Sunday, 20 June 2010

நுனிப்புல் (பாகம் 2) 8


8. கேசவன் பூங்கோதை


வீட்டுக்குள் அனைவரும் வந்து அமர்ந்தனர். கேசவனின் தாய் மோகனா கேட்டார்.


‘’வீட்டுல அம்மா அப்பா இல்லையா’’ 


‘’கல்யாணம் முடிஞ்சதும் சோலையரசபுரம் போய்ட்டாங்க, என்ன விசயமுனு தெரியலை’’ 


அனைவருக்கும் பலகாரங்களும், இனிப்பும் எடுத்து வைத்து உபசரித்தான். அத்தை கமலாவை வரச் சொல்லுமாறு பழனியிடம் சொல்லி அனுப்பினான் வாசன். குளிர்பானங்கள் கேட்டவர்களுக்கு கடையில் வாங்கி வைத்திருந்த குளிர்பானங்கள் தந்தான். அத்தை கமலா வந்ததும் மற்றவர்களுக்கு காபி போட்டுக் கொடுத்தார்கள். பூங்கோதையின் தந்தை கோபாலிடம் வாசன் பேசினான்.


‘’நாளைக்கு திருமலைக்கு கிளம்பறீங்களா’’ 


‘’ஆமாம்பா, அங்க இரண்டு நாளு இவங்களை தங்க வைச்சிட்டு அனுப்பி வைக்கலாம்னு இருக்கோம், நீங்க கூட திருவில்லிபுத்தூருக்கு ஏதோ செடி விசயமா வரதா விநாயகம் சொன்னாரு, வந்தா எங்க வீட்டுல தாராளமா தங்கலாம்பா’’ 


‘’ஆமா அப்பா, பெரியவர் விருப்பப்பட்டா உங்க வீட்டில தங்கிக்கிறோம், மலைப்பகுதியெல்லாம் போகனும்’’ 


கேசவன் வாசனிடம் அவர்களுடன் வரச் சொன்னான். அதற்கு வாசன் ஏதோ சில விசயங்களை எல்லாம் சரி பண்ணனும் அதுக்காக புதன்கிழமை கிளம்பலாம்னு சொல்லி இருக்கார் பெரியவர் என்று சொன்னதும் சரி என கேசவன் சம்மதித்தான். பார்த்தசாரதியும் விஷ்ணுப்பிரியனும் பேசிக் கொண்டிருந்தார்கள். வாசன் அவர்களைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். கமலா வாசனிடம் தனியாய் அழைத்து கேட்டார்.


‘’அம்மா சேலை எதுவும் எடுத்து வைச்சிருக்காங்களா, இருந்தா கொடு தம்பி, பொண்ணுக்குத் தரனும்’’ 


‘’தெரியலை அத்தை, அப்படி எதுவும் கொடுக்கனுமா’’ 


‘’இருந்தா பாரு, இல்லைனா பரவாயில்லை’’ 


வாசன் தேடிப் பார்த்து ஒரு சேலையை கொண்டு வந்து தந்தான்.


சேலையுடன் வெற்றிலை பாக்கு எல்லாம் வைத்து கமலா பூங்கோதையிடம் தந்தார். பூங்கோதை அதனை வாங்கிக் கொண்டு கமலாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். பார்த்தசாரதி வாசனிடம் பேச வேண்டும் என அழைத்தார். நிலைமையை புரிந்து கொண்ட வாசன் பார்த்தசாரதியை பூஜையறைக்குள் அழைத்துச் சென்றான். விஷ்ணுப்பிரியனும் உடன் சென்றார். பார்த்தசாரதி பேசினார்.


‘’குழந்தை விசயத்தை வெளியில் சொல்லிட வேண்டாம்னு சொன்னேன், பூசாரி தாயாக நிற்கிறீயேனு சொல்றார், இதோ இப்படி துண்டு காகிதத்தில எழுதி வேற யார்கிட்டயோ கொடுத்து இருக்க’’ 


வாசன் அமைதியாய் எதுவும் பேசாமல் நின்றான். 


‘’இந்த கல்யாணம் எந்த பிரச்சினை இல்லாம நடந்துருச்சு, இனியும் பிரச்சினை இல்லாம இருக்கனும்னு நினைச்சா நீயே பிரச்சினை கொண்டு வந்துருவ போலிருக்கே வாசன்’’ 


வாசன் மீண்டும் அமைதியாகவே இருந்தான். விஷ்ணுப்பிரியன் குறுக்கிட்டார்.


