 

ஐந்து உணர்வுகள் தான் உயிரினங்களுக்கு பொது, அதாவது பார்க்கும் தன்மை, கேட்கும் தன்மை, தொடுதல் உணர்வு, சுவை உணர்வு மற்றும் வாசம் உணர்வு. சில உயிரினங்களுக்கு இந்த உணர்வுகள் சற்று குறைவாகவே இருக்கும். சில உயிரனங்கள், காந்த சக்தி, மின் சக்தி போன்ற வேறு பல சக்திகளை உணரும் தன்மையும் உண்டு என சொல்வார்கள். நாய் ஊளையிடுது, நரி ஊளையிடுது என அதற்கு காரணம் காட்டிய தன்மை நம்மில் உண்டு. மேலும் பல உணர்வுகள் நமது உடலுக்குள் நரம்புகளால் தூண்டப்படுகின்றன என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. அதாவது நமது உடலில் உள்ள உறுப்புகள் எப்படியெல்லாம் வேலை செய்கின்றன என்பது இந்த உணர்வுகளின் அடிப்படையில் தான். நமது மூளை செயல்பாடு நரம்புகள் மட்டும் வேதி பொருட்களினால் நடைபெறுகிறது என்பதுதான் இப்பொழுது நாம் கண்டு கொண்ட ஒரு விசயம். 

இதையெல்லாம் தாண்டி இப்பொழுது மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சி பெருமளவில் நடத்தபடுகிறது. இது மிகவும் அளப்பற்கரிய முன்னேற்றம். எந்த மரபணு எந்த புரதத்தை உருவாக்கும் என்பது வரை நமது அறிவியல் சென்று கொண்டிருக்கிறது. எந்த மரபணு எந்த நோயை உருவாக்கும் என்பது வரை நமது பயணம் செல்கிறது. ஆனால் இது மட்டுமே காரணி அல்ல என்பதும் அறிவியலுக்கு தெரியும். மேலும் ஒன்றை மறந்து விடுகிறார்கள், நமது அறிவு மரபணுக்களில் ஒளிந்திருப்பது இல்லை. எனது தாய்க்கு தெரியாத ஆங்கிலம் எனக்கு தெரியும். எனது தந்தைக்கு புரியாத மொழி எனக்கு புரியும். எனக்கு தெரியாத கலைகள் அவர்களுக்கு தெரியும். இது நரம்புகளின் செயல்பாடு என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். இந்த கற்று கொள்தல் எல்லாம் மரபு வழியாக செல்வதே இல்லை. எனது தாத்தாவுக்கு தெரிந்த கலை எனக்கும் தெரிந்து இருக்க வேண்டும். இந்த கருத்தில் கொண்ட வேறுபாடுதான் லமார்க் என்பவரை விட டார்வின் பெயர் அதிகம் பேசப்பட்டது.

லமார்க் கொள்கை 'தந்தையின் அறிவு பிள்ளைக்கு செல்லும் என்பது' டார்வின் கொள்கை 'எது உயிர் வாழ பயன் தருகிறதோ அந்த தன்மை மற்ற உயிருக்கு செல்லும் என்பது'  படிக்காமல் ஒருவர் உயிர் வாழ முடியாது என நிலை வந்தால் படிக்கும் தன்மையுள்ள மரபணு உருவாகலாம் என்பதுதான் பரிணாமத்தின் சாரம்சம். ஆனால் இது மட்டும் காரணி அல்ல என்பதை நினைவு கொள்வோம். வாழ்வில் பல விசயங்களை சுருக்கி கொள்ள முடியாது.

உலகில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று இயற்கை. மற்றொன்று செயற்கை. மொழியில்லா ஒலி எழுப்புவது இயற்கை. மொழியுடன் ஒலி எழுப்பவது செயற்கை, அதாவது கற்று கொள்தல். போதி தர்மனின் ஆய கலைகளும் அவனது பேரனுக்கு செல்வது என்பது எல்லாம் கதை. ஆம் கதை. இது கதை. ஒரு ஊருல ஒரு ராஜாவாம் என சொல்லும் கதையை போல இந்த கதையை கதையாக பார்க்க வேண்டும். அதற்கடுத்து பொதுவாக இன்றைய கால கட்டத்தில் விமானத்தில் ஒரு மசால் பொடி எடுத்து கொண்டு போனால் கூட நாய் மோப்பம் பிடித்துவிடும். அதையெல்லாம் தாண்டிய ஒரு வரத்து போன சிந்தனை இந்த போதி தர்மனை சிதறடித்து விட்டது. போதி தர்மனின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்யமாக சொல்லி இருந்தாலே இந்த ஏழாம் அறிவு பெரிதளவு பேசப்பட்டிருக்கும், அதைவிட்டுவிட்டு இவரை தெரியுமா என இண்டர்நெட்டிலும், சில பல இடங்களிலும் திருடிவிட்டு நான் தான் இவரை கண்டுபிடித்தேன் என கொடி தூக்குவது கொடுமை. இந்த போதி தர்மனை பற்றி விக்கிபீடியாவில் எழுதியவர் கூட இத்தனை தம்பட்டம் அடித்து கொண்டிருக்க மாட்டார். இன்னும் பல வரலாற்று மனிதர்கள் விக்கிபீடியாவில் இருக்கிறார்கள். பல புத்தகங்களில் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் களப்பிரர் காலம் பற்றிய சிந்தனையை கதையில் சொன்னது உண்டு. பல்லவர், சேரர், சோழர், பாண்டியர் என அவர்களது வரலாற்றில் சொல்லப்பட்ட விசயங்கள் பெரும் காவியங்கள் தான். ஒரு தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய இளங்கோ அரச குடும்பத்தில் இருந்தவர்தான். புத்தர் கூட அரசு குடும்பத்தை சேர்ந்தவர்தான். போதி தர்மர். இவரை தெரியுமா? அட அட! இந்த போதி தர்மரை விட சித்த வைத்தியம் எனும் முறை தெரிந்த பல குடும்பங்கள் தமிழகத்தில் உண்டு.

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன். பார்க்கப் போறா, பார்க்கப் போறா, ஐயோ பாத்துட்டா என தன்னை பார்க்காத ஒரு பெண்ணை தான் பார்ப்பதால் தன்னை பார்ப்பாள் என நினைக்கும் செயல்பாடு. அந்த கண்கள் மூலம் பிறரை மயக்கலாம் என்பது பொது விதி. கிறங்கடிக்கும் பார்வை. மயங்க வைக்கும் பார்வை. ஒருவரை நேருக்கு நேராக பல நிமிடங்கள் எங்குமே பார்க்காமல் பார்த்து கொண்டே இருங்கள். அதற்கடுத்து நடக்கும் நிகழ்வுகளை குறித்து கொள்ளுங்கள். காதலால் கசிந்து உருகி, கண்ணீர் மல்கி. சிலரை பார்க்க அச்சம் ஏற்படும். சிலரை பார்க்க சந்தோசம் ஏற்படும். இந்த உணர்வுகளை கண்கள் எப்படி மூளைக்கு கடத்துகிறது? ஒளியின் தன்மையா? டெலிபதி என ஒன்றும் உண்டு. நாம் இங்கு ஒன்றை நினைக்க எங்கோ இருப்பவர் உணர்தல். இப்படி பல மர்மங்கள் அடங்கியது இந்த வாழ்வும், நமது எண்ணங்களும். அதைப் பற்றிய ஆராய்ச்சி உலகில் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில விசயங்கள் புரியாமலே இருக்கின்றன. ஆறாம் அறிவு என்பதே சுத்த மோசம். அதில் ஏழாம் அறிவாம். இருப்பது ஒரு அறிவுதான். அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில் தான் உள்ளது நமது எண்ணமும் செயல்பாடும்.

ஆறாம் உணர்வு எனும் ஒரு படம் நமது தமிழரால் 'நைட் சியாமளன்' என்பவரால் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் அந்த படத்தில் வரும் கதை எல்லாம் சாத்தியம் இல்லாத கதை. இறந்தவர்களுடன் பேசுவது, இறந்தவர்களை காண்பது என்பதெல்லாம் கண்கட்டி வித்தை. ஆனால் அந்த கண்கட்டி வித்தையை நம்மில் பலர் உணர்வதாக சொல்வது உண்டு. எனது ஊரே பேய் ஊரு என்றுதான் சொல்லப்பட்டு உண்டு. அந்த கதையின் முடிவு அந்த இயக்குனரை பாராட்ட சொல்லும். சாத்தியம் இல்லாத ஒன்று எனினும் சொல்லப்படும் விதம் பலரை கவர்ந்து விடும்.

எந்திரன் எப்படி ஏமாற்றியதோ அப்படித்தான் பலரும் இந்த ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்து இருப்பார்கள். சிலரும் பாராட்டி இருப்பார்கள்.

அறிவியல் பக்கம் போக வேண்டும் எனும் ஆர்வத்துடன் பணியாற்றும் தமிழ் இயக்குனர்கள் சற்று திரைக்கதையில் கவனம் செலுத்துவதோடு இல்லாமல் நாலு டான்சு பாட்டு, ஒரு குத்து பாட்டு, ஒரு மெலடி, மூணு சண்டை காட்சி என கழுத்தறுக்காமல் அந்த நேரத்தையெல்லாம் திரைக்கதை அமைப்பில் செலவழித்தால் நலம். பாடல் எல்லாம் கேட்பதற்கு என இசை வடிவமாக மட்டுமே வெளியிடுங்கள். பாடலாசிரியர்கள் பிழைத்துவிட்டு போகட்டும்.

சரி இந்த படத்தோட விமர்சனம் எழுதலைன்னு நீங்க கேட்டா, கஷ்டப்பட்டு பல வருசம் உழைச்சி அட்டகாசமா ஒரு படம் எடுத்திருக்கோம்னு நினைச்சி பெருமைபட்டவங்க கிட்ட போங்கப்பா நீங்களும் உங்க குப்பை சிந்தனையும் அப்படின்னு சொன்னா அவங்களுக்கு வலிக்குமா வலிக்காதா? அது சரி இப்படி எழுதி என்னதான் சொல்ல வரேன்னு நீங்க கேட்டா நான் என்ன பண்றது. 


Tuesday, 25 October 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? காட்டுமிராண்டி நாகரிகம்

உலகம் எப்படி படைக்கப்பட்டது என்பதற்கு திரும்பத் திரும்ப ஒரே விசயத்தையே சொல்லிட்டு இருக்கிறதுல அப்படி என்ன திருப்தியோ? உலகத்துல முக்காவாசி பேரு கடவுள்தான் அதுவும் அல்லாதான் இல்லை இல்லை பரம பிதாதான், இல்லை இல்லை பிரம்மாதான் உலகத்தை படைச்சாருனும், இல்லை இல்லை இது இயற்கையாக நடந்தது அதாவது இயற்கைத் தேர்வு அப்படினும் தெரியாத ஒன்னை இப்படித்தான் இருக்கும்னுசொல்லிட்டு இருக்காங்களே அவங்களை எல்லாம் என்ன பண்றது. 

என்ன பண்றது, அதுவும் ஒருத்தருக்கும் உண்மையான உண்மை தெரியாது, இது எப்படி எனக்கு தெரியும்? எல்லாம் யூகம் தான், ஆனா ஊர்பட்ட கதை எல்லாம் எல்லாரலாயும் சொல்ல முடியும் அப்படிங்கிறதுக்கு ஒவ்வொரு நாட்டுக்காரங்களும் அவங்க அவங்க கற்பனைக்கு ஏத்த மாதிரி சொன்ன விசயங்களை படிச்சிப் பார்த்தா விளங்கும். 

இப்படித்தான் ஒருத்தரோட பேசிட்டு இருந்தேன். நீங்க கடவுளை நம்புறமாதிரி தெரியலையேன்னு சொன்னாரு. எதை வைச்சி சொல்றீங்கனு நானும் கேட்டு வைச்சேன். உங்க பேச்சுல இருந்து தெரியுதுன்னு சொன்னாரு. சரி நான் அறிவியலை நம்புறேனு நினைக்கிறீங்களான்னு கேட்டேன். அப்படியும் தெரியலைன்னு சொன்னாரு. நம்பி நம்பி நாசமா போனவங்கதான் நம்ம மனித குலம், அதனால நான் எதையுமே நம்புறது இல்லை அப்படின்னு சொன்னேன். நீங்க உசிரோட இருக்கறதை கூடவானு கேட்டு வைச்சார். ஆமா, அப்படின்னு சொன்னேன். என்னை சரியான பைத்தியம்னு அவர் சொல்லிட்டுப்  போய்ட்டார். இப்ப நல்லா யோசிச்சி பாருங்க. உசிரு அப்படிங்கிறதுக்கு ஒரு விளக்கம் நாம சொல்லி வைச்சிருக்கோம். அதாவது விதிகளுக்கு உட்பட்டு வாழற வாழ்க்கை. இப்படி இருக்கனும், அப்படி இருக்கனும். இது இப்படி இருந்தா ஈர்ப்பு விசை. அப்படி இருந்தா எதிர்ப்பு விசை அப்படின்னு ஒரு பெரிய திட்டம் எல்லாம் போட்டு வைச்சிட்டோம், கணக்கு பண்ணி வைச்சிட்டோம். எல்லாம் ரொம்ப சரியாத்தான் இருக்காம். அறிவு, சிந்தனை எல்லாம் நம்மகிட்ட பெருக்கெடுத்து ஓடிக்கிட்டு இருக்கு. 

சரி, நாம நினைக்கிற, பேசற விசயங்கள் எல்லாம் மத்தவங்க என்ன சொல்லி இருக்காங்க. அதை எப்படி சொன்னாங்க, எதை வைச்சி சொன்னாங்க அப்படிங்கிற அடிப்படையில்தான். உற்று நோக்குதல், ஒன்றை மற்றொன்றுடன் தொடர்பு படுத்துதல். இதுதான் வாழ்க்கையின் முழு கட்டாய சூழல். அப்படி நாம தொடர்பு படுத்தாம வாழப் பழகிகிட்டா பல விசயங்கள் அடிபட்டு போகும். ஆனா அது சாதாரண விசயம் இல்லை.

 இதுக்குதான் நம்ம ஆளுங்க அட்டகாசமா சொல்லி வைச்சாங்க. கல்லை கண்டால் நாயை காணோம். நாயை கண்டால் கல்லை காணோம். ஒரு கல்லில் செதுக்கப்பட்ட நாய் உருவம் அந்த சிற்பியின் திறமையால் உயிருள்ள நாயைப் போன்று தென்படுமாம். அட அட என்ன ஒரு சிந்தனை. ஆனா இதையே ஒரு நாய் எதிர்படும் போது, அந்த நாயை அடிக்க கல் தேடியபோது கல் காணவில்லை என்பது கூட ஒருவித சிந்தனைதான்.

ஆனா காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் இதெல்லாம் இல்லை. இனப்பெருக்கம், வயிற்றுக்கு உணவு. தனக்கு போட்டியாக வருபவர் எதிரி. இந்த காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் சிக்கி தள்ளாடும் மனிதர்கள் இன்றும் உண்டு. காட்டுமிராண்டிகள் நாகரித்தில் கல் மட்டுமே ஆயுதம். தற்போதைய மனிதர்கள் இந்த மனிச குலம் எப்படி உருவாச்சு, என்னவெல்லாம் செஞ்சாங்க அப்படிங்கிறதை ஆராய்ச்சி செஞ்சி பல விசயங்கள் சொல்லி வைச்சிருக்காங்க. நமக்கு முன்னால வாழ்ந்தவங்க இப்படியெல்லாமா இருந்தாங்க அப்படின்னு நாம நினைக்கிறப்ப பிரமிப்பு மட்டுமே மிஞ்சும். கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு சொல்லி வைச்சி பிரமிக்க வைக்கிறாங்க.

சரி திருடப் போவோம். முழு நீள சித்திரமா சொல்றதை விட இரத்தின சுருக்கமா சொல்லி வைச்சிருவோம். உணவு, உறக்கம் இல்லாம பல விசயங்களை தெரிஞ்சிக்க சுகமான வாழ்க்கையை எடுத்து எறிஞ்சிட்டு இந்த உலகம் பல விசயங்கள் தெரிஞ்சிக்கிரனும்னு போராடின மனிதர்களுக்கு நாம எப்பவும் மரியாதை செலுத்தனும்.

மனித குல வரலாறு பத்தி தெரிஞ்சிக்கனும்னா ரொம்ப பேரு நிறைய புத்தகங்கள் எழுதி இருக்காங்க. இவங்களுக்கு எல்லாம் ஒரு விசயத்தை பத்தி தெரிஞ்சிக்கிரனும் அப்படிங்கிற ஆர்வம் தான். மத்தபடி இவங்க எல்லாம் பெரிய புத்திசாலிகளோ, அறிவாளிகளோ கிடையாது. உற்று நோக்குதல். ஒன்றை மற்றொன்றுடன் தொடர்பு படுத்துதல் அப்படிங்கிற ஒரு சிந்தனை மிக மிக முக்கியம். வெகு குறிப்பிட்ட சிலரே அறிவு சார்ந்த விசயங்களில் தங்களை அர்பணித்து கொண்டார்கள்.

ஒரு குழந்தைகிட்ட ஒரு பொருளை கொடுங்க. அந்த குழந்தை அந்த பொருளை அப்படியே வைச்சிருந்தா அந்த குழந்தை மங்குனி. அதை உடைச்சி பிரிச்சி மேஞ்சா ஒரு தேடல். அப்படி பிரிச்சி மேஞ்ச குழந்தையை அதட்டினப்புறம் அடுத்தவாட்டி பிரிச்சி மேயாம போனா இனி அந்த குழந்தை மங்குனி. அதாவது ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஆர்வம் வந்து சேரும். ஆனால் காட்டுமிராண்டிகள் நாகரிகத்தில் கல் ஒன்றுதான் கண்ணுக்கு தென்பட்டது.

இந்த கல்லை வைத்து என்னவெல்லாமோ செய்து பார்த்தார்கள் என்கிறது வரலாறு. ஏழு மில்லியன் ஆண்டுகள் முன்னர் இந்த மனித குலம் தோன்றி இருக்கலாம் என்பது நிரூபிக்கபடாத ஒரு விசயம். ஆப்ரிக்காவில் மூன்று மில்லியன் ஆண்டுகள் முன்னர் இந்த மனித குலத்தின் முன்னோர்கள் தோன்றியிருக்க கூடும் என்பதும் ஆராய்ச்சியின் வெளிப்பாடு. பல மனித குலம் அழிந்து போயிருக்கிறது என்பது ஆராய்ச்சி காட்டும் உண்மை.

காட்டுமிராண்டிகள் நாகரிகம் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.




Friday, 21 October 2011

தொலைநோக்கிப் பார்வை - (சவால் சிறுகதை -2011)

                                 தொலைநோக்கிப் பார்வை - சிறுகதை  (2011)


இருபத்தி நான்கு வயதாகும் விஷ்ணு ஒரு விசித்திரமான ஆர்வம் கொண்டவன். திடமான உடல். நன்றாக கலைத்து விடப்பட்ட தலைமுடி. மாதக்கணக்கில் சவரம் செய்யப்படாத முகம். கண்களில் அடக்க முடியாத ஒரு தேடல். நான்கு மணி நேர உறக்கம். இரவு வந்துவிட்டால் நட்சத்திரங்கள் பார்க்கத் தொடங்கிவிடுவான். நிலாவில் ஏதேனும் தெரிகிறதா என கண்களை கசக்கி கசக்கிப் பார்ப்பான். என்ன காரணமோ பத்தாம் வகுப்பு படிக்கும்போது வானமும், நட்சத்திரங்களும் அவனது மனதில் ஒருவித ஈர்ப்பினை ஏற்படுத்தி இருந்தது. அவனது குடும்ப சூழல் காரணமாக பத்தாம் வகுப்புடன் படிப்பை விட்டுவிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியதாகிப் போனது. பகலில் வயலில் வேலை செய்தது போக நேரம் கிடைக்கும்போதெல்லாம் நூலகங்களில் சென்று வானவியல் பற்றிய புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டான். மிக குறைந்த அளவிலான வான சாஸ்திரம் புத்தகங்களே நூலகங்களில் இருந்தன.

கடந்த ஏழெட்டு வருடங்களில் இவன் புத்தகங்களில் இருந்து எடுத்து குறித்து கொண்ட குறிப்புகள் இவனுக்குள் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருந்தன. எவரேனும் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கிடைக்கமாட்டர்களா எனும் ஏக்கத்தில் நட்சத்திரம் பற்றி பேசினால் நடிகர் நடிகைகள் பற்றி பிறர் பேசுவது கண்டு ஏமாற்றமே அடைந்தான். இரவு நேரங்களில் தோட்டத்தில் வேலை பார்க்க செல்லும் போது நிலவின் ஒளியை ஒரு இடத்தில் குவித்து வைக்க முடியுமா எனப் பார்ப்பான். வானமும், வயலும் என வாழ்க்கையில் வருடங்கள் மிக வேகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. கடந்த வருடம் தான் கொரட்டூர் பஞ்சு ஆலையில் வேலைக்கு சேர்ந்தான்.

விஷ்ணுவுக்கு வீட்டில் பெண் தேட ஆரம்பித்தார்கள். கொரட்டூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சின்னவயல் எனும் ஊரில் எட்டு வரை படித்திருந்த ஜெயலட்சுமியை விஷ்ணுவுக்குப் பிடித்துப் போனது, ஜெயலட்சுமிக்கும் விஷ்ணுவைப் பிடித்துப் போனது. ஜெயலட்சுமி வெட்டப்படாத நீண்ட கூந்தல் உடையவளாய் இருந்தாள். அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமண தேதி ஆறு மாதங்களுக்கு பின்னர் என குறித்து வைத்தார்கள்.

பெண் பார்க்க சென்ற நாள் அன்றே தனது ஆர்வத்தை பற்றி ஜெயலட்சுமியிடம் பேசினான் விஷ்ணு. 

''எனக்கு இந்த வானம், நட்சத்திரங்கள் மேல நிறைய ஆர்வம், உங்களுக்கு அதுபோல எதுவும் ஆர்வம் உண்டா''

விஷ்ணுவின் ஆர்வத்தைக் கேட்ட ஜெயலட்சுமி முதலில் புரியாமல் விழித்தாள். 

''வானத்தையே வெறிச்சிப் பார்த்துட்டு இருப்பீங்களா, நான் ஒருத்தி இருக்கிறதை மறந்துர மாட்டீங்களே''

''இல்லை, வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் பத்தி நிறையத் தெரிஞ்சிக்க ஆசைப்படுவேன், கல்யாணம் பண்ண முன்னாடியே மறக்குறதைப் பத்தி கேட்கறீங்களே''

''உங்களுக்குப் பிடிச்சது எனக்கும் பிடிச்சா நல்லா இருக்கும்''

''ம்ம், நல்லா பேசறீங்க, ரொம்பப் பிடிச்சிருக்கு'' 

விஷ்ணு தன்னை வந்துப் பார்த்துச் சென்றதில் இருந்து வானவியல் பற்றிய ஆர்வம் கொண்டாள் ஜெயலட்சுமி. 

பின்னர் ஒரு நாள் இது குறித்து அவளுடைய தோழி ஆண்டாளிடம் பேசினாள். 

''உனக்கு வானத்தைப் பார்த்து ஆராய்ச்சி பண்றவங்க யாருனாலும் தெரியுமா?''

''என்ன திடீருனு கட்டிக்கிறப்போறவரு வான விஞ்ஞானியா''

''அவருக்கு விருப்பமாம், அதான் என்னனு தெரிஞ்சிக்கிறனும்''

''ம்ம் வீரபத்திரனு ஒருத்தர் ஸ்ரீவைகுண்டத்தில் இருக்காரு, நீ வேணும்னா அங்கே போய் பாரு''

இதனை ஜெயலட்சுமி விஷ்ணுவுக்கு தெரியப்படுத்தினாள். விசயம் கேள்விப்பட்ட விஷ்ணு வீரபத்திரனை சந்திக்கச்  சென்றான். ஆய்வாளர்களுக்கே உரிய தோற்றத்துடன் இருந்தார் வீரபத்திரன். ஆய்வகம் பெரும் நிலப்பரப்பில் கட்டப்பட்டு இருந்தது. அங்கிருந்து வானத்தை ஆராய்ச்சி பண்ணும் தொலைநோக்கிகள் நிறுவப்பட்டு இருந்தன. 

விஷ்ணுவினைக்  கண்டவர்கள் யாரோ ஆராய்ச்சிக்காரன் என்றே நினைத்தார்கள். விஷ்ணுவின் ஆர்வத்தை கண்ட வீரபத்திரன் விஷ்ணுவிடம் சில புத்தகங்கள் தந்தார். அங்கே நிறுவப்பட்ட தொலைநோக்கியை அவனுக்குக் காட்டினார். 

''விஷ்ணு, இந்த தொலைநோக்கியின் மூலம் வியாழன் கிரகத்தின் மேற்பகுதி வரை ஓரளவுக்குப் பார்க்க இயலும்'' 

''சார் ஏதாவது நட்சத்திரம் பற்றி சொல்ல முடியுமா?, என்னவெல்லாம் இந்த தொலைநோக்கி மூலம் பாத்து இருக்கீங்க'' 

''ஒன்னா, ரெண்டா கணக்கிலேயே அடங்காத எந்த நட்சத்திரத்தைப்  பத்தி சொல்றது, புத்தகங்களைப் படிச்சிப் பார், ஒரு மாசம் கழிச்சி வா'' 

 அவனது செல்பேசி எண்களை தனது செல்பேசியில் எழுதியவர் அவனது பெயரை Vishnu informer எனக் குறித்துக் கொண்டார். அவர் கொடுத்த புத்தகங்கள் அவனால் வாசிக்கப்படாதவைகள். புரியாத ஆங்கிலத்தில் சில புத்தகங்கள். கடினப்பட்டு புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் புத்தகங்கள் சில. விஷ்ணு தன்னிடம் இருந்த கைகளால் எழுதப்பட்ட குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனைக் கண்டான். 

''நான் வரேன் சார்''

''ம்ம்''

ஆய்வகத்தில் இருந்து பிரதான சாலையை வந்து அடைந்தான் விஷ்ணு. அவனது செல்பேசி ஒலித்தது. விஷ்ணுவை அழைத்தார் வீரபத்திரன். 

''குறியீடுகள் அடங்கிய புத்தகம்தனை வந்து தந்துட்டுப் போ. எனக்கு நாளைக்கு ஒரு கலந்துரையாடலுக்குத் தேவைப்படுது, மறந்துபோய் உன்கிட்ட கொடுத்துட்டேன்.''

''அதுக்கென்ன சார் வந்து தந்துட்டுப் போறேன்''

புத்தகம்தனை பாதி வழியில் சென்றவன் மீண்டும் வந்து கொடுத்துச் சென்றான். அவனுக்குள் அந்த குறியீடுகள் பற்றிய ஆர்வம அதிகமானது.

திருமண வேலைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தன. பஞ்சு ஆலையில் வேலை பார்த்த வேறு இருவரின் வாய்த் தகராறு, அவர்களுக்குள் அடிதடியில் போய் நின்றது. இந்த விசயம் கொரட்டூர் காவல் நிலையம் வரை சென்றது. கொரட்டூர் எஸ் பி, கோகுல் விசாரித்தார். விஷ்ணுவும் சாட்சியாக விசாரிக்கப்பட்டான். விஷ்ணு சொன்ன சாட்சியின்படி இருவருக்கும் எந்த தண்டனையும் இல்லாமல் எஸ் பி கோகுல் தீர்ப்பு சொல்லி அனுப்பியவர் விஷ்ணுவை அழைத்தார். 

'‘அவங்களை காப்பாத்த நீ பொய் சொல்ற, என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற' 

''நான் என்ன பொய் சொன்னேன் சார், அவங்க இரண்டு பேரும் ஒருத்தரைப் புரிஞ்சிக்காம அடிச்சிக்கிட்டாங்க, அதான் தீர்ப்புச் சொல்லிட்டீங்களே. பிறகு என்ன சார்''

''நீ மாட்டாமல் போகமாட்ட''

எஸ் பி கோகுல் அவ்வளவு நல்லவர் கிடையாது. எப்படியாவது தன்னை ஏதேனும் விஷயத்தில் மாட்டிவிடுவார் எனக் கருதி அடுத்த ஒரு வாரத்திற்குள் ஸ்ரீவைகுண்டத்தில் வேலை தேட ஆரம்பித்தான் விஷ்ணு. கொரட்டூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்வதென்றால் நாளில் பாதி பிரயாணத்தில் செலவாகிவிடும் என நினைத்து அங்கேயே வீடும் தேட ஆரம்பித்தான். இந்த விசயம் வீட்டில் உள்ளவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் விஷ்ணு தனது முடிவில் உறுதியாக இருந்தான்.

வீரபத்திரனைச் சந்தித்தான். 

''சார் இங்கே எனக்கொரு வேலை கிடைக்குமா''

''நீ  Assistant informerஆ எனக்கு கீழே வேலை செய், உனக்குத் தங்குவதற்கு குறைந்த வாடகையில் ஒரு வீடும் ஏற்பாடு செய்றேன்''

''இந்த பெரும் உதவிக்கு நன்றி சார்''

விஷ்ணுவின் உதவியால் வீரபத்திரன் உற்சாகமாக காணப்பட்டார். பொதுவாகவே வீரபத்திரன் ஆய்வகத்தில் இரவு பன்னிரண்டு மணி வரை தனியாய் இருப்பது உண்டு. குறியீடுகள் குறித்து விஷ்ணுவிடம் எல்லா விசயங்களும் சொன்னார் வீரபத்திரன். 

''எப்படியும் பிற நட்சத்திரக் குடும்பங்களில் இருப்பவர்கள் மூலம் நாம் பேச இயலும். சில தகவல்கள் எனக்குக் கிடைத்து இருக்கு'' 

விஷ்ணுவுக்கு வீரபத்திரன் ஆய்வு பெரு மகிழ்ச்சியை உருவாக்கியது. 

''எனக்கும் அந்தக் குறியீடுகள் பத்தி சொல்ல முடியுமா''

''விஷ்ணு இந்தக்  குறியீடுகள் அனைத்தும் தனது கணினியில் உள்ளது நீ அதனைக்  காண ஒரு குறியீடு எழுதினால் மட்டுமே முடியும் , குறிச்சிக்கோ S V 42 6J. உள்ளே போய் மத்தக் குறியீடுகள் மூலம் பேசலாம்''

''நன்றி சார்''

''என்னோட அப்பா, அம்மா மற்றும் என்னோட பேரு எல்லாம் இதில இருக்கு யாரிடமும் இந்த குறியீடு மட்டும் தர வேண்டாம், உன் மீதான நம்பிக்கை காரணமாகத்தான் தருகிறேன், இங்கே ஆய்வு புரிபவர்களிடம் இதனை பற்றி நான் எதுவும் சொன்னதில்லை  இது மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டால் அவர்கள் வெளிநாட்டுக்கு விலைபேசிருவங்க, இன்னும் முழுமையா ஆராய்ச்சிப் பண்ணி இந்த உலகத்துல நாம மட்டும் இல்லை, பிற நட்சத்திரக் குடும்பத்துல உயிரினங்கள் இருக்குனு நிரூபிக்கனும்'' என எச்சரித்தார் வீரபத்திரன்.  

சில மாதங்கள் விஷ்ணு மிகவும் கவனமாகப் பணிபுரிந்து வந்தான். ஒருமுறை மதிய உணவு வேளையில் வீரபத்திரனுடன் சில வருடங்கள் பணிபுரியும் ராகுலிடம் இந்தக் குறியீடுகள் குறித்த விசயங்கள் பற்றி வாய் தவறி சொன்னான் விஷ்ணு. 

''என்னக் குறியீடு விஷ்ணு, எந்த நட்சத்திரங்கள் பத்தியது, ஏலியன்ஸ்?''

சுதாரித்து கொண்டான் விஷ்ணு.

''ஏலியன்ஸ் இல்லை சார், அது பிற நட்சத்திரங்கள் பற்றியது''

''எத்தனை வருசமா நாங்க இங்க உழைக்கிறோம், எனக்குத் தெரியாத குறியீடு உனக்குத் தெரிஞ்சி இருக்கு, வீரபத்திரனுக்கு நிறைய நெருக்கம் ஆயிட்ட''

''நட்சத்திரங்கள் பத்தி சொல்றதுதான் சார், வேற ஒன்னும் இல்லை''

இதைப் பற்றி ராகுல் அறிந்து கொள்ள முனைந்தவர் தனது நண்பன் கொரட்டூர் எஸ் பி கோகுலிடம் தகவல் தெரிவித்தார். எஸ் பி கோகுல் ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்தார். 

ஒருநாள் வீட்டிற்குச் செல்லாமல் ஆய்வகத்திலேயே இருந்தார் ராகுல். இரவு பதினோரு மணியளவில் எஸ் பி கோகுல் ஆய்வகத்திற்கு வந்தார். ராகுலும், கோகுலும் வீரபத்திரனிடம் சென்று விசாரித்தார்கள். 

''நீங்க விஷ்ணுகிட்ட குறியீடு தந்து இருக்கீங்க, அதை எங்களுக்குத் தரலைன்னா உங்களை உயிரோட விடமாட்டோம், ஏலியன்ஸ் பத்தி தெரிஞ்சி இருக்கு சொல்லுங்க'' மிரட்டினார்கள். 


விஷ்ணுவால் தனக்கு இத்தனை இன்னல்கள் வந்து சேரும் என வீரபத்திரன்  நினைக்கவே இல்லை. இத்தனை வருடங்களாக பாதுகாக்கப்பட்ட இரகசியம் இப்படி ஆகும் என நினைத்துப் பார்க்க இயலவில்லை. ஆனாலும் சமாளிக்கவே எண்ணினார். 

''அந்தக் குறியீடுகள் அமெரிக்காவில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்படுபவை, இந்த உலகம் தோன்றிய உடன் உருவான நட்சத்திரம் பற்றிய தகவல்கள்தான் வேறு எதுவும் இல்லை''

இதை ராகுல் சற்றும் நம்பவில்லை. ஆனாலும் மேலும் வீரபத்திரனை இதைக் கேட்பதைவிட விஷ்ணுவிடம் அதிகம் பணம் தருவதாகச் சொல்லி மிரட்டி வாங்கிவிடலாம் எனக் கருதினார். 

''சரி, உங்களை நம்பறேன்'' எனச் சொல்லிவிட்டு வெளியேறினார்கள் ராகுலும் கோகுலும். 

''கோகுல், விஷ்ணுனு ஒருத்தன் இங்கே வேலை பார்க்கிறான். அவன்கிட்ட நீ விசாரிச்சி இந்த குறியீடு எல்லாம் எப்படி பார்க்கலாம்னு கேளு. இனி இந்த வீரபத்திரனை சும்மா விடக்கூடாது, இந்த இரகசியம் நான் வெளியிட்டா எனக்குத்தான் பேரும் புகழும் கிடைக்கும்''

மறுநாள் விஷ்ணுவை பார்த்த கோகுல் ஆச்சர்யம் அடைந்தார். 

''எனக்குப் பயந்து ஊரைவிட்டு ஓடி வந்துட்டு இப்ப மாட்டிக்கிட்ட எனக்கு இந்த குறியீடு பத்தி விவரம் சொல்லு''

''நான் சார் கிட்ட கேட்டுட்டு  உங்களுக்கு அனுப்புறேன், பழைய பிரச்சினைகள் இப்போ வேணாம் சார்''

''சரி,  இந்தா  ராகுலோட செல்பேசி எண், அவருக்கு மறக்காமல் அனுப்பிரு அப்படி எதுவும் ஏடாகூடமா பண்ண நினைச்ச தோலை உரிச்சிருவேன்''''

''சரி சார்''

நடந்த விசயத்தை வீரபத்திரனிடம் சொல்லி மன்னிப்பு கேட்டான் விஷ்ணு. அதோடு தன்னை மணம் முடிக்க இருக்கும் ஜெயலட்சுமி வீட்டில் சென்று தங்குமாறு கூறினான். வீரபத்திரனும் அன்றே ஸ்ரீவைகுண்டம் விட்டு சென்றார்.

விஷ்ணு ராகுலுக்கு  S W H2 6F -இதுதான் குறியீடு  –விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். 

அதோடு வீரபத்திரனுக்கும் Sir, ராகுலிடம்  தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன், கவலை வேண்டாம் விஷ்ணு என குறுந்தகவல் அனுப்பினான். இந்த இரண்டு விசயத்தையும் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இரண்டு தாள்களில் பிரின்ட் எடுத்த விஷ்ணு அந்த தாள்களை அப்படியே மேசையில் விட்டுவிட்டு போனான்.

அவன் வீரபத்திரனின் ஆய்வகத்தில் இருந்து கதவை பூட்டிவிட்டு வெளியேறிய அடுத்த நிமிடம் ராகுல் வீரபத்திரன் ஆய்வகத்தின் கதவை உடைத்து கணினியில் குறியீடுதனை எழுத கணினி திறக்க மறுத்தது. ராகுல் கோபம் அடைந்தார். விஷ்ணு வெளியில் நின்று அந்த நிகழ்வை எல்லாம் படம் பிடித்தான். காவல் அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னான். 

''ராகுல் சார், நீங்க தப்பிக்க முடியாது''

''நேத்து முளைச்ச காளான் நீ, என்னை மிரட்டுறியா''

''இவ்வளவு படிச்சும் உங்களுக்குத் திருட்டுப் புத்திப் போகலையே, நீங்க இந்த அறையை உடைச்சி வந்தது, அந்தப் பெட்டியில் இருந்து ஆவணங்களைத் திருடினதுனு எல்லாம் படம் பிடிச்சி இருக்கேன்''

''எஸ் பி கோகுல் என்னோட நண்பன்தான், யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது''

''தெரியும் சார் அதான் நான் தகவல் கொடுத்தது வேற இடம்''

அங்கே வந்த காவல் அதிகாரிகள் ராகுலை கைது செய்தார்கள். 

விவரம் அறிந்த எஸ் பி கோகுல் விஷ்ணுவிடம் ‘என்னிக்காச்சும் ஒருநாளைக்கு என்கிட்டே மாட்டாமலா போகப் போற என கொக்கரித்தார்.  வீரபத்திரன், ஜெயலட்சுமி குடும்பத்தினருக்கு நன்றி சொல்லி ஆய்வகம் வந்து சேர்ந்தார். வீரபத்திரன் தலைமையில் விஷ்ணுவின் திருமணம் இனிதே நடைபெற்றது.

எஸ் பி கோகுல். விஷ்ணுவை கைது செய்ய புது திட்டம் தீட்டிக் கொண்டு இருந்த வேளையில் அவரை வேலையை விட்டு ஒரு வருடம் நீக்குவதாக ஒரு கடிதம் அவரது கைகளை தழுவியது.