Thursday, 12 February 2009

தலைவிதி தலைமதி - 4 பிரார்த்தனை நோய் தீர்க்குமா?

பிரார்த்தனையினால் நோயினால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என கண்டறிய ரேண்டோல்ப் பைர்ட் எனும் இருதயப்பிரிவு மருத்துவர் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டார். 393 இருதய நோயாளிகளை அவர்களின் அனுமதியுடன் சான்பிரான்ஸிஸ்கோ மருத்துவமனையில் உள்ள இருதயப்பிரிவில் ஆகஸ்ட் 1982லிருந்து மே 1983 வரை அனுமதித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.

ஆராய்ச்சியில் பல விதம் உண்டு. தரப்படும் மருந்து,

அ) கொடுப்பவருக்கும், சாப்பிடுபவருக்கும் தெரியும்.

ஆ) இருவரில் ஒருவருக்கு மட்டுமே தெரியும்

இ) எவருக்குமே தெரியாது (இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத ஒருவருக்கு மட்டுமேத் தெரியும்)

மேலும் தோராயமாக நோயாளிகளைப் பிரிப்பது. அதாவது நோயின் சீற்றம் அறிந்து பிரிக்காமல் தோராயமாக பிரித்து ஆராய்ச்சி மேற்கொள்வது.

பைர்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தோராயாக நோயாளிகளைப் பிரித்து, பிரார்த்தனைக்கு உட்படுத்தப்பட்ட பிரிவு (192 நோயாளிகள்), பிரார்த்தனைக்கு உட்படுத்தாத பிரிவு (201 நோயாளிகள்) என பிரிக்கப்பட்டு அந்த மருத்துவமனையில் இருக்கும் எவருக்கும். பைர்ட்டுக்கும் கூட யார் யார் எந்த பிரிவென தெரியாது. பிரார்த்தனைக்கு உட்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள நோயாளி ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவத்தில் தன்னை அர்பணித்துக்கொண்ட மூன்றிலிருந்து ஏழு நபர்கள் மருத்துவமனை வெளியில் தினமும் கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்வது என நியமிக்கப்பட்டார்கள். பைர்ட் தனது ஆராய்ச்சி முடிவினை ஐந்து ஆண்டுகள் பின்னர் 1988-ல் வெளியிட்டார். அந்த ஆராய்ச்சி முடிவு பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அப்படி பைர்ட் என்னதான் முடிவினை வெளியிட்டார் என்றால் பிரார்த்தனைகளினால் நோய் தீர்வதில் முன்னேற்றம் இருக்கிறது என்று கூறினார். உடனே இது குறித்து விமர்சனம் எழுதினார் போஸ்னர் எனும் ஆராய்ச்சியாளர். கடவுள் இருதயப்பிரிவு பகுதியில் இருக்கிறாரா? எனும் தலைப்பிட்டார். பைர்ட் செய்த ஆராய்ச்சியில் பிழை இருக்கிறது என்றார். மேலும் பைர்ட் குறிப்பிட்டதையே ஆதாரமாக காட்டினார்.

பைர்ட் சொன்னது இது

'இரு பிரிவிலும் உள்ள நோயாளிகளுக்கும் பலர் பிரார்த்தனை செய்து இருப்பார்கள், அதனை கட்டுபடுத்த இயலாது மேலும் அவர்கள் இந்த ஆராய்ச்சிக்கு சம்பந்தமில்லாதவர்கள் எனவே இந்த இரு பிரிவையும் சுத்தமான பிரிவுகளாக கணக்கில் கொள்ள முடியாது'