‘’பதில் சொல்லுங்க வாசன்’’ 


வாசன் சற்றும் கூட யோசிக்காமல் விஷ்ணுப்பிரியன் சொன்ன விசயத்தை அப்படியே பார்த்தசாரதியிடம் சொன்னான். அதிர்ச்சி அடைந்தவர் தடுமாறினார்.


‘’விஷ்ணு, என்ன காரியம் பண்ணிட்ட’’ 


‘’பார்த்தா’’ 


‘’இனிமே இதுபற்றி என்கிட்ட எதுவும் பேசாத விஷ்ணு, இப்படி அநியாயமா என்னை ஏமாத்தி இப்படி அவசர கல்யாணம் பண்ண வைச்சிட்ட’’ 


வாசன் உடனடியாக சுதாரித்துக் கொண்டான்.


‘’நீங்க இப்படி பேசிக்கிட்டு இருந்தா பிரச்சினை பெரிசாயிரும், வாங்க வெளியில போவோம்’’ 


வாசன் தீபம் ஏற்றி தீபாராதனை காட்டினான். பார்த்தசாரதியின் உடல் நடுங்கியது. அவரது குரல் உடைந்தது.


‘’என்னை ஏமாத்திட்டல்ல, ஒரு நல்ல குடும்ப உறவு கிடைச்சதுனு விடறேன் ஆனா விஷ்ணு’’


வாசன் பார்த்தசாரதியினை சமாதனப்படுத்தினான். பார்த்தசாரதியின் முகம் வாடியது. கனவு ஒன்று நொறுங்கிப் போவதை ஏற்றுக் கொள்ளமுடியாமல் தவித்தார். வாசனது வீட்டிலிருந்து விரைவாக பார்த்தசாரதி வெளியேறினார். அனைவரும் அவரை பின் தொடர்ந்து வெளியேறினார்கள். விடைபெற்றுக் கொண்ட பார்த்தசாரதியால் ஜோதியிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. கேசவனது வீட்டினை அடைந்ததும் ஜோதியிடம் விபரம் சொன்னார். ஜோதி சந்தோசப்பட்டாள். அந்த சந்தோசத்தை சுபாவிடம் தெரிவித்தாள். சுபா விஷ்ணுப்பிரியனைத் தேடினாள். 


‘’அதெல்லாம் இல்லை, உடனே சோதனை செய்ய வேண்டும், கரு உள்ளேதான் இருக்கும் எப்படியும் இரண்டு வாரத்தில தெரிஞ்சிரும், விஷ்ணு விளையாடறார் நேத்துல இருந்தே ஒரு மாதிரிதான் இருந்தார், வரட்டும்...’’ 


அதைக்கேட்டுக்கொண்டே விஷ்ணுப்பிரியன் உள்ளே வந்தார்.


‘’சோதனை பயனளிக்காது, தேவையில்லை, நான் கருவை உருவாக்கவே இல்லை’’ 


சுபாவிற்கு பயங்கர கோபம் வந்தது. மனதை அடக்கிக் கொண்டவள் சுவரை நோக்கிய வண்ணம் நின்றாள். ஜோதி சுபாவினை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். பார்த்தசாரதி அங்கிருந்த மேசையில் தனது தலையை கவிழ்த்துக் கொண்டார். விஷ்ணுப்பிரியன் அடுத்த கட்ட திட்டமாக கேசவனுக்கும் பூங்கோதைக்கும் இந்த விசயம் சொல்வது என வாசன் குறுக்கிடும் முன்னர் அவசரமாக செயல்பட்டார். அவர்கள் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என கேசவனிடம் சொல்ல வேண்டும் என முடிவெடுத்தவர் கேசவனை உடனே சந்தித்தார். முழுவிபரங்களும் சொன்னார்.


‘’எதுக்கு இத்தனை சிரமம்’’ 


‘’முயற்சி பண்ணினது வழி கிடைக்கல, அதனால திருமண விசயத்தை நிறுத்த வேண்டாம்னு சொல்லாம விட்டுட்டேன்’’ கேசவன் சற்று அதிர்ச்சி அடைந்தான், வாசனிடம் பேச வேண்டும் என கிளம்பினான். விஷ்ணுப்பிரியன் தடுத்தார். 


