Thursday, 24 June 2010

கம்பராமாயணம் - 1

பாயிரம் 


கடவுள் வணக்கம்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.

சிற்குணத்தர் தெரிவு அரு நல நிலை
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றனுள்
முற் குணத்தவரே முதலோர் அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்று ஆரோ

ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர் பற்று இலார்

அவையடக்கம்

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து ராமன் கதைஅரோ

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன் எனை
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையி னோர்புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிவிக்கவே

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உரை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நன் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பாஅரோ

முத்தமிழ்த் துறையின் முறை நோக்கிய
உத்தமக் கவிஞர்க்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பண்ணப் பெறுபவோ?

அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறையில் கீறிடின் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?

நூல் வரலாறு

தேவபாடையின் இக் கதை செய்தவர்
மூவர்ஆனவர் தம்முளும், முந்திய
நாவினான் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு அரோ

களம் கண்ட காவியம்

நடையின்நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் ஆறு மாக் கதை
சடையன் வெண்ணெய்நல்லூர்வயின் தந்ததே.

Tuesday, 22 June 2010

எங்கம்மாவுக்கு கல்யாணம்

இருபத்தி மூன்று வயதுடைய இளம்பெண் என்னிடம் இப்படித்தான் வந்து சொன்னாள். ''எங்கம்மாவுக்கு அடுத்த வாரம் திங்கள் கிழமை கல்யாணம், நீங்க அவசியம் வந்துருங்க''. இதை என்னிடம் அவள் சொன்னபோது அவளிடத்தில் எந்தவித தயக்கமும் இல்லை. கூச்சமும் இல்லை. எனக்குத்தான் வெட்கமாக இருந்தது.

அதோடு அவள் நிறுத்தவில்லை, அவள் தனது தாயின் திருமணத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் தானே முன்னின்று செய்யப் போகிறேன் என சொன்னபோது எனக்கு மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது. ஒரே ஒரு புன்னகை. ''ம், வருகிறோம்'' என்றுமட்டும் சொன்னேன்.

 எனக்குள் எத்தனையோ கேள்விகள். எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது. இருந்தாலும் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழ்க்கையை அமைத்து கொள்வதில் என்ன தடை இருந்துவிடப் போகிறது?.

பிடிக்காமல்  வாழ்ந்து கழிக்கும் நாட்களைவிட, பிடித்து கழிக்கும் நாட்கள் அதிகம் இருப்பின் அதுவே வாழ்க்கையின் வெற்றி. ஆனால் நாம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் நம்மை சமாதானப்படுத்திக் கொள்கிறோம். பிடித்த விசயங்கள் என நாம் செய்வது மிகவும் குறைவு. பிடிக்காத விசயங்கள் எனினும் அதை நாம் செய்வது மிகவும் அதிகம்.

ஒருவனுக்கு  ஒருத்தி எனும் கோட்பாடு நன்றாகத்தான் இருக்கிறது. விவாகரத்து பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் மனதில் ரணங்களுடன் எதற்கு எவரும் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும். எதிலும் ஒரு திருப்தியில்லாத தன்மை இருப்பதன் அடிப்படை காரணம் எது.

புரிந்து  கொள்ளல், ஒருவரின் கருத்தோடு மற்றவர் ஒத்துப் போதல் என்பது ஏன் சாத்தியமில்லை. பிடிக்காவிட்டாலும் வாழ்ந்து கழித்துவிட்ட நமது முன்னோர்கள் நமக்கு சொன்னது குடும்ப உறவு விட்டுப் போகக் கூடாது என்பதுதான். இதற்காக மொத்தமாக வலி சுமந்து வாழும் வாழ்க்கை எதற்கு?

வாழ்க்கையில் நிம்மதி என்பதன் அளவுகோல் வேறுபடுகிறது. இந்த வேறுபாட்டினால் மனம் வெறுத்து வாழ்பவர்கள் அதிகம்தான். தனக்காக வாழ்பவர்கள் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவே இருக்கிறார்கள். பிறருக்காக வாழ நினைப்பவர்கள் வாழ்க்கையில் இன்னல்கள் சுமக்கிறார்கள்.


மறுமணம் என்பது மறுக்கப்பட வேண்டிய விசயமல்ல. எனினும் திருமணங்கள் தோற்றுப்போவதன் அடிப்படை காரணம் அறிந்து கொள்ளல் அவசியமாகிறது. எது எப்படி இருப்பினும்  நமது சந்ததியினரும் எங்கம்மாவுக்கு கல்யாணம் என சொல்லாமல் இருக்கும் காலம் எக்காலமோ?

அடியார்க்கெல்லாம் அடியார் 18

நீலகண்டனின் இறுதிச் சடங்கில் பலரும் கலந்து கொண்டனர். பரமேஸ்வரனும், சிவநாதனும் கலந்து கொண்டார்கள். கதிரேசனின் அன்னையும், தாத்தாவும் கலந்து கொண்டார்கள். இறுதிச் சடங்கு முடிந்த கணமே அனைவரும் அவரவர் ஊருக்குத் திரும்பினார்கள். மூன்றாம் நாள் காரியம் முடியும் வரை கதிரேசனும் அவனது அம்மாவும், தாத்தாவும் அங்கே தங்க வேண்டியதாகிவிட்டது. பார்வதிக்குத் துணையாக செல்லாயி இருந்தார். மூன்றாம் நாள் காரியம் முடிந்து புளியம்பட்டிக்கு அம்மா, தாத்தாவுடன் திரும்பினான் கதிரேசன்.

புளியம்பட்டியில் கதிரேசனிடம் எதிர்காலம் குறித்துச் சொல்லுமாறு சிலர் வீட்டிற்கு வந்து சென்றார்கள். செல்லாயிக்கு கோபமாக வந்தது. தனது மகன் சாமியார் இல்லை என சொல்லியும் வம்பாக வந்து செல்கிறார்கள் என எண்ணும்போது மனம் மிகவும் வாடியது. சில தினங்களாகவே இவ்வாறு நடக்க கதிரேசனிடம் பேசினார் செல்லாயி.

''ஏன்பா, அந்த பொண்ணு உன்னை கல்யாணம் பண்ண சம்மதிக்குமா?'' என்றார். ''அந்த தாத்தா செத்துப் போனது எனக்கு கஷ்டமா இருக்குமா, அந்த பொண்ணு சம்மதிச்சா என்ன, சம்மதிக்காட்டா என்ன, இப்ப எதுக்கும்மா அந்த பேச்சு'' என்றான் கதிரேசன். ''அதுக்கில்லைப்பா, நமக்கும் அவங்களுக்கும் ஒத்து வருமா?'' என பேச்சை நிறுத்தினார் செல்லாயி. ''வராமலே போகட்டும்மா, இப்போ எதுக்கு அந்த கவலை, பாவம் அவங்களே கவலையில இருக்காங்க, அங்கேயிருந்து இங்கே வந்ததும் ஏன்மா இந்த கவலை'' என்றான் கதிரேசன்.

செல்லாயி எழுந்து கொண்டே ''இருக்கற என் உசிருப் போயிரக்கூடாதேனுதான்ப்பா'' என்ரார். இதைக் கேட்ட கதிரேசன் ''அம்மா, ஏன்மா இப்படி உடைஞ்சி போற, நான் தான் சொல்லிட்டேன்ல, குடும்ப வாழ்க்கையிலே இருப்பேனுட்டு'' என்றான். ''அந்த பொண்ணு கிடைக்காட்டாலும்மா'' என்றார் செல்லாயி. கதிரேசன் அமைதியானான். ''சொல்லுப்பா'' என்றார் செல்லாயி. ''என்னம்மா சொல்ல சொல்ற? அந்த பொண்ணு இல்லாட்டாலும் தான்'' என்றான் கதிரேசன். வேதனையிலும் வேதனை வந்து சேர்ந்துவிடக் கூடாதென விவரமாகத்தான் சொன்னான் கதிரேசன். ஆனாலும் செல்லாயிக்கு நம்பிக்கையில்லை, மீண்டும் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டார்.

விடுமுறை கழிந்து கல்லூரிக்குச் செல்லும் தினம் வந்ததும் தனது அன்னையிடம் தைரியம் சொன்னான் கதிரேசன். ''நீதான்பா என் உலகம்'' என்றார் செல்லாயி. கதிரேசனின் கண்கள் கலங்கியது. ''உன் சந்தோசம்தான்மா என் சந்தோசம், இனிமே என்னோட நடவடிக்கையில கவனமா இருப்பேன்மா, நீ கவலைப்படாதேம்மா, என்னோட நல்லதுக்குத்தானே நீ எல்லாம் செய்வ, ஊர்க்காரங்க என்னை சாமியாராப் பார்த்தாக்கூட நீ சந்தோசப்படும்மா'' என கிளம்பும் முன்னர் ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பினான் கதிரேசன். ''ரொம்ப சந்தோசம்பா'' என்றார் செல்லாயி.

கல்லூரித் தொடங்கியது. நீலகண்டனின் வீட்டுப் பக்கம் செல்லும்போதெல்லாம் தன்னை அறியாமல் அங்கேயே சில நிமிடங்கள் நிற்பான் கதிரேசன். கண்களில் கண்ணீர் கொட்டும். ஆதரவில்லாமல் நின்றபோது ஆதரவு தந்தவர், அன்பு உறவுகளைத் தந்தவர். தன்னால் முடியாதபோதும் ஓரிடம் காட்டிச் சென்றவர். நீலகண்டன் தன்னிடம் கேட்ட 'சிவனை, தமிழை மறந்துட்டியோ' எனும் கேள்வி மனதைச் சுட்டுக் கொண்டே இருந்தது.

ஒருநாள் சிவன் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்தான் கதிரேசன். அன்றைய தினம் மாலையில் சிவநாதனும் ஆலயத்திற்கு வந்திருந்தார். கதிரேசன் சிவநாதன் வந்ததை கவனிக்கவில்லை. அதே ஆலயத்தில் வைஷ்ணவி தனது தோழிகளுடன் வந்து இருந்தாள். வழிபட்டு முடித்த மறுகணம் கதிரேசன் பாடினான்.

''மொழியில்லா உலகத்திலே நீயும் மொழியாய் இருந்தாய்
வழியில்லா பாதைதனிலே வழியாய் வந்தாய்
ஆதியும் அந்தமும் இல்லாதவன் நீயென என்றே
சேதியும் வந்ததென்ன சொல்சிவனே.''

இந்த பாடலைக் கேட்டவுடன் சிவநாதன் கதிரேசனை நோக்கி விரைந்தார். ''பாடாதேனு சொன்ன பிறகும் நீ பாடிக்கிட்டேதான் இருக்க'' என்றார் சிவநாதன். கதிரேசன் மெளனமாக நின்றான். ''இனிமே பாடாதே'' என்றார் சிவநாதன். ''சார் என்னைத் தப்பா நினைக்காதீங்க, நான் பாடறப்போ நீங்க கேட்காம இருக்க முடியுமா, இந்த கோவிலுனு இல்லை, ரொம்ப இடத்திலே பாடிக்கிட்டே இருக்கேன்'' என்றான் கதிரேசன். சிவநாதன் கதிரேசனை முறைத்துப் பார்த்தார். ''ம் பாடு'' எனச் சொல்லிவிட்டு சிவனை நோக்கி வணங்கினார். ஆனால் அவர் இன்று எதுவும் பாடவில்லை. வணங்கியவர் கதிரேசனை நோக்கி ''ம் பாடு'' என்றார்.

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே


இதையெல்லாம் வைஷ்ணவியும் தோழியரும் கவனித்தார்கள். பாடி முடித்த கதிரேசனிடம் ''இந்த பாட்டு எப்படி நல்லா இருக்கு, அதுமாதிரி நல்லா பாட்டு எழுது, அப்புறம் பாடு, அரைகுறையா தெரிஞ்சி வைச்சிக்கிட்டு அதுவும் சொல்சிவனேனு ஏன் பாடுற'' என சொல்லிவிட்டு நகர்ந்தார் சிவநாதன். கதிரேசன் கண்கள் கலங்கியபடி நின்றான்.

வைஷ்ணவியும் தோழியர்களும் கதிரேசனிடம் வந்தார்கள். ''அவர் சொல்றபடி ஏன் அரைகுறையா தெரிஞ்சி வைச்சிட்டுப் பாடுற, நிறைய கத்துக்கிட்டு பாடு'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் கண்கள் கலங்கியபடியே நின்று கொண்டிருந்தான். இரவாகியும் கோவிலிலேயே இருந்தான். கோவில் நடை சாத்தப்போகிறோம் என்றார் குருக்கள். கோவிலை விட்டு வெளியேறினான் கதிரேசன்.

கோவிலின் வாசலில் வைஷ்ணவி நின்று கொண்டிருந்தாள். ''இந்தா கோவில் பிரசாதம், ஏன் அப்படியே உட்கார்ந்துட்ட, உன்னை தொந்தரவு செய்ய வேணாம்னு அங்கே உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தேன், விடுதிக்கு போகுற நேரம் வேற ஆகுது. என் பிரெண்ட்ஸ்கிட்ட சொல்லி அனுப்பியிருக்கேன். பாட்டு சரியில்லைனு சொல்லிட்டோம்மா, அவர் சொன்னது சரிதான், நீ பேசாம சொல்பெருமாளேனு பாடு'' என்றாள் வைஷ்ணவி. ''பிரசாதம் வாங்கியவன், அதெல்லாம் இல்லை வைஷ்ணவி, எனக்கு அதைப்பத்தியெல்லாம் கவலை இல்லை'' என்றான் கதிரேசன். ''அப்ப சரி'' என வைஷ்ணவி விடைபெற்றுச் சென்றாள். கதிரேசன் 'சொல்பெருமாளே' என சொல்லிப் பார்த்தான். 'சொல்பெருமானே'' பொருத்தமா இருக்குமோ என எண்ணினான்.

(தொடரும்)