இதை எடுத்துக்காட்டினார் போஸ்னர். மேலும் பைர்ட் இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட எடுத்துக்கொண்ட காலகட்டம் ஆராய்ச்சிக்குப் பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள். பல மருத்துவ இதழ்கள் வெளியிட மறுத்து இருக்கக்கூடும், அதன் பின்னரே பைபிள் கூட்டம் அதிகமுள்ள பகுதிக்கு சொந்தமான இதழ் வெளியிட சம்மதித்துள்ளது என்பதை பைர்ட் மூலமாகவே நிரூபித்தார். இது போன்ற ஆராய்ச்சி வெளியீடு வருவதில் தவறில்லை, ஆனால் தவறான நோக்கம் கற்பிக்கப்படுகிறது என மிகவும் வன்மையாகவே கண்டித்தார். பைர்ட் முடிவுகளை விமர்சித்து பைர்ட் ஆராய்ச்சி அடிப்படையற்றது என்றும் கூறினார். பைர்ட் ஆராய்ச்சி முடிவுகளை பார்த்தபோது அப்படித்தான் இருந்தது. பைர்ட் தான் வெளியிட்ட கட்டுரைக்கு குறிப்பிட்ட தகவல் ஆராய்ச்சிகள் எல்லாம் பிழை என்றும் போஸ்னர் நிரூபித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டீபென் பேரட் என்பவர் சற்று ஒருபடி மேலே போய் 'நம்பிக்கை அடிப்படையில் நோய் தீர்வு பற்றி சில எண்ணங்கள்' என ஒரு கட்டுரை எழுதினார். அதில் பிரார்த்தனைகள் பற்றியும் சற்று குறிப்பிட்டுள்ளார், அதில் பைர்ட் ஆராய்ச்சியும் அடக்கம்!

தலைவிதி தலைமதி - 3

ஈர்ப்பு விசையும் மனவிசையும்:

எல்லா கோள்களும் அதன் பாதையில் ஒழுங்காகப் போய்க்கொண்டிருக்கக்கூடிய காரணம் ஈர்ப்பு விசையும் அதனுடன் கூடிய இயக்க விசையும். எப்பொழுது ஈர்ப்புவிசையை சமநிலைப்படுத்தும் இயக்க விசை இல்லாமல் போகிறதோ அப்பொழுது கோள்கள் தடம் மாறிப் போகும். இதனை பல விண்கற்கள் இடம் மாறுவதன் மூலம் அறியலாம். சிறு துகள்களும் இந்த 'விதி'க்கு உட்படுகிறது.

இன்னதுதான் நடக்கும் என ஒரு விசயத்தை இருக்கும் பொருள் கொண்டே ஒருவர் கணித்துச் சொல்ல முடியும், இல்லாத ஒன்றை வைத்து கணித்துச் சொல்ல முடியாது. இதனால்தான் இது நடக்கும் எனும் விசயங்களுக்கு இரண்டில் ஒன்றுதான் நடக்க வாய்ப்பு உள்ளது. ஒன்று நடக்கும், மற்றொன்று நடக்காது. நடந்தால் அட நடந்துவிட்டதே என சொல்லலாம், நடக்கவில்லையெனில் நம்ம கையிலா இருக்கிறது என சொல்லலாம்.

அறிவியல் கொள்கைகள் என்பது ஒன்றும் விளக்கத்தின் எல்லைக்கோடு அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். எல்லாம் நம்மைப் போன்ற மனிதர்கள் சிந்தனை செய்ததின் பொருட்டு வந்த விசயங்கள் அவை. இப்படி இருந்து இருக்கலாம் என சொல்ல முடியுமே தவிர பல விசயங்களை அறிவியல் நிரூபிக்க முடியாது, அப்படி கடந்த கால விசயத்தை நிரூபிக்கும் பொருட்டு நிகழ்கால நிலையில் இருந்து பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்க்கும் பார்வை இன்றைய நிலைக்கு சரியென வருமே தவிர என்றைக்குமே அது சரியென வராது.

நமது மூளையில் சில விசயங்கள் திணிக்கப்பட்டு விடுகின்றன, நம்மை நாம் அறியாமல் சில விசயங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்கிறோம், அவர் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலைதான் அறிவியல் கொள்கைகளின் நிலை.