‘’எதுக்கு இப்போ வீண் பிரச்சினை வாசனுக்கும் தெரியும், சொல்லிட்டேன் உங்களுக்கு திருமணம் ஆயிருச்சி புது வாழ்க்கை தொடங்குங்க நீங்களே குழந்தை பெத்துக்கோங்க’’ 


அப்பொழுது பூங்கோதை வந்தாள். விஷ்ணுப்பிரியன் விலகிச் சென்றார். பூங்கோதையிடம் கேசவன் நடந்ததை சொன்னான். கேசவன் மேல் மெதுவாக சாய்ந்தாள் பூங்கோதை.


‘’ம் இருந்துட்டுப் போகட்டும் என்னை உங்களைப் பிடிச்சிருக்கு தானே, உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நாம குழந்தைப் பெத்துக்கிரலாம்’’ 


‘’அப்படின்னா நீ அந்த குழந்தைய சுமக்காம போனதுக்கு வருத்தப்படலையா’’ 


‘’அந்த குழந்தையை சுமக்கனும்னு முழு மனசா இருந்து செஞ்சேன், உங்களை பார்க்கறவரைக்கும், கல்யாணம் கூட வேணாம்னுதான் சொன்னேன் ஆனா கல்யாணம் வரைக்கும் வரவைச்சி இப்ப இவர் இப்படி சொன்னா நாம பிரியனுமா’’ 


கேசவன் பூங்கோதையை கட்டிப்பிடித்துக் கொண்டான். அவர்களுக்காக அலங்கரிக்கப்பட்டு இருந்த அறையினுள் அந்த இனிய பொழுதினிலே நுழைந்தனர். இருவரும் மனம் விட்டு எதிர்கால வாழ்க்கையைப் பற்றி பேசினார்கள். கேசவன் பூங்கோதையின் மேல் உயிரை வைத்தான். பூங்கோதை கேசவன் மேல் தனது உயிரை வைத்தாள். அறையின் கதவு பூட்டிக்கொண்டது. 


அதே வேளையில் வாசன் விஷ்ணுப்பிரியனின் செயல்கள் குறித்தும், மாதவி வரைந்து தந்த படம் குறித்தும் தீவிர யோசனையில் இறங்கினான். கேசவனிடம் சொல்லிவிட வேண்டும் என எண்ணி இருந்தவனுக்கு சோலையரசபுரம் தர்மலிங்கத்திடம் இருந்து வந்த தொலைபேசியால் யாரிடமும் சொல்லாமல் வீட்டினைப் பூட்டிவிட்டு சோலையரசபுரத்திற்கு விரைவாக சென்றான். அங்கு அவனுக்காக சோதிட சாஸ்திரி நம்பெருமாள் காத்துக் கொண்டிருந்தார். 


(தொடரும்)

Friday, 18 June 2010

ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு - 6


கல்லூரியில் நாட்கள் இனிதே சென்றது. கட்சி ஆரம்பிப்பது குறித்து தீவிர சிந்தனையாகவே இருந்தான் ரகுராமன். கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்பதுதான் முதல் சிந்தனையாக இருந்தது. திராவிடர் எனும் அடையாளம் தேவையா எனும் எண்ணம் எழுந்தது. முதலில் இந்த திராவிடர் எனும் அடையாளத்தை அழித்தால்தான் ஆரியர் எனும் அடையாளமும் அழியும். பின்னர் தமிழர் எனும் அடையாளம் தேவையா என சிந்தித்தான். தமிழர் எனும் அடையாளத்தையும் ஒழித்து விடவேண்டும் எனும் எண்ணமும் அவன் மனதில் ஓடியது, இப்பொழுது இது ஒரு பிரச்சினையாகவே பேசப்படும், தமிழ் உணர்வு அற்றவன் என்றே பேச்சு எழும், ஆனால் காலப்போக்கில் இந்த விசயம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் மனதில் சிந்தித்து வைத்தான்.


அதற்கடுத்ததாக சாதியைப் பற்றி சிந்தித்தான். நான் கட்சி ஆரம்பித்தால் இன்னார் சாதி என கண்டிப்பாக‌ தெரிந்துவிடும். உடனே அந்த சாதிக்காரன் என பேசுவார்கள். இவன் நம்ம சாதிக்காரன் என நாலு பேர் உடன் வருவார்கள். நமது சாதி அடையாளத்தை எப்படி அழித்துக் கொள்வது. உண்மையிலேயே உதவி வேண்டுவோர்க்கு நாம் உதவி புரிய அவன் சாதிக்காரனுக்கு மட்டும் செய்றான் எனும் பேச்சு வருமே, அதை எப்படி தடுத்து ஒதுக்குவது. சாதிக்காரன் என எவரேனும் அணுகினால் அவர்களை அருகிலேயே ஒட்டவிடக்கூடாது என நினைத்தான். ஆனால் காலமெல்லாம் மனதில் ஊறிப்போன இந்த சாதிய எண்ணத்தை எப்படி தனிமனிதரின் எண்ணத்திலிருந்து நீக்குவது என மனதில் நினைத்தபோது சந்தானலட்சுமி என்ன சாதி என்பதே தனக்குத் தெரியாமல் இருப்பது கண்டு இந்த சாதி ஒழிப்பு ஒரு சத்திய சோதனைதான் என மனம் எண்ணமிட்டது. 


சாதியை முன்னிலைப்படுத்தக்கூடாது என்பதில் அதிக கவனம் வேண்டும் என நினைத்துக்கொண்டான். இதுவும் கால மாற்றங்களினால் சாத்தியமே. முதலில் பெயர் வைக்கும்போது இந்த சாதிப்பெயர் எதுவும் சேர்த்துக்கொள்ளாமல் ஒவ்வொருவரும் நமது எண்ணத்துக்குப் போராட முன்வர வேண்டும். முதலில் எனது கிராமத்தில் இருக்கும் சாதியப் பிரிவினைகளை ஒழித்துக்கட்ட வேண்டும். அனைத்து மக்களும் ஒன்று என்ற எண்ணத்தோடு தனித்தனி சாதியினராய் கூட்டமாக இல்லாமல் அனைவரும் கலந்திருக்க வேண்டும் எனத் திட்டமிட்டான். ஊரில் என்ன சொல்வார்கள் என நினைக்கும்போதே எப்போதும் தண்ணி அடித்துவிட்டு ரகளை பண்ணும் கோபிநாத் மனதில் தோன்றினார். எப்படியும் தொடங்கித்தான் ஆகவேண்டும், அதற்காக எதிர்ப்பு கண்டு அஞ்சுவதில்லை என முடிவெடுத்தான். 


கூட்டம் போட்டு பேசும்போது தலையாட்டிக் கேட்கும் மனிதர்கள் தனக்குத் தேவையில்லை என்பதில் உறுதியாக இருந்தான். ஒவ்வொரு மனிதரின் உணர்வுகளுடன் உரசுவது என்பதுதான் தான் செய்யப்போகும் செயல் என்பதில் கவனமாக இருந்தான். ஒவ்வொரு ஊருக்கும் தன்னைப்போல எண்ணம் உடையவர்கள் எப்படி கண்டுபிடிப்பது என்பதை எல்லாம் சிந்தித்துத் தெளிந்தான். கட்சியின் பெயரை மனதில் எழுதினான். 'மக்கள் ஒற்றுமை இயக்கம்'. எவரும் ம ஒ இ என சுருக்கக்கூடாது எனத் தெளிவு கொண்டான். 


தனது எண்ணத்தை சந்தானலட்சுமியிடம் சொன்னதும் அவளது மனம் படபடவென அடித்துக்கொண்டது. காலம் காலமா இருந்துட்டு வரதை மாத்துரது சாத்தியமில்லையே என மனம் நினைத்தது. முதலில் தன்னை, தனது வீட்டை மாத்துவது என்பது எத்தனை கடினமான காரியம் என எண்ணினாள். அதை வெளிப்படையாகவே சொன்னாள்.


''நான் சொன்னா நீ எதுவும் கோவிச்சிக்கமாட்டீயே' எனத் தொடங்கினாள். 'ஆனானப்பட்ட காந்தியையே குறை சொல்லும் கூட்டம், ஆனானப்பட்ட அம்பேத்காரையே குறை சொல்லும் கூட்டம், நீ நினைக்கறது எல்லாம் நடக்க சாத்தியம் சத்தியமா இல்லை, பேசாம என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டமா, ரெண்டு மூணுனு பெத்துப் போட்டமா, அதை வளர்த்தமா, அதுக பிள்ளைகள கொஞ்சினமானு போகாம எதுக்கு இந்த பொறுப்பில்லா சனத்துக்காக‌ உன் வாழ்க்கைய வீணடிக்கிற' என நிறுத்தினாள்.


''நீ இப்படி பொறுப்பில்லாம பேசுவனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, இந்த சாதி எல்லாம் பின்னால வந்தது, இந்த தமிழ் அடையாளம் எல்லாம் பின்னால வந்தது ஒரு மொழி பேசினா அது அவங்களுக்கு அடையாளமா, ஒரு நாடுனு இருந்தா அது அவகளுக்கு அடையாளமா, நிர்வாகம் பண்றத்துக்கு பிரிச்சி வைக்கலாம், ஆனா பிரிச்சி வைச்சதனாலேயே பிரிவினை பேசக்கூடாது'' என அவளது கையைப் பிடித்தான் ரகுராமன்.


''பொறுப்பு வேற, வாழ்க்கை நிலமை வேற, ஆகாயத்துல கோட்டை கட்டுறது கனவுக்கு சரி, ஆனா அஸ்திவாரம் இல்லாம பலூன்ல வேணும்னா கோட்டை மாதிரி செஞ்சி தொங்கவிடலாம், இப்பவும் சொல்றேன் இதெல்லாம் சாத்தியமே இல்லை, அதுக்கு மீறி நீ நடந்தா உன்னோட நானும் வரேன், இனி மறு கருத்து பேசலை, எப்படி செய்யலாம்னு யோசனை மட்டும் சொல்றேன்' என ரகுராமனின் கைகளை தனது கன்னங்களில் ஒற்றிக்கொண்டாள். 


கல்லூரியில் இவனது எண்ணத்தை கேள்விபட்ட வேறு எவரும் இவனுடன் சேர்ந்து கொள்ள தயாராக இல்லை. புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி அதுக்கு அடையாளம் தேடி, நீ சொல்றதை நடமுறைப்படுத்தி வரதுக்குள்ள நாங்க கிழடாயிருவோம், அதக்கப்பறம் எப்படி பணம் சேர்க்கறது, என்றார்கள்.


பணத்தை மட்டுமே குறிக்கோளாய் வாழும் உலகில் எதுவெல்லாம் சாத்தியப்படும் என எண்ணும்போது இந்த பணத்தாலும் சில விசயங்கள் சாத்தியப்படுவதில்லை என்பதை எப்படி மறுக்க முடியும்? 


(தொடரும்)

Thursday, 17 June 2010

இறைவன் இருக்கிறாரா? இது தேவையற்ற கேள்வி

இது ஒரு நண்பரின் ஆதங்கம்

கோவிலில் கூட்ட நெருச்சலில் மக்கள் பலியாகுகிறார்கள்.

தீ விபத்தில் சாகிறார்கள்.

சுனாமியில் தேவாலயத்தின் முன்னர் பலர் செத்து மடிகிறார்கள்.

மசூதிகளில் வெடிகுண்டு வெடிப்பில் பலர் உடல் சிதறி சாகிறார்கள்.

இவை எல்லாம் ஏன் நடக்குது, கடவுளுக்கு கண் இல்லையா? உணர்ச்சிகள் இல்லையா?

எனது விளக்கம்:

கடவுள் எங்குமே இல்லை என்றாலும் இதே நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும் என்பதை ஏன் எவரும் புரிந்து கொள்வதில்லை.

மனிதர்களின் விருப்பத்திற்கேற்ப அவரவர் துன்பமோ இன்பமோ அடைகிறார்கள் என்பதுதான் உலகநியதி.

கோவிலோ, மசூதியோ, தேவலாயமோ அங்கு கொடிய நிகழ்வுகள் நிகழ்வதால் இறைவன் இல்லை என்றாகிவிடுமா? பாவம் இறைவன், எதற்கெல்லாம் பழி சுமக்க வேண்டியிருக்கிறது.

இறைவன் எங்குமே இல்லை. இப்பொழுது மனிதர்கள் என்ன செய்வார்களாம்?

எது பாவம், எது பாவமில்லாதது என்பதற்கான வரையறை எதுவும் உள்ளதா?

கடவுள் இல்லவே இல்லை என்பதில் கூட கடவுள் சுகமாகத்தான் இருக்கிறார்.

மற்றொரு நண்பரின் ஆதங்கம்:

மற்றவர்களை ஏமாற்றுவது, நம்பிக்கை துரோகம் செய்வது, மற்றவர்களுக்கு கேடு விளைவிக்கும் வண்ணம் பொய்யுரைப்பது, என்பது எல்லாமே பாவது தான்... அவர்கள் அவர்கள் செய்த பாவத்துக்கு ஏற்ப தண்டனை வழங்கப்படும்... அது போன ஜென்மத்தில் செய்திருந்தாலும் சரி அதற்கான தண்டனை வழங்கப்படுகிறது... இதில் ஏதும் சந்தேகம் உண்டா??

எனது விளக்கம்: 

அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. இதெல்லாம் மனிதர்களை பயமுறுத்த சொல்லப்பட்டவை.

இவர்களைப் போன்றவர்களுக்கு தண்டனை நிச்சயம் வழங்கப்படும் எனில் எதற்கு சட்டம் எல்லாம்? அதுவும் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபட்ட சட்டம் என.

மனிதர்களின் வாழ்க்கைமுறையில் எதுவுமே பாவமில்லை என்கிற கோட்பாடும் உண்டு.

இந்த ஜென்மத்து விசயங்களே ஞாபகத்துக்கு இல்லை, இதில் சென்ற ஜென்மம் வேறா?

தண்டனை என்பது தவறு என வெளியில் அறியப்பட்டால்தான். அதுவும் தண்டனை பெறாமலே தப்பிக்கவும் இவ்வுலகில் மானிடர் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

அதே நண்பரின் ஆதங்கம்:

இந்த மனிதப்பிறவி என்பது இந்த ஒரு ஜன்மத்துடன் முடிவடைவது கிடையாது... நாம் போன ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்கள் நமக்கு அடுத்த ஜென்மங்களில் கணக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது...

இந்த உடலுக்கு மட்டுமே மரணம்.. இந்த ஆத்மாவுக்கு கிடையாது... உடலானது குழந்தை பருவத்திலிருந்து, வயோதிகப்பருவத்துக்கு சென்று பின் மரணமடைந்த பின் நம் ஆத்மா வேறொரு உடலுக்கு நம் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப செல்கிறது.. அது மனித உடலாகத் தான் இருக்க வேண்டும் என்பதும் இல்லை.. அதனால் சிறு குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் போன பிறவியில் செய்த பாவத்தை அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாயம்... இது கொஞ்சம் மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் இதுவே நிதர்சன உண்மை 

சாதாரண மனிதர்கள் சொன்னால் அதை நம்பும் நாம் கடவுளே சொல்லும் விஷயத்தை நம்பாததில் இருந்தே இந்த கலி எவ்வளவு முத்தி விட்டது என்று தெரிகிறது.

என்னை பொறுத்த வரை கடவுள் இருக்கிறார்.  பிரகலாதன் சொன்னதைப் போல் தூணிலும் இருக்கறார், துரும்பிலும் இருக்கிறார். இதை நீங்களே நிச்சயம் உணருவீர்கள் விரைவில். அவர் நிச்சயம் அனைவரையும் காப்பார். வேண்டிய நேரத்தில் தண்டனைகளும் வழங்கப்படும். என் கருத்துக்களில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையும் உள்ளது.

எனது விளக்கம்:

இதுபோன்ற வாசகங்கள் மனிதர்களின் சிந்திக்கும் தன்மையை சிதறடித்துவிடுகின்றன.

ஒவ்வொரு விசயத்தையும் அருகில் இருந்து பார்த்தது போல் எழுதப்படும்போது அதனை எளிதாக நம்பிவிடக்கூடிய மனநிலையில்தான் மனிதர்களில் பலர் இருக்கிறார்கள். உண்மையிலேயே என்ன நடக்கிறது என உங்களுக்கும் தெரியாது (உங்களுக்குத் தெரியும் என சொன்னாலும் நான் நம்பப் போவதில்லை, நம்பிக்கைகளை நான் அத்தனை எளிதாக நம்புவதில்லை) எனக்கும் தெரியாது.

நீங்கள் எழுதியதை எல்லாம் மறுத்துத்தான் ஆகவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் எனக்கு எதுவுமில்லை. இப்படியெல்லாம் இல்லை என நீங்கள் எழுதியதை சிந்தித்தால் கூட ஒரு பதில் இருக்கத்தான் செய்யும்.

எனக்கு மேலே சொன்னது நம்பிக்கை என்று இல்லை. அதுதான் நான் அறிந்த தத்துவம். எனது அறிவுக்கு உட்பட்ட மொழி.

கடவுள் தன்னைப் பற்றி ஒருபோதும் விளம்பரம் செய்ய சொன்னதில்லை. அவர் தம்மை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என மன்றாடுவதும் இல்லை.

கடவுளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாதவரை பற்றி கடவுள் கவலை கொள்வதும் இல்லை.

எல்லாம் இந்த மனிதர்களின் செயல்பாடு.

கடவுள் இதுவரை எதுவுமே சொன்னதில்லை. எல்லாம் மனிதர்கள் கடவுள் சொன்னதாய் சொன்னது.

கலி முத்திவிட்டதா? அறிவியல் வளர்ச்சி அடைந்துவிட்டதா?

உண்மையான கடவுள் என சொல்லும்போது பொய்யான கடவுளும் இருக்கிறதா என சிலர் எண்ணக்கூடும்.

பிறருக்கு பிரயோசனப்படாமல் போகக்கூடும், ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருப்பார்கள் என நினைத்திருந்தால் இன்று பைபிளும் இல்லை, திருக்குரானும் இல்லை, பகவத் கீதையும் இல்லை.

கடவுளை நான் உணர வேண்டுமா? எதற்கு?

அடிப்படை நம்பிக்கையா? அப்படியெனில் அது என்னது?

அவர் காப்பாற்றவிட்டால் அவர் இல்லை என்றாகிவிடுமா? ஏனிப்படி கடவுளை கலங்கப்படுத்துகிறீர்கள்.

உலகில் எத்தனை கோடி மனிதர்கள், எத்தனை கோடி உயிரினங்கள் தெரியுமா?

அசைக்கமுடியாத நம்பிக்கை இருப்பதால் மட்டுமே ஒரு விசயம் உண்மையாகி விடமுடியாது.

இன்னொரு நண்பர்:

உலகில் நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதாக ஒத்துக்கொள்கிறீர்களா? இல்லையா?

எனது  விளக்கம் 


நமக்கு உட்பட்ட சக்திதான் இவ்வுலகில் இருக்கிறது. திறமையுடையவர்கள் சக்திகளை தமது ஆளுகைக்குட்படுத்திக் கொள்கிறார்கள். திறமையில்லாதவர்கள் நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு என ஆகாயம் பார்த்து சொல்கிறார்கள்.

அதே நண்பர்:


நமக்குட்பட்ட சக்தி தான் இங்கே இருக்கின்றது. தங்களின் அறிவியல் கணக்கீட்டின்படி மனித இனம் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஏன் மனிதனால் கர்ப்ப காலத்தை குறைவாக்க முடியவில்லை. குறைந்தது 8 முதல் 9 மாதங்கள் ஏன் தேவைப்படுகின்றது?. 10 நாள் அல்லது 15 நாளில் ஒரு பரிபூரணத்தன்மையுடைய குழந்தையை உருவாக்க முடியுமா? இது நமது சக்திகுட்பட்டது தானே. விஞ்ஞானிகள் நினைத்தால் முடிக்கலாம் என்ற பதிலே வரும். அப்போ, அந்த விஞ்ஞானியின் அறிவு எப்படி விசாலமடைந்து இத்தகைய கண்டுபிடிப்புக்களைச்செய்கின்றது.

எனது  விளக்கம் 


எங்களை என்ன, வித்தைகாட்டும் மனிதர்கள் என நினைத்துவிட்டீர்களா?

அதைச் செய்யுங்க, இதைச் செய்யுங்க என்கிறீர்கள்.

இருக்கும் மக்கள் தொகை போதாதா? என்ன ஒரு வில்லங்கமான சிந்தனை.

நமது ஆளுமைக்குட்பட்டு இருக்கும் சக்தியை தங்களது திறமைக்குட்படுத்தி சாதிக்கவல்லகூடிய ஆற்றல் மனிதர்களுக்கு உண்டு. அதில் மாற்றம் ஏதுமில்லை.

எல்லாவற்றையும் இறைவன் படைத்தார் என, படைப்புகள் இல்லாத‌ கிரகங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது, இறைவனை கொச்சைப்படுத்த வேண்டாம்.

தேவை ஏற்படும்போது அதற்கான தேடல்கள் மனிதர்களிடம் இருந்து கொண்டேதான் இருக்கும். நமக்கு சக்திக்குட்பட்ட விசயங்களை வசியப்ப‌டுத்தும் திறமை வேண்டும் என்பதுதான் எனது கோட்பாடு. அந்த திறமை இல்லை என்பதற்காக நமக்கு மீறிய சக்தி என்பதில் உடன்பாடில்லை.


இதோ மற்றொரு நண்பர்


என்னைப்பொறுத்தவரை எல்லோருக்கும் கடவுள் பயம் காட்டாயம் இருக்க வேண்டும். யாம் அறியா சக்தி இருக்கிறது எனும் நம்பிக்கையே இன்று ம்னிதர்கள் இன்னும் முழுமைப்படுத்தப்பட்ட காட்டுமிராண்டிகளாகாது சற்று மனித நேயத்தோடு வாழ வழி செய்கிறது.

நம்மை மீறி எதுவ்மே இல்லை என எண்னுவோமானால் யாரும் யாருக்க்கும் பயப்படாது கட்டுபடாது வாழ வழி செய்வோம். அங்கே அக்கிரமமும் அநீதியும் மிகுதியாகும். கொள்ளைகளும் கொலைகளும் அதிகரிக்கும். இதோ கடவுள் இல்லை என சொல்ல்லிசொல்லியே ஒருத்தரையொருத்தர் விரோதிகளாக பாவித்து இன்னும் இன்னும் உலகத்தை இரத்தகட்டுக்குள்ளே கொண்டு செல்வோமென்பதே நிஜம்.

தம்மை மீறிய் சக்தி இருக்கும் எனும்நம்பிககை எல்லோருக்கும் வேண்டும்.தாம் செய்யும் தப்புக்கு தண்டனை கிடைக்கும் எனும் பயம் இருக்கணும். கடவுள் இல்லை என்போமானால் நாம் யாருக்கும் பயப்படோம்.. .

எனது விளக்கம்.

கடவுள் பயம் அவசியமற்றது.

ஒழுக்கம் என்பதன் அவசியம் ஒவ்வொருவரும் தெரிந்து இருந்தால் அது போதுமானது.

தவறு செய்தால் தண்டனை எனும் நம்பிக்கை ஒருவரை தவறு செய்வதில் இருந்து ஒன்றும் நிறுத்திவிடாது.

தவறு செய்யக்கூடாது எனும் தனிமனித கட்டுப்பாடு ஒன்றுதான் தவறுதனிலிருந்து எவரையும் காப்பாற்றும்.

மனித நேயத்தோடு வாழ்வதற்கு கடவுள் அவசியம் இல்லை. மனிதர்களின் நல்லெண்ணம் போதுமானது.

தனிமனித ஒழுக்கம் பயத்தால் வரக்கூடாது.

இறைவனே இல்லை என சொல்வோரிலும் நல்லவர் உண்டு; இறைவன் உண்டு என சொல்வோரில் தீயவரும் உண்டு.

இதற்காகத்தான் சொல்கிறேன் இறைவன் அவசியமில்லை. இறைவன் பற்றிய பயம் அவசியமில்லை.

இறைவன் பற்றிய பயம் இருப்பின் நாட்டில் சட்டங்கள் எதற்கு? வீட்டை பூட்டி வைப்பதற்கு எதற்கு?

இப்படித்தான் தனிமனித ஒழுக்கத்தை கற்பிக்காமல் இறைவனை முன்னிறுத்தி செய்ததால் இறைவன் மீதான குற்றச்சாட்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை மறுப்பதற்கில்லை.

ஆனால் இறைவன் குற்றமற்றவர்.

************************************************************************************

இப்படி இறைவன் பற்றிய வாதங்களும் பிரதிவாதங்களும் ஒரு முடிவில்லாதவைகளே. இறைவன் பற்றி அறிந்தவர் இறைவன் பற்றி பேசமாட்டார். இறைவன் விளம்பரமில்லாதவர். இறைவன் விளக்கம் அற்றவர். இறைவனை மறுத்து பேசுபவர்கள் இறைவனை பற்றி பேசுபவர்கள் எல்லாம் விளம்பர பிரியர்கள் தான்.