ஆன்மிகவாதிகள் இயற்கை என ஒதுக்கப்படும் விசயங்களை இறை என சொல்லவில்லை என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். எல்லாமே இறை என்பதுதான் அவர்களது கோட்பாடு. அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பதுதான் அசைக்கமுடியாத கோட்பாடு, அப்படித்தான் ஆன்மிகம் அறிவியலை சர்வ சாதாரணமாக வெற்றி கொண்டுவிடுகிறது. அந்த வகையில் பார்த்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் கூட ஆன்மிகத்துக்கு உட்பட்டவையே என்பதுதான் முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டிய விசயம்.

துகள்களாகவும் தூசியாகவும் இருந்துதான் மனிதனாக வந்து இருக்கிறோம் என்கிறது அறிவியல்! இதே பெரிய அற்புதம்தான். நம்பிக்கை கொண்டு இருப்பவர்களுக்கு மகான்களாய் மனிதர்கள் அற்புதங்கள் செய்ததாக கருத வாய்ப்புண்டு, நம்பிக்கை அற்றவர்களுக்கு அப்படி என்ன அற்புதங்கள் செய்து விட்டதாக நினைக்கிறீர்கள் என கேட்க வழியுண்டு. சகல ஜீவராசிகளிலும் அன்பு கொண்டு இருங்கள் என ஒருவர் சொல்ல அப்பொழுது உங்களுக்கு ஒரு ஈடுபாடு வருகிறது. இப்படியும் நடக்கும் அப்படியும் நடக்கும் எனும் செயல்பாடுகளில் இப்படியே நடக்கிறது என வரும்பொழுது மனம் அதில் லயிக்கிறது. அப்படியே நடக்கும் என ஒரு முறை வந்தாலும் மனம் சஞ்சலம் அடைகிறது.

என்னைப் பொருத்தவரை ஒவ்வொரு மனிதரும் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பொருட்டே பல விசயங்களை உற்று நோக்க மறந்துவிடுகிறார்கள் அதில் நானும் அடக்கம். நம்பிக்கை என வரும்போது பல விசயங்கள் மறைந்து கொள்கின்றன, ஏற்றுக்கொள்ளப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகின்றன. மேலும் மகான்கள் அற்புதம் செய்ததாக எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இல்லை, இது எல்லாம் தவறுதலாக கற்பிக்கப்பட்ட விசயம்.

ஒரு விசயத்தில் ஈடுபாடு கொள்ளும் மக்கள் அதனை தங்களால் தனிப்பட்ட முறையில் செய்யாமல் போகமுடியாத போது, ஒருவரை தலைமையாக ஏற்றுக்கொண்டு அவரைப் போற்றுதல் எனும் முறைதான் இருந்ததே தவிர தனிப்பட்ட முறையில் பெரும் மாற்றம் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதை நீங்கள் கண்கூடாக காணலாம். எனவே மகான்களால் பெரும் அளவில் பூமியில் மாற்றம் நிகழ்ந்ததாக எனக்கு ஒன்றும் இதுவரைக்கும் தெரியவில்லை.

நம்பிக்கையாளர்கள் என்னை மன்னிக்கவும்! தெரிந்து கொண்டதாய் எண்ணும்போதே அறியாமை முன்னின்று வந்துவிடுவதை அத்தனை எளிதாக தவிர்க்க இயலவில்லைதான்!

Wednesday, 11 February 2009

தலைவிதி - 2

கவனக்குறைவு:

ஒருவிசயம் நடந்துவிட்டது. அது நமக்கு எதிராகப் போய்விட்டது என வைத்துக்கொள்வோம். நம்மை ஏளனமாகப் பேசுபவர்கள் உண்டு, நம்மைத் தட்டிக்கொடுக்கும் மனிதர்களும் உண்டு. இப்படி எதிராக ஏன் ஒரு விசயம் போகவேண்டும் எனப் பார்த்தால் அதற்கெல்லாம் காரணம் கற்பிப்பது ஒரு கண்மூடிய விளையாட்டாகத்தான் இருக்கும். இது போன்ற செயல்களை பார்த்து பார்த்து சலித்துப் போன மானுடம் விதி வலியது என்று கூறிவிட்டுப் போகும், பாவம் என பரிதாபமாய் எளக்காரப் பார்வை பார்த்துவிட்டுப் போகும்.

அடிப்படை காரணம் கவனக்குறைவு. இந்த நேரத்தில் ஏன் நடக்க வேண்டும் என கேட்டால் அது அப்படித்தான் நடக்கும். அப்படித்தான் நடக்கும் எனும் அந்த சமயத்தில் சமயோசிதமாக செயல்படுவதுதான் ஒரு சாதாரண மனிதரை சாதனை மனிதராக மாற்றும்.

மனம் புண்படும்படி பேசும் மானுடம் வாழும் உலகில் எண்ணங்கள் உருக்குலைந்து போகும். புத்தரின் எனது அனுமதியின்றி என்னை யாரும் நிந்திக்கமுடியாது எனும் கொள்கையை உறுதியாக பற்றிக்கொண்டால் வாழ்வில் பல சாதிக்கலாம்.

என்னதான் வியாக்கியானம் பேசினாலும் போனது போனதுதான், அதைப்பற்றி சிந்தித்து பயனில்லை எனும் பக்குவம் வருவது அத்தனை எளிதல்ல. நாம் அடுத்தவரைப் பார்க்கும் பரிதாபப் பார்வையில் அவர்களுக்கு இருக்கும் சிறிது தன்னம்பிக்கையையும் தகர்த்தெறிகிறோம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

மகாகவி பாரதியாரின் ஒரு அழகிய கவிதை இது

சென்றதினி மீளாது மூடரே! நீவீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

இந்த புனித உலகில் நம்மை நாமே அழித்துக்கொள்வதுதான் பெரிய கொடுமையான செயல். கோப்மேயரின் எண்ணங்களை மேம்படுத்துவோம் எனும் புத்தகமும், விவேகாநந்தரின் என்ன நீ நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் எனும் அழகிய தத்துவமும் அறிவியல் உலகை ஆட்டி வைக்கும். மனரீதியாக பலவிசயங்களை யாராலும் புரிந்து விளங்கிக்கொள்ள முடியாத பட்சத்தில் அறிவியல் சற்று விலகி நின்று அசைபோடும், அப்படிப்பட்ட அந்த புரிந்துகொள்ள முடியாத விசயத்துக்கெல்லாம் வடிகால் தான் ஆன்மிகம். நமக்குத் தேவை நிம்மதி, எது எப்படி இருந்தால் என்ன?

நலிந்தோர்க்கு நாளும் கோளும் இல்லை என்பதை எழுதியவர் யார்? எனக்குத் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட மனிதனின் சிந்தனை எப்பொழுது மொத்த சமூகத்தை ஆட்டிப்படைக்கிறதோ, ஒரு தனிப்பட்ட மனிதனின் செயல்பாடு எப்பொழுது மொத்த சமூகத்தையும் தன் வசப்படுத்துகிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டியதுதான் அந்த சிந்தனை, செயல்பாடு எத்தனை வலிமையானது என. மொத்த சமூகம் என நான் குறிப்பிடும்பொழுதே நாம் குறித்துக்கொள்ள வேண்டியது, அந்த சமூகத்தில் இதே சிந்தனை செயல்பாட்டினை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உளர் என.

சிரமம் என்பது இவருக்குத்தான் வரும், இவருக்குத்தான் வரக்கூடாது என கட்டம் பார்த்து வருவதில்லை, அதைத்தான் நன்றும் தீதும் பிறர்தர வாரா என நறுக்கெனச் சொல்லியிருக்கிறார்கள். எந்த ஒரு எண்ணமும் நடுநிலையில் நின்று விவாதிக்கப்படுவது இல்லை, சொல்லப்பட்ட விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றுக்கும் முரண்பாடானவைகள் என்பதை வைத்தே நாம் ஒரு தெளிவற்ற சமுதாயம் என நம்மை கருத வாய்ப்புண்டு.

ஒரு தெளிவான சமுதாயமாக இருந்து இருந்தால் சூரியனை வணங்கியதோடு காற்று, நெருப்பு, நிலம், நீர் என வணங்கி அத்துடன் நிறுத்தியிருக்க வேண்டும், அதைவிட்டுவிட்டு 'விண்டவர் கண்டில்லை கண்டவர் விண்டில்லை' எனச் சொன்னால் அது சரிதான் என போக வேண்டியதுதான்.

நான் மகிழ்ச்சியாக இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் எனச் சொன்னால் அது சரிதான் என சிரித்துக்கொள்வேனேத் தவிர அது குறித்து ஆராயப்போவது இல்லை. நமது மனதில் ஒருவித திட்டம் வகுத்து வைத்துக்கொள்கிறோம். இது மரபியல் வாயிலாகவோ, சுற்றுப்புற காரணிகளாகவோ நம்மிடம் ஒரு வட்டம் வரைந்து கொள்ளப்பட்டு விடுகிறது.

அந்த வட்டத்திற்கு உள்ளே வருபவர்கள் வேண்டியவர்கள், வட்டத்திற்கு வெளியே இருப்பவர்கள் வேண்டாதவர்கள். 'சே உன்னைப் போய் இப்படி நினைச்சேனே' என நீங்கள் ஒருவரிடமும் சொல்லாமல் இருந்து இருப்பீர்களானேயானால் நீங்கள் செய்த பாக்கியம், உங்கள் வட்டம் மிகப்பெரியது அதில் அனைத்து கட்டங்களும் அடங்கும்.

உள்ளுணர்வு :

இது ஒரு மெய்யில் கலங்கிய பொய்மையான உணர்வு. என்னைப் பொறுத்தவரை இது இல்லையெனில் அது. அவ்வளவே. நான் நினைச்சிட்டே இருந்தேன் நீங்க வந்துட்டீங்க, அப்படியெனில் நினைத்தபோதெல்லாம் அவர் வந்தாரா? அவர் வந்த சமயத்தில் எல்லாம் நீங்கள் நினைத்ததுண்டா? நமது மூளை ஒரு விநாடியில் எண்ணற்ற செயல்பாடுகளை பரிசீலிக்கும். மூளையை பற்றி பலர் ஆராய்ச்சி செய்து எழுதிய கருத்துக்களில் கூட வாசிக்கும் பலருக்கு உடன்பாடில்லை. ஒவ்வொருவரின் எண்ண ஓட்டம் வேறு, இந்த கோணத்தில் சிந்தித்துப் பார், எனது நிலையில் நின்று பார் என்பதெல்லாம் இதன் அடிப்படையே.

யாராவது நம்மை கவனிக்கிறார்கள் என நினைக்கும்போதே நாம் நமது எண்ணத்திற்கு விரோதமாக செயல்படுகிறோம் என நினைக்க வேண்டி இருக்கும். உங்களுக்குத் தெரியாத ஒருவர் உங்களை கவனிக்கிறார் என உங்கள் உள்ளுணர்வு சொல்லுமா? அமெரிக்காவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மனிதர் என்னை கவனிக்கிறார் என உள்ளுணர்வு சொல்லப் போகிறதா? இது எல்லாம் மூளையின் சுட்டித்தனம்.

அடடா நான் நினைச்ச மாதிரி நடந்துருச்சே என்பதெல்லாம் மூளையின் இல்லாத ஒன்றை இருப்பதாய் படம் காட்டும் வேலை. அறிவியல் அப்படித்தான் சொல்கிறது. ஆன்மிகம் அமைதியாய் இரு என்கிறது.

பின் குறிப்பு:இதை செய்ய வேண்டாம் என நினைத்துக்கொண்டே இருந்தேன், ஆனால் அதை செய்துவிட்டேன். இதுதான் விதியோ? என நினைப்போர்களே, உங்களிடம் கட்டுப்பாடு இல்லை என்பதை கடவுள் வந்தா சொல்லித் தெரிய வேண்டும